Last Updated : 15 Apr, 2018 12:50 PM

 

Published : 15 Apr 2018 12:50 PM
Last Updated : 15 Apr 2018 12:50 PM

இல்லம் சங்கீதம் 31: இருவர் ஒன்றானால்...

சொல்லக் கூடாத பொழுதொன்றில்

தொடங்கினேன்

எனக்குப் பத்துப் பெண் குழந்தைகள் வேண்டும்

முன்னாள் காதலிகள் பெயர்களை

வைக்கவென

மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.

எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்

அதுவும் ஐந்து என அவள் சொல்கையில்

மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம்

- லதாமகன்

தமிழ்த் திரையுலகின் பெரும் ஆளுமையாக வலம்வந்த இயக்குநர்களில் அவரும் ஒருவர். சிறந்த பண்பாளராகவும் புகழப்பட்டார். கதாநாயகிகள் எவருடனும் கிசுகிசுவில் சிக்காததன் பின்னணி இதுதான் என்று பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்த கருத்து அப்போது பரவலாகச் சிலாகிக்கப்பட்டது. “அழகான பெண்களால் நானும் ஈர்க்கப்பட்டேன். ஆனால், என் மனைவியுடன் இருக்கும்போது அந்தப் பெண்களை நெனைச்சிக்குவேன், அவ்வளவுதான்” என்று அவர் இயல்பாகச் சொல்லியிருக்கிறார். ஆழ்ந்து கவனித்தால் அதில் ஒளிந்திருக்கும் அவலங்கள் முகத்தில் அறையும்.

பாலியல் மருத்துவர்கள் இதையே, “பெரும்பாலான கூடல்களில் கணவனும் மனைவியும் அவரவருக்குப் பிடித்த ஆண்/பெண்ணை நினைத்துக்கொள்கிறார்கள்” என்கிறார்கள். “திருமணமான 2 முதல் 5 ஆண்டுகளில் கணவன் - மனைவி இடையே உடல் சார்ந்த ஈர்ப்பு குறைவது இயல்பு. அதற்கு முன் மனரீதியிலான பிணைப்பு வேரூன்றி இருந்தால் மட்டுமே அது தம்பதியரிடையிலான உடல் சார்ந்த ஈர்ப்பை மீட்க உதவும்” என்கிறார் மனநல ஆலோசகர் இளையராஜா.

மனதோடு மனதாக

ஓர் உறவில் ஆண், பெண் இருவருடைய தேவைகளும் வேறு என்று சொல்லும் இளையராஜா, பாலியல் அணுகு முறையின் மூலம் மனைவிக்குத் தன் அன்பை வெளிப்படுத்துவது ஆணின் இயல்பு என்கிறார்.

“ஆனால், கணவனது அன்பின் மூலமே ஒரு பெண் பாலியல் தேவையை நோக்கி நகருகிறாள். இதனால்தான் வெறும் உடல் தேவைக்காக மட்டுமே மனைவியை அணுகும் ஆண்கள், தாங்கள் எதிர்பார்த்தவை அனைத்தும் கிடைக்காமல் ஏமாந்துபோகிறார்கள். இப்படி ஏமாறும் ஆணுக்கு இயல்பான ஆசை அப்படியே இருந்தாலும், மனைவியிடம் மட்டும் அது முடியாமல் போகும். எனவே, இவர்கள் தங்களுக்குத் தூண்டுதல் தரும் பிற பெண்களை நினைத்துக்கொள்வார்கள். ஆத்மார்த்த தாம்பத்திய வாழ்க்கையை விரும்பும் தம்பதிக்கு இந்தப் போலியான போக்கு அடிப்படையையே குலைத்துப்போடக்கூடும். இணையின் கண் பார்த்து, முகம் பார்த்து, துடிப்பை உணர்ந்து நேசத்தைப் பரிமாறிக்கொள்ளும் உறவு, இது போன்ற தடுமாற்றங்களால் விரைவிலேயே பட்டுப் போகலாம். எனவே, உடல் சார்ந்த நெருக்கத்தோடு மனம் சார்ந்த நெருக்கத்தையும் தம்பதி வளர்த்துக்கொள்வது அவசியம். எளிமையாகச் சொல்வதென்றால், திருமணத்துக்குப் பிறகும் லவ் பண்ணுங்க, லைஃப் நல்லாருக்கும்” என்கிறார்.

காதல் என்பது பொதுவுடமை

திருமணத்துக்கு முன்பு தோன்றுவது என்ற எல்லைக்குள் காதலைச் சுருக்கிவிடுகிறோம். உண்மையில் பூரணமான காதல், கல்யாணத்துக்குப் பிறகே தொடங்குகிறது. காதலும் புரிந்துகொள்ளுதலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு அடிப்படை. புரிதல் இருக்கும் உறவில் விட்டுக்கொடுப்பதும் இயல்பாக நடக்கும். விட்டுக்கொடுப்பவர்கள் மத்தியில் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எழுந்தாலும் அவற்றிலிருந்து மீண்டெழ அனுசரணையாக உதவிக்கொள்வார்கள். இந்தப் புரிதல் இல்லாததாலேயே பெரும்பாலான தம்பதி மத்தியில் உறவுக்கு அழைப்பு விடுப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த மன்மத அம்பும் கணவன் எய்தால் மட்டுமே ஆச்சு. மனைவி விடுக்கும் அழைப்பை உணர்ந்துகொள்ளும் ஆண்கள் மிகக் குறைவு. மனைவியின் அழைப்பைக் கண்டு பதற்றமடையும் ஆண்களே அதிகம்.

முகம் பார்ப்போம்

பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதை வெறும் கடமையாகப் பாவிக்கும் தம்பதியிடையே இருக்கும் உறவும் விரைவில் இற்றுப்போகவே செய்யும். ஆரோக்கியமான உடல் இருந்தும் இணையிடம் இணக்கமான தூண்டல் கிடைக்காது அலைபாய்வார்கள். இணை அல்லாத இன்னொரு நபரிடம் இயல்பாகக் கிளர்ந்தெழுவார்கள். இந்தச் சங்கடங்களைத் தவிர்க்க, கணவன் - மனைவி இடையிலான உறவை, அன்பை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். நெருக்கத்தில் ஒருவருக்கொருவர் முகம் பார்க்கும் தம்பதி இங்கே குறைவு. முகம் பார்த்தால், பசியாறுவதற்கு அப்பால் பரிமாறவும் முடியும். அன்பில்லாத உறவில் முகக்குறிகள் புறக்கணிக்கப்படும்போது நாளடைவில் மிஞ்சியிருக்கும் உறவின் ஈரமும் காய்ந்துபோகும்.

களைகளைக் களைவோம்

பெரும்பாலான தம்பதியிடையே சச்சரவு எழுந்தால் முதலில் காவு கொடுக்கப் படுவது இருவருக்கும் இடையிலான அந்தரங்க உறவாகவே இருக்கும். இந்தப் பிணக்கு பிரச்சினையை மேலும் பெரிது படுத்துவதுடன் ஈகோவாக வளர்ந்து யார் முதலில் இறங்கிவருவது என்ற முறுக்கல், புதிய பிரச்சினைகளை வரிசையாக அடையாளம் காட்டும்.

கணவன் - மனைவி உறவில் களையாக வளரும் ஈகோவையும் அலுப்பையும் சலிப்பையும் அடையாளம் கண்டு அகற்றுவது எப்படி? திருமணம் போன்ற திணிக்கப்பட்ட உறவில் இரண்டு தனி உலகத்தினர் ஒத்திசைவாக வாழ நிர்பந்திக்கப்படும்போது பிணக்குகள் எழவே செய்யும். இரு வருக்கும் இடையே அன்பும் புரிதலும் வளர்ந்தால் இந்த வேறுபாடுகள் நாள்போக்கில் பொருட்டின்றி மறையும்.

நெருக்கம் வளர்ப்பது எளிது

தம்பதி தமக்குள் மன நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது ஒரு கலை! வெளியே எத்தனை வெட்டி முறித்தாலும் வீட்டில் அதன் சுவடு தெரியாது பார்த்துக்கொள்வது அவசியம். வீடு திரும்பியதும் மொபைல் போனையோ டிவியையோ நோண்டாமல் இணையோடு பேச வேண்டும். ‘நீதான் எனக்கு முக்கியம், உனக்காகத்தான் இத்தனை பாடும்’ என்பதையாவது புரியவைக்க வேண்டும். இரவில் ஒரு வேளையாவது குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது அவசியம். படுக்கையறைக்கு வெளியேயும் இணையிடம் மனதார இளைப்பாறுவது பிணைப்பை உறுதிப்படுத்தும். படுக்கையறையில் மட்டுமே இணையை அடையாளம் காண்பவர்களுக்கு நாளானால் அதுவும் கிடைக்காது போகும். மனம் சார்ந்த நெருக்கம் வாய்க்கப் பெற்றவர்கள் மட்டுமே உடல் சார்ந்த நெருக்கத்தை முழுமையாக உணர முடியும்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x