Last Updated : 24 Apr, 2018 10:22 AM

 

Published : 24 Apr 2018 10:22 AM
Last Updated : 24 Apr 2018 10:22 AM

புதுத் தொழில் பழகு 02: பொறுமை தந்த வளர்ச்சி

ன்றைக்கு இளைஞர்கள் பலருக்கும் தொழில் தொடங்கும் கனவு இருக்கிறது. ஆனால், என்ன தொழில் தொடங்குவது, என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. அப்படியான இளைஞர்களுள் ஒருவராக இருந்தார் சதீஷ் சுந்தரம். ஆனால், என்ன தொழில் தொடங்கலாம் என்பதை அவருக்குப் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டு காட்டிக் கொடுத்திருக்கிறது.

puthu thozilபந்து காட்டிய பாதை

சென்னையைச் சேர்ந்த சதீஷ், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். ஆனால், அவரது விருப்பமெல்லாம் தொழில்முனைவோர் ஆவதுதான். முதலில் என்ன செய்யலாம் என்று குழம்பியவர் பிறகு நேரடியாகக் கொள்முதல் செய்து, வாடிக்கையாளரிடம் நேரடியாக விற்கும் (Business to Consumer - B2C) தொழிலைத் தேர்ந்தெடுத்தார். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்களை விற்கலாம் என முடிவெடுத்தார்.

இந்தத் தொழிலை முடிவுசெய்ததும் உடனடியாக எடுத்தோம், கவிழ்த்தோம் என அவர் இறங்கிவிடவில்லை. முதல் மூன்று மாதங்கள் அவர், நண்பர் மகேஷ் சுப்பிரமணியத்துடன் இணைந்து தொழில் தொடர்பாக ஆய்வுசெய்தார். சந்தையில் பொருட்கள் என்ன விலைக்குக் கிடைக்கின்றன, நம்மால் எந்த விலைக்கு விற்க முடியும் என்பதை ஆய்வுசெய்தார்.

அரிசி, பருப்பு போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல்செய்து விநியோகிக்கலாம் என அவர்களைச் சந்தித்துள்ளனர். ஆனால், விவசாயிகளிடமிருந்து சிறிய அளவில் வாங்க முடியாது. ஆரம்பத்தில் 30 வாடிக்கையாளர் மட்டுமே கிடைத்திருந்ததால் அளவுக்கு மீறிக் கொள்முதல் செய்தால் அதைப் பாதுகாக்கும் அளவுக்கு அவரிடம் தனிக் கிடங்கும் அப்போது இல்லை. சதீஷ் வீட்டின் ஓர் அறைதான் அவர்களது அலுவலகம், கிடங்கு எல்லாமே.

நானே முதலாளி நானே ஊழியர்!

அவர்களது இந்தத் தொழில் வழக்கமான மளிகைக் கடை தொழில்போல் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளனர். அதே நேரம் வாடிக்கையாளருக்கு நெருக்கமாகவும் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார். அதனால்தான் இந்தத் தொழிலுக்கு ‘மளிகைக்கடை டாட் காம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

மளிகைக்கடை டாட் காம் (www.maligakadai.com) என்ற இணையதளத்தையும் பிறகுதான் தொடங்கியுள்ளார். இப்போது ஸ்மார்ட் ஃபோன் செயலியையும் (Smart Phone App) அறிமுகப்படுத்தினார்கள். முதலில் தொலைபேசி வழியாகத்தான் வாடிக்கையாளர்களை அணுகியுள்ளனர். சதீஷும் அவருடைய நண்பர் மகேஷும் மட்டும்தான் ஊழியர்கள். சதீஷ்தான், பொருட்களை எடுத்துக்கொண்டு தெரு, தெருவாக அலைந்திருக்கிறார். மகேஷ் அலுவல்களைப் பார்த்திருக்கிறார்.

ஆறேழு மாதத்துக்கு வருமானமே இல்லை. அந்த நேரத்தில் சிலர், அவரது இந்தத் தொழில் தேர்வை விமர்சனமும் செய்திருக்கிறார்கள். ஆனால் சதீஷும் மகேஷும் மனம் தளரவில்லை. தொடங்கிய தொழிலின் பலன் அறிய இன்னும் கூடுதலாக உழைத்துள்ளனர். லாபம்தான் அடையவில்லை. என்றாலும் அவர் வாடிக்கையாளர்களைச் சம்பாதித்தார்.

வெற்றியின் ரகசியம்

சென்னையில் குரோம்பேட்டையை மையமாகக்கொண்டு பணியாற்றிவந்த இவர்கள், சைதாப்பேட்டையில் அடுத்த மையத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் தொழில் சேவை செய்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மதுரைக்கும் தங்கள் சேவையை விரிவுபடுத்தியுள்ளனர்.

“தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள் பலர், தொடங்கிய மாதத்திலேயே லாபம் பார்க்க நினைக்கிறார்கள். அந்தத் தொழில் நிலைக்கு வந்து லாபம் தரத் தொடங்கும் முன்பே பொறுமையின்றித் தொழிலையே விட்டுவிடுகிறார்கள். இதுதான் பலரது தோல்விக்கான காரணம். நான் மிகப் பொறுமையாக இருந்தேன். இதுதான் எனது வெற்றிக்கு முக்கியமான காரணம்” என்கிறார் சதீஷ். இந்தப் பொறுமையும் விடாமுயற்சியும்தான் பூஜ்ஜிய வருமானத்துடன் தொடங்கிய இந்த நிறுவனத்தை இப்போது மாதம் 25 லட்சம் ரூபாய் விற்பனைசெய்யும் நிறுவனமாக வளர்த்துள்ளன.

தொடர்புக்கு : jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x