Last Updated : 11 Aug, 2014 05:57 PM

 

Published : 11 Aug 2014 05:57 PM
Last Updated : 11 Aug 2014 05:57 PM

தடம் பதித்த தங்கத் தாரகைகள்

எப்போதும் ‘முதல்’ என்றாலே ஸ்பெஷல்தான். நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் பிள்ளையார் சுழியைப் போட்டிருக்கிறார்கள் இரு தமிழ்ப் பெண்கள். ஸ்குவாஷில் இந்தியாவுக்காக முதன் முறையாகப் பதக்கம் வென்று தீபிகா பலிக்கல்லும், ஜோஷ்னா சின்னப்பாவும் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்திருக்கிறார்கள். அதுவும் தங்கப் பதக்கம்.

டென்னிஸூம், டேபிள் டென்னிஸூம் கலந்த கலவையாக விளையாடப்படும் ஸ்குவாஷ் விளையாட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் அத்தனை பிரபலம் கிடையாது. சைரஸ் போன்சா, ரித்விக் பட்டாச்சார்யா, சவுரவ் கோஷல் போன்ற வீரர்கள் ஸ்குவாஷ் விளையாட்டில் வலம்வந்த வேளையில், தீபிகா பலிக்கல்லும் ஜோஷ்னா சின்னப்பாவும் பெண்கள் அணியைக் கட்டி எழுப்பினார்கள்.

இருவருமே சென்னைப் பெண்கள். இருவருமே ஒரே பயிற்சிப் பட்டறையில் தீட்டப்பட்ட வைரங்கள், நீண்ட கால தோழிகள் வேறு. இது போதாதா வெற்றியிலும் கை கோக்க? சென்னையிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல போட்டிகளில் இணைந்து விளையாடி ஸ்குவாஷ் விளையாட்டுக்கு முகவரி கொடுத்தவர்கள் இவர்கள். இன்றுவரை மிகவும் பிரபலமாகாத விளையாட்டாகவே இந்தியாவில் பார்க்கப்படும் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு, காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

ஒற்றையர் ஆட்டத்துக்காக இருவருமே பலமுறை எதிரெதிர் நின்று களம் கண்டிருக்கிறார்கள். ஆனால், நாட்டுக்காக விளையாடும்போது எந்த ஈகோவும் பார்க்காமல் விளையாடி பல வெற்றிக் கனிகளைப் பறித்திருக்கிறார்கள் இந்த இளமங்கைகள்.

காமன்வெல்த் போட்டி இறுதியாட்டத்தில் இங்கிலாந்து ஜோடியை எதிர்த்து தீபிகா ஜோஷ்னா ஜோடி விளையாடிய போது தங்கம் இங்கிலாந்துக்கு என்றே அனைவரும் நினைத் தார்கள். ஆனால், ஆக்ரோஷமாக விளையாடிய நம் பெண்கள், அரை மணி நேரத்துக்கெல்லாம் எதிரணியைப் பெட்டிப் பாம்பாக மூலையில் உட்கார வைத்து தங்கத்தை வசப்படுத்தினார்கள்.

எந்த ஒரு விளையாட்டுக்குமே முறையான பயிற்சி முக்கியம். இன்று சர்வதேச அளவில் தீபிகாவும் ஜோஷ்னாவும் ஜொலிக்க, எகிப்தில் எடுத்துக் கொண்ட பயிற்சியே முக்கியக் காரணம். இதன்பிறகே இருவரின் வெற்றி கிராஃப் கிடுகிடுவென உயர்ந்தது. இங்கிலாந்து, மலேசியா, எகிப்து போன்ற நாடுகளின் ஸ்குவாஷ் வீராங்கனைகள் எப்போதுமே இந்த விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துவதுண்டு.

இப்போது தீபிகாவும் ஜோஷ்னாவும் அவர்களுக்குக் கடும் போட்டியாளர்களாக உருவெடுத்துள்ளார்கள். குறிப்பாக தீபிகா கடந்த 2012-ம் ஆண்டில் உலகத் தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறி புதிய சாதனை படைத்தார். இப்போதும் 10-வது இடத்தில் உள்ளார் தீபிகா. ஜோஷ்னாவும் சளைத்தவரல்ல. உலகத் தரவரிசையில் டாப் 20 இடத்துக்குள் இருக்கிறார்.

காமன்வெல்த் போட்டியில் பெற்றப்வெற்றி, இந்தியாவில் ஏராளமான ஸ்குவாஷ் வீராங்கனைகளை உருவாக்கும் என்று இருவருமே நம்பிக்கைத் தெரிவித் திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x