Last Updated : 15 May, 2018 11:43 AM

 

Published : 15 May 2018 11:43 AM
Last Updated : 15 May 2018 11:43 AM

சேதி தெரியுமா? - 25 வயதுவரைதான் நீட்

நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான சி.பி.எஸ்.இ. குறிப்பிட்டிருந்த வயது வரம்பை டெல்லி உயர்நீதிமன்றம் மே 11 அன்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதன்படி, பொதுப் பிரிவில் 25 வயது வரையிலும், இட ஒதுக்கீடு பிரிவில் 30 வயது வரையிலும் நீட் தேர்வு எழுதலாம் என்ற இந்திய மருத்துவ கவுன்சில், சி.பி.எஸ்.இ.யின் பரிந்துரையை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதே நேரம், திறந்தவெளிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற சி.பி.எஸ்.இ.-ன் விதிக்குத் தடைவிதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். திறந்த வெளிப் பள்ளியில் படித்த மாணவர்களும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜி.எஸ்.டி.யால் உற்பத்திக் குறைவு

இந்தியாவில் சென்ற ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யாலும், வங்கி தொடர்பான பிரச்சினைகளாலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) குறைந்திருப்பதாக மே 8 அன்று வெளியான ஐ.நா.வின் 2018 ஆசிய பசிபிக் பொருளாதாரச் சமூக ஆணையத்தின் ஆய்வு (ESCAP) தெரிவித்தது. இந்த இரண்டு பிரச்சினைகளாலும் 2016-ம் ஆண்டு 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, 2017-ம் ஆண்டில் 6.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த அறிக்கையில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 2018-ம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.4 சதவீதம் என்று படிப்படியாக முன்னேறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

உலகின் இரண்டாவது பழமையான பாறை

உலகின் இரண்டாவது பழமையான பாறையாக ஒடிசாவின் சம்புவா பகுதியில் எட்டு ஆண்டுகளுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஸிர்கோன்’ ( ) பாறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் ‘சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ்’ இதழில் இது தொடர்பாக வெளியான கட்டுரையில், 420 கோடி ஆண்டுகள் பழமையான ஸிர்கான் பாறை உலகின் இரண்டாவது பழமையான பாறை என்ற தகவல் வெளியானது.

கொல்கத்தாப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் கர்டின் (‘Curtin’) பல்கலைக்கழகம், மலேசியா, சீனாவைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்கள் இணைந்து ஆராய்ச்சி செய்து இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவித்திருக்கின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் ஜாக் ஹில்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஸிர்கான் பாறைதான் உலகில் 440 கோடி ஆண்டுகள் பழமையான பாறையாகத் தற்போதுவரை அறியப்பட்டிருக்கிறது.

கூகுள் அசிஸ்டெண்ட்டின் புதிய அறிமுகம்

கூகுள் அசிஸ்டெண்ட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு ‘டிஜிட்டல் ஏ.ஐ.’ உதவியாளர் அம்சமான ‘டூப்லெக்ஸ்’ தொழில்நுட்பத்தை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மே 8 அன்று அறிமுகம் செய்திருக்கிறார். கூகுள் அசிஸ்டெண்ட்டின் இந்த ‘டிஜிட்டல் ஏ.ஐ.’ உதவியாளர் அம்சம் மனிதக் குரலில் பேசும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு சிகை அழகு கலைஞரிடம் எப்படி ‘அப்பாய்ண்மெண்ட்’ வாங்கலாம் என்பதைச் சுந்தர் பிச்சை இந்த ‘டூப்லெக்ஸ்’ தொழில்நுட்பத்தின் அறிமுக மாநாட்டில் விளக்கினார்.

நாலாவது சக்திவாய்ந்த நாடு

ஆசிய-பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘லோவி இன்ஸ்டிடியூட்’ மே 8 அன்று வெளியிட்ட இந்த ‘ஆசிய பவர் இண்டக்ஸ்’ அறிக்கையில் 25 நாடுகள் இடம்பெற்றிருந்தன. பொருளாதார வளங்கள், ராணுவத் திறன், தூதரகத் தாக்கம், பொருளாதார உறவுகள், தாங்குதிறன், வருங்காலப் போக்குகள், பாதுகாப்பு அமைப்புகள், கலாச்சாரத் தாக்கம் ஆகிய எட்டு அம்சங்களை அடிப்படையாகவைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பசிபிக் பகுதியின் முதல் பெரிய சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் ஜப்பானும் இருக்கின்றன.

ஈரான் அணு ஒப்பந்தம்: வெளியேறிய அமெரிக்கா

ஈரானுடன் 2015-ல் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக மே 8 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா வெளியேறினாலும், ஈரான் அணு ஒப்பந்தம் அல்லது JCPOA என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த ஒப்பந்தம் முற்றிலும் உடையாமல் பாதுகாக்கின்றன. ஈரான் அணு குண்டைத் தயாரிக்கப்படுவதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அத்துடன், இந்த ஒப்பந்தம் ஈரானின் ஏவுகணை திட்டத்தை உள்ளடக்கியதாக இல்லை என்று குற்றம்சுமத்தியிருக்கிறது. ஏமன், சிரியா பிரச்சினைகளில் ஈரானின் செயல்பாடுகளையும் அமெரிக்கா கேள்விக்குட்படுத்தி இருக்கிறது.

மலேசியா: மீண்டும் பிரதமரானார் மஹாதீர்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் பின் முஹமது 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று மே 10 அன்று பிரதமராகப் பொறுப்பேற்றார். 60 ஆண்டுகளாக மலேசியாவில் ஆட்சி புரிந்த ‘பாரிசன் நேஷனல்’ கூட்டணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார் மஹாதீர். 92 வயதில் இந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அவரது ‘பாகட்டன் ஹராப்பன்’ கட்சி இந்தத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

‘டிஜிட்டல் இந்தியா இன்டர்ன்ஷிப்’ திட்டம்

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தொழில்நுட்ப மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக ‘டிஜிட்டல் இந்தியா இன்டர்ன்ஷிப்’ என்ற திட்டத்தை மே 9 அன்று அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்கீழ், இன்டர்ன்ஷிப்புக்குத் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 10, 000 ஊதியமாக வழங்கப்படும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மின்னணு, தகவல் தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, ‘சைபர்’ சட்டம், ‘ஐடி’ சட்டம், டிஜிட்டல் தடயஅறிவியல், ‘க்ளவுட் கம்ப்யூட்டிங்’, ‘டிஜிட்டல் பேமேண்ட்’ உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் பயிற்சிபெற முடியும். இந்தத் திட்டத்துக்கு இளங்கலை, முதுகலைப் பொறியியல், தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x