ஆனந்த ஜோதி
எதிரிகளின் சதியை முறியடிக்கும் தேவதானம் நச்சாடை தவிர்த்த சுவாமி
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில், தென் தமிழக பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு 1,000 ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டதால் இத்தலம் தேவதானம் என்று அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவற்றில் ஆகாயத் தலமாக திகழ்வது தேவதானம்.
மற்றவை: சங்கரன்கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம் வந்த நல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று). மகா சிவராத்திரி தினத்தில் இந்த ஐந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவது நற்பலன்களைத் தரும் என்பது ஐதீகம். தேவதானம் கோயிலில் உள்ள சரக்கொன்றை மரத்தடியில் ஈஸ்வரரை தியானித்து தவம் இருந்ததால், அம்பிகை ‘தவம் பெற்ற நாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.
