

நாராயண பட்டத்திரி இயற்றியிருக்கும் நாராயணீயத்தில் கூறப்பட்டிருக்கும் கதைகள் யாவும் ஸ்ரீமத் பாகவத்திலுள்ள சரித்திரங்களேயாகும். ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றிய வேத வியாசர் தனது மகன் சுகாச்சாரியாருக்கு உபதேசம் செய்ய, அவர் பரிஷீத் என்ற அரசருக்கு கங்கை நதிக்கரையில் உபதேசித்து சாப விமோசனம் பெற வைத்தார்.
கேரளாவில் பாரதப்புழை என்னும் நதிக்கரை அருகிலுள்ள மேல்புத்தூர் என்ற இடத்தில் கி.பி. 1560-ம் ஆண்டு நாராயண பட்டத்திரி பிறந்தார். தன்னுடைய தந்தை மகா பண்டிதர் மாத்ருதத்தர் மற்றும் பல ஆச்சாரியர்களிடத்தில் வேதங்களையும், பல்வேறு சாஸ்திரங்களையும் கற்று, தனது 16-வது வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கினார்.