Last Updated : 19 Jun, 2018 10:53 AM

 

Published : 19 Jun 2018 10:53 AM
Last Updated : 19 Jun 2018 10:53 AM

பிரிவுகள் சில, படிப்புகள் பல!

 

ந்து ஆண்டுகளுக்கு முன்புவரை மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாகப் பொறியியலும் மருத்துவமும் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவருகிறது. வேலைவாய்ப்பின்மையால் பொறியியல் எனும் மாய பலூன் வெடித்துவிட்டது. நீட் வந்தபின் மருத்துவமும் பலருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. கலந்தாய்வு தொடங்கியவுடனே நிரம்பிவிடும் பொறியியல் படிப்புக்கான இடங்கள், இன்று கலந்தாய்வு முடிந்த பின்னும் நிரம்பாமல் இருக்கும் நிலை உள்ளது.

இப்போது மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாக அறிவியல் படிப்புகளும் கலை படிப்புகளும் உள்ளன. ஒருவகையில் இது ஒரு ஆரோக்கிய மாற்றமே. ஏனென்றால், தொழிற்கல்விகளும் மருத்துவமும் மட்டுமே எதிர்காலம் அல்லவே. நீங்கள் பிளஸ் டூவில் என்ன தேர்வுசெய்து படித்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் விரிகின்றன.

அறிவியல் பிரிவு

பி.சி.பி.எம் (Physics / Chemistry / Biology / Maths) குரூப், பி.சி.பி. (PCB) குரூப், பி.சி. எம் (PCM) குரூப் ஆகியவை அறிவியல் பிரிவில் அடங்கும். பிளஸ் டூவில் இதைப் படித்தவர்கள் பொறியியல், மருத்துவம் தவிர்த்து பி.எஸ்சி. – இயற்பியல் / வேதியியல் / கணிதம், பி.எஸ்சி. – பார்மஸி, பி.எஸ்சி. – பயோ டெக்னாலஜி, பி.எஸ்சி. – டயரி டெக்னாலஜி, பி.எஸ்சி. – அகுவா கல்ச்சர் / அக்வா இன்ஜினீயரிங், பி.நாட். இன் நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ் ஆகியவற்றில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

இவை அனைத்தும் மூன்று ஆண்டு கால படிப்புகளே. இவற்றைப் படிப்பவர்களுக்குத் தொடக்க வருமானம் ஆண்டுக்கு ரூ.நான்கு முதல் ஏழு லட்சம்வரை கிடைக்க வாய்ப்பு உண்டு.

வணிகவியல் பிரிவு

கல்வி முறையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வணிகவியல். வர்த்தகம், நிதி, பொருளாதாரம், வங்கியியல், அரசியல் ஆகியன இந்தப் பிரிவில் அடங்கும். இதைப் படித்தவர்கள் பி.காம்., பி.பி.ஏ., சி.ஏ., பி.எம்.எஸ்., பி.பி.எஸ்., பி.ஏ.ஃப்., சி.எஸ், ஆகியவற்றைப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டுகால படிப்புகள். இதைப் படித்து முடித்து திறனோடு இருப்பவர்களுக்கு தொடக்க வருமானம் ஆண்டுக்கு ரூ.இரண்டு முதல் ஐந்து லட்சம்வரை கிடைக்க வாய்ப்பு உண்டு.

கலைப் பிரிவு

அறிவியல், வணிகவியல் ஆகியவை தவிர்த்து ஏனைய அனைத்தும் கலைப் பிரிவில் அடங்கும். வேலையைக் குறி வைத்தே இதன் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சமூக வளர்ச்சிக்கும் மனித மேன்மைக்கும் தேவையான படிப்புகள் பல இந்தப் பிரிவில் உள்ளன. சட்டப் படிப்பு, அனிமேஷன் மற்றும் மல்டி மீடியா, ஃபேஷன் டெக்னாலஜி, விஷுவல் ஆர்ட்ஸ், லைப்ரரி ஆர்ட்ஸ், பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், ஏவியேஷன் & ஹாஸ்பிட்டல் மேனஜ்மெண்ட், ஹோட்டல் மேனெஜ்மெண்ட், ஃபிலிம் & மாஸ் கம்யுனிகேஷன், மொழிப் படிப்புகளான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், சோஷியல் வொர்க், கவின் கலை ஆகியனவற்றில் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

இவை அனைத்தும் மூன்று ஆண்டு படிப்புகள். இதைப் படித்து நிபுணத்துவம் அடைந்தவர்களுக்கு தொடக்க வருமானம் ஆண்டுக்கு ரூ.இரண்டு முதல் ஐந்து லட்சம்வரை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பணத்தையும் காலத்தையும் மிச்சமாக்கலாம்

பொறியியல் படிப்புக்குச் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.ஒரு லட்சம் ரூபாய் செலவிட வேண்டும். கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.நான்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் வரைதான் செலவாகும். பொறியியல் படிப்பு முடிக்க நான்கு ஆண்டுகள் தேவை, கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு மூன்று ஆண்டுகள்போதும். இதனால், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் பணத்தை மட்டுமல்ல, நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x