Last Updated : 18 May, 2018 10:47 AM

 

Published : 18 May 2018 10:47 AM
Last Updated : 18 May 2018 10:47 AM

சாவித்திரி: நம் காலத்தின் பெருமிதம் - நாக் அஸ்வின் பேட்டி

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இருமாநில ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடி வருகிறார்கள். சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி “ எனது தாயாரின் வாழ்க்கை, நேர்மையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். அவ்வளவு பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டு அடக்கமாகக் காட்சி அளிக்கிறார் நாக் அஷ்வின். இதற்குமுன் ‘எவிடே சுப்ரமணியம்’ என்ற ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

‘எவடே சுப்ரமணியம்’ படத்தில் பணத்துக்காக ஓடும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் தான் யார் என்ற கேள்வியோடு ஆன்மிகத் தேடலில் இறங்கி, அந்தந்த கணத்துக்காக வாழ்வதே வாழ்க்கை என்பதைக் கண்டடைகிறான். இப்படியொரு கதைக்கான உந்துதல் எங்கிருந்து கிடைத்தது?

எனது பாட்டிதான் காரணம். அவர்தான் ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடைதேடிப் புறப்பட்ட ரமண மகரிஷி பற்றிக் கூறினார். அவர் பற்றிய ஒரு புத்தகத்தை என் பள்ளிக் காலத்தில் கொடுத்தார். ரமணரின் வாழ்க்கைக் கதை என்னைப் பாதித்தது என்று சொல்வேன். நடிகர் நானி ஏற்ற சுப்ரமணியம் கதாபாத்திரம் ரமணரின் பாதிப்பில் உருவானதுதான்.

18CHRCJ_SAVITRIசாவித்திரியின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்; தனிப்பட்ட காரணங்கள் உண்டா?

விஷேசக் காரணம் என்று எதுவும் இல்லை. ஆனால், சாவித்திரி நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டே இருப்பதும், படங்களில் அவரது நடிப்பும், பாடல் காட்சிகளில் அவரது சுறுசுறுப்பும் நான் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போதே என்னை அதிகமாக ஈர்த்திருக்கின்றன. இந்த ஈர்ப்பு எல்லா நட்சத்திரங்கள் மீதும் ஏற்படாது. பின்னர் நான் ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தபோது, சினிமா காபி புக் ஒன்று என் கண்களில் பட்டது.

அதைப் புரட்டியபோது ஆச்சரியம் கூடியது. அதில் சாவித்திரி அம்மா, நேருவுடன், இந்திரா காந்தியுடன், ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இருந்தார். ஒரு சிறுத்தைப் புலியைக் கையில் பிடித்துக்கொண்டு, குழந்தைக்குச் சோறு ஊட்டிக்கொண்டு என்று விதவிதமான ஒளிப்படங்களில் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவரது ‘ஸ்டார்டம்’ எவ்வளவு பெரியது என்பது என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு பற்றிய உங்கள் ஆராய்ச்சியில் எத்தனை சதவீதம் படத்துக்குப் பயன்படுத்திக் கொண்டீர்கள்?

எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு குக்கிராமத்தில் இருந்து, எந்தப் பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து இவ்வளவு பெரிய புகழையும் அந்தஸ்தையும் சினிமாவில் அடைய முடிந்தது முழுவதும் அவரது நடிப்புத் திறமையால் மட்டும்தான். திறமையும் அழகும் அவரோடு சேர்ந்தே பிறந்திருந்தது. புராணக் கதைகளிலிருந்து மொத்தமாகச் சமூகக் கதைகளுக்கு சினிமா மாறிக்கொண்டிருந்த 50-களில்தான் சாவித்திரி சினிமாவில் நுழைந்து, தென்னிந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார்.

18chrcj_nag-ashwin iterview 2right

என்.டி.ஆர், நாகேஷ்வர ராவ் இருவரிடமும் கால்ஷீட் கேட்டுப்போகும் தயாரிப்பாளர்களிடம், ‘சாவித்திரிதான் உங்கள் கதாநாயகி என்றால், முதலில் அவரிடம் போய் கால்ஷீட்டை வாங்கிக்கொண்டு எங்களிடம் வாருங்கள்.’ என்று அவர்கள் கூறும் அளவுக்கு இருந்தது அவரது உச்சம். அவரைக் குறித்த ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களில் 30 சதவீதத்தைக்கூடப் பயன்படுத்த முடியவில்லை. அவரது வாழ்க்கை மாபெரும் காவியம். சாவித்திரி நம் காலத்தின் பெருமிதம்.

உங்களது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். நீங்கள் எப்படி சினிமா பக்கம்?

சிறு வயது முதலே சினிமா பிடித்துப்போய் விட்டது. மருத்துவனாக இருக்க அதிக பொறுப்பும் பொறுமையும் வேண்டும். அது என்னிடம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் மாஸ் கம்யூனிகேசன் படித்துவிட்டு ஊடகத்தில் சில காலம் பணிபுரிந்தேன். பின்னர் இயக்குநர் சேகர் கம்மூலாவிடம் உதவியாளர் ஆகி சினிமாவுக்குள் வந்துவிட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x