Published : 10 Apr 2018 11:44 AM
Last Updated : 10 Apr 2018 11:44 AM

வரலாறு தந்த வார்த்தை 25: காவிரி நீர்.. கண்ணீர்..?

‘கா

விரி மேலாண்மை வாரியம்’ அமைக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி உட்பட எல்லா கட்சிகளும் கடந்த வாரம் நடத்திய போராட்டங்களால், திக்குமுக்காடிப் போனது தமிழகம். இந்தப் போராட்டங்களைப் பார்த்து மத்திய அரசும் கொஞ்சம் ‘விக்கி’த்துத்தான் போயிருக்கிறது.

பாருங்கள்… இந்த விவகாரத்திலும் ‘வாரியத்தை’ விட ‘வார்த்தை’தான் பிரச்சினை. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவைக் குறைத்து, கர்நாடகத்துக்கான நீரின் அளவைக் கூட்டி தீர்ப்பளித்திருந்தது. மேலும், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஒரு ‘ஸ்கீம்’ உருவாக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தது.

6 வாரக் கெடு முடிந்த நிலையில், காவிரி விவகாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையை தமிழகம், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது’ என்கிற ரீதியில் புரிந்துகொள்கிறது. ஆனால், கர்நாடகமோ, தீர்ப்பில் ‘போர்டு’ (வாரியம்) என்றொரு வார்த்தையை சொல்லப்படவே இல்லை என்கிறது. இதற்கிடையில், ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எப்படிப் புரிந்துகொள்வது என்று, மத்திய அரசும் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கிறது.

இப்படி, இந்தப் பிரச்சினை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு, ஒரு விஷயத்தில் எந்த ஒரு முன்னேற்றத்துக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையை விளக்குவதற்கு ஆங்கிலத்தில் ‘Dead in the water’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.

முன்பெல்லாம், கப்பல்தான் முக்கியமான போக்குவரத்து சாதனமாக இருந்தது. அந்த கால பாய்மரக் கப்பல்கள் எல்லாம், பெரும்பாலும் காற்றை நம்பித்தான் இருந்தன. எந்தப் பக்கம் காற்று வீசுகிறதோ, அந்தத் திசையில் கப்பல் செலுத்தப்படும். காற்று வீசுவது நின்றுவிட்டால், அந்தக் கப்பலும் நின்றுவிடும். அப்போது அந்தக் கப்பலைப் பார்த்தால், நீரில் இறந்து மிதக்கும் ஓர் உயிர்போன்ற தோற்றத்தைத் தரும். மீண்டும் காற்று வீசினால்தான், அது நகரும்.

இப்போதெல்லாம் கப்பல்களில் இன்ஜின் வசதி இருக்கிறது. அந்த இன்ஜினில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது எரிபொருள் தீர்ந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபத்தில் சிக்கிவிட்டாலோ, அந்தக் கப்பல், கடலில் மிதக்கும் சடலத்தைப் போல மிதந்துகொண்டிருக்கும்.

இந்த விஷயங்கள் மூலமாகத்தான் மேற்கண்ட சொற்றொடர் புழக்கத்துக்கு வந்தது. ‘நீரில் இறந்தது போன்ற’ (டெட் இன் தி வாட்டர்) என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நீருக்காக மனிதர்கள் தீ ‘குளித்து’ இறப்பது போன்ற விஷயங்கள்… கண்களை நனைய வைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x