Last Updated : 08 May, 2018 10:46 AM

 

Published : 08 May 2018 10:46 AM
Last Updated : 08 May 2018 10:46 AM

புதுத் தொழில் பழகு 04: சொடுக்கினால் பயணிக்கலாம்!

 

யணங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் வல்லமை கொண்டவை. தென்னாப்பிரிக்க ரயில் பயணம் ஒன்றுதான், தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்திய சுதந்திரப் போராட்டம்வரை கொண்டுவந்தது எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட பயணம்தான் இன்று 100 கோடி ரூபாய் வணிகமாக வளர்ந்திருக்கும் ஒரு தொழிலுக்கும் ஆதாரமாக இருந்திருக்கிறது. அந்தத் தொழில், டிக்கெட்கூஸ் டாட் காம் (TicketGoose.com).

கார்த்திக் ஈஸ்வரமூர்த்தியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சிவகிரி. விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்ற ஈஸ்வரமூர்த்தி, ஈரோட்டிலிருந்து சென்னை செல்ல பேருந்துக்கு முன்பதிவுசெய்ய முயன்றிருக்கிறார். ஆனால், நேரில் வந்து முன்பதிவு செய்யச் சொல்லி பேருந்து நிறுவனத்தினர் சொல்லியிருக்கிறார்கள். சென்னைக்கு முன்பதிவுசெய்வதற்காக வர,போக என இரண்டு மணி நேரம் பயணித்து ஈரோடு செல்ல வேண்டியிருந்தது. அவரது விடுமுறை நாட்களில் ஒன்றை முன்பதிவுக்காகவே ஒதுக்க வேண்டியிருந்திருக்கிறது.

இது குறித்துத் தன் நண்பரான வாசுதேவன் ராமசாமியிடம் கார்த்திக் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேச்சின் ஒருகட்டத்தில்தான் நாமே இதற்குத் தீர்வு கண்டுபிடித்தால் என்ன, எனத் தோன்றியிருக்கிறது. அவர்களது மற்றொரு நண்பரான அருண் ஆத்தியப்பனுடன் இணைந்து மூவரும் இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தொடக்கமே தடுமாற்றம்

இணையத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே பேருந்து முன்பதிவுசெய்யும் முறையைத் தொழிலாகத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களது சேமிப்பை முதலீடாகக் கொண்டனர். பிறகு தங்களது நண்பர்களின் முதலீடுகளையும் வாங்கியுள்ளனர். புதியதைக் கண்டு அஞ்சுவது வழக்கம் என்பதுபோல இணையம் மூலம் பேருந்து முன்பதிவு என்றால், எப்படிச் செய்வது, பணம் வசூலிப்பது எப்படி எனப் பல சந்தேகங்களைப் பேருந்து நிறுவனத்தினர் இவர்களிடம் எழுப்பியுள்ளனர். எவ்வளவு விளக்கம் கொடுத்தும் சில பேருந்து நிறுவனத்தினர் சமாதானமே ஆகவில்லை.

“இன்றைக்கு ஸ்மார்ட்போன் மூலம் இணையப் பயன்பாடு பெருகியிருக்கிறது. ஆனால் 2007-ல் எங்கள் சேவையைத் தொடங்கிய காலத்தில் இணையப் பயன்பாடு இவ்வளவு பெருகியிருக்கவில்லை. அதனால் தொடக்கத்தில் சிரமப்பட்டோம்” என்கிறார் கார்த்திக். இன்றைக்கு உள்ள பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்கள், அன்றைக்கு அவ்வளவு இல்லை. இணையம் உபயோகத்துக்கு வந்திருந்தாலும், பணப் பரிவர்த்தனைக்கு இணையத்தைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருந்தது.

ரூ. 100 கோடி வரவு செலவு

சில பேருந்து நிறுவனங்களுக்கு இவர்களே சொந்த செலவில் கணினியை வழங்கியிருக்கிறார்கள். பேருந்து பயணச் சீட்டு முன்பதிவில் இருந்த சிக்கல்களை எப்படிக் களைவது என்று விளக்கியிருக்கிறார்கள். ஆனாலும் முதல் இரண்டு வருடங்களில் ஒரு பயணச் சீட்டுகூட இவர்களது இணைய நிறுவனத்தின் மூலம் பதிவாகவில்லை. ஆனாலும் இந்தப் புதிய தொழில் வெற்றியைத் தரும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அதற்குப் பலனும் கிடைத்து. இன்றைக்கு அது 100 கோடி ரூபாய் வரவு-செலவு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் இயங்கிவருகிறது.

10 பேருந்து நிறுவனங்களுடன் தொடங்கி இன்றைக்கு 2,500-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுவனங்கள் டிக்கெட்கூஸ் இணையத்துடன் இணைந்திருக்கின்றன. ஒரேயொரு பயணச் சீட்டுப் பதிவுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்த இணையதளம், ஒரு நாளில் இன்றைக்கு 4,500க்கு மேல் பயணச் சீட்டுகளை விற்கிறது. பேருந்து இணைய முன்பதிவு முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, சுற்றுலா சேவையையும் டிக்கெட்கூஸ் இணையதளம் தொடங்கியிருக்கிறது.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x