Last Updated : 28 Jul, 2018 11:09 AM

 

Published : 28 Jul 2018 11:09 AM
Last Updated : 28 Jul 2018 11:09 AM

நலம், நலமறிய ஆவல் 45: ஆட்டிஸத்துக்கு அன்பே மருந்து

வயதுக் குழந்தையாக இருந்தபோது, மழலைப்பேச்சு இயல்பாக இல்லை. காது கேட்கவில்லை. என் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை. டாக்டர்களிடம் காட்டினோம். ‘ஆட்டிஸம்’ என்றார்கள். அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளச் சொன்னார்கள். அவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ள வீட்டுச்சூழல்  இடம் கொடுக்கவில்லை. என் கேள்வி என்னவென்றால், சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டவர்களுடைய குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சினை வரும் என்கிறார்கள். அது உண்மையா? இது மூளைப் பிரச்சினையா? இதை வராமல் தடுத்திருக்க முடியுமா? தெளிவுபடுத்துங்கள்.  நான் அடுத்த குழந்தைக்குத் தயாராக விரும்புகிறேன்.

- சுகுணா கந்தசாமி, காரைக்கால்.

ஆட்டிஸம் என்பது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் ஆட்டிஸக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறது. ஆனால், இ.இ.ஜி., சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எனப் பல பரிசோதனைகளில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்தபோது அவர்களுக்கு மூளை பாதிப்பு இல்லை என்கிற உண்மை தெரியவந்தது.

இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத் திறன், சமூக நட்புத் திறன், ஒருங்கிணைப்புத் திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளைப் பாதிக்கும் கோளாறு. இவர்களுக்கு அறிவு இருக்கும். ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழி தெரியாது. இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அந்தப் புரிதலை நமக்குப் புரிய வைப்பதற்கான மொழிதான் தெரியாது.

ஏன் வருகிறது?

ஆட்டிஸம் வருவதற்கான காரணம் இன்னும் தீர்மானமாகவில்லை. இது வம்சாவளியில் வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப் பட்டால், அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிஸம் குறைபாடு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்சினை இருந்தால் அல்லது ஃபோலிக் அமிலச் சத்து குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம். கர்ப்பிணியிடம் காணப்படும் மன அழுத்தம், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன.

அறிகுறிகள் என்ன?

தாய்ப் பாலூட்டும்போது தாயின் கண்களைக் குழந்தை பார்க்காது. ஆறு மாதம் ஆனால்கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாகப் பார்க்காது. அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது. ‘டாட்டா காட்டுதல்’ போன்ற கை அசைப்பு இருக்காது. மழலைப் பேச்சுப் பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப் படிகளில் தாமதம் ஏற்படுவதுண்டு.

ஆட்டிஸம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் நன்மைகள் அதிகம். அப்போதுதான் மூளை செல்களைப் பயிற்சிகள் மூலம் வழிக்குக் கொண்டுவர முடியும். காலம் தாழ்த்தினால், பயிற்சிகளால் பலன்கள் கிடைப்பது தாமதப்படலாம்.

சிகிச்சை உண்டா?

ஆட்டிஸத்துக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. ஒரு கூட்டு முயற்சியால்தான் இதை வெற்றிகொள்ள முடியும். அன்பு ஒன்றே இதற்கு மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு பெற்றோர் இருவரும் அதிக நேரம் செலவிட வேண்டும். பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்குப் பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சி தர வேண்டும். ‘குளூட்டன்’ இல்லாத உணவு வகைகளைத் தருவது நல்லது. குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகள் அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும்.

இந்தக் குறைபாட்டின் ஆரம்பக் கட்டத்திலேயே மொழிப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத் திறன் பயிற்சிகள் என்று பலவற்றை முறைப்படி கற்றுத்தர வேண்டும். பேச வேண்டும், பழக வேண்டும் போன்ற எண்ணங்களைக் குழந்தைக்குக் கொண்டு வருவதற்குத் தாயின் பங்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.

தடுப்பது எப்படி?

உறவுமுறையில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது இந்தப் பிரச்சினையை வரவிடாமல் தடுக்கும். பெண்கள் கர்ப்பத்துக்கு முன்பே தடுப்பூசிகள் போட்டு ருபெல்லா தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதும், கர்ப்ப காலத்தில் மருத்துவரின் யோசனை இல்லாமல் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் முக்கியம். குறை தைராய்டு, நீரிழிவு, வலிப்பு நோய், மனநோய் ஆகியவை உள்ள பெண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பான மருந்துகள் எடுக்க வேண்டும். கர்ப்பிணிகள் மது அருந்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. காற்று மாசுள்ள சூழலைத் தவிர்க்க வேண்டும். அந்நிய உணவு வகைகளைத் தவிர்த்து ஆர்கானிக் உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x