

உலோகங்கள் மனித வாழ்க்கையின் முன்னேற்றத்தில், நாகரீகத்தில் மிக முக்கியமான பங்கு வகிப்பவை. தங்கம், வெள்ளி மட்டுமல்ல. அவை போல 98 வகை உலோகங்களைக் கண்டறித்து, பூமியிலிருந்து வெட்டி எடுத்து, பிரித்துப் பயன்படுத்தும் மனித இனம் முதலில் கண்டுபிடித்தது செம்பை. சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. சில பல நூற்றாண்டுகளுக்குப் பின், செம்புடன் தகரம் என்ற டின் சேர்த்து, வெண்கலம் உருவாக்கப்பட்டது. அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மனித பயன்பாட்டுக்கு அவசியமானதாகவே இருந்தாலும், உப்பு போல மிக எளிதாகவும் அதிகமாகவும் கிடைக்கும் சிலவற்றுக்கு உயர் விலை இருக்காது. அதிக பயன் இல்லாவிட்டாலும், வைரம் போல அதிக அளவில் கிடைக்காத சிலவற்றுக்கு மிக அதிக விலைகள் இருக்கும். ஆனால், பயன் மிகஅதிகம், கிடைப்பது குறைவு என்றால் அவற்றுக்கான விலை குறித்து கேட்கவா வேண்டும்? ரோடியம், யுரேனியம், லித்தியம், பிளாட்டினம், டேன்டாளம், நியோடைமியம் போன்ற அரிதாக கிடைக்கிற உலோகங்கள் அவற்றின் தேவை காரணமாக விலை உயர்ந்து கொண்டே போகின்றன.