Last Updated : 18 Feb, 2018 10:43 AM

 

Published : 18 Feb 2018 10:43 AM
Last Updated : 18 Feb 2018 10:43 AM

இல்லம் சங்கீதம் 23: ஒரு காதல் ஐம்பது சாயல்கள்!

கொடுக்கப்படும் அதே அழுத்தத்துடன்

உணரப்படும் முத்தங்கள்

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

- நேசமித்ரன்

தமிழகத்தின் பெருநகரம் ஒன்றில் விமரிசையாக நடைபெற்ற பெரிய இடத்துத் திருமணம் அது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே மணமக்கள் இடையே ஏற்பட்ட பூசல், இருவீட்டார் சண்டையாக வளர்ந்தது. குடும்ப நண்பர்களின் சமாதான முயற்சியில் இருதரப்புக்கும் பொதுவான உயர் காவல் அதிகாரி ஒருவர் முன்னிலையில் பேசித் தீர்க்க முடிவானது.

அந்தரங்க வாழ்விலும் விட்டுக்கொடுத்தல்

புதுமணத் தம்பதிகளுக்கு இடையிலான அந்தரங்கம்தான் பிரச்சினையின் மையம் என்பதைக் காவல் அதிகாரி புரிந்துகொண்டார். மற்றவர்களை வெளியேற்றிவிட்டு அந்தத் தம்பதியை மனம்விட்டுப் பேச வைத்தார். ஒருவாறாக விஷயம் வெளிவந்தபோது, அந்த அதிகாரி சிரித்துவிட்டார். வெளியுலகம் தெரியாமல் வளர்ந்த அந்தப் பெண், கணவன் ‘கண்ட கண்ட’ வீடியோக்களைப் பார்த்ததையும் அலமாரியில் சில சி.டி.களை ஒளித்துவைத்திருந்ததையும் பெரிய பிரச்சினையாக்கிவிட்டாள்.

அந்தக் கணவனோ அவளைவிட அப்பாவியாக இருந்தான். அவையனைத்தும் நண்பன் ஒருவன் பரிசாகக் கொடுத்தவை என ஆரம்பத்தில் சமாளித்தவன், பிற்பாடு புதுமனைவியிடம் போதிய தூண்டல் கிடைக்கவில்லை என்பதையும் போட்டுடைத்தான்.

இந்தத் தகவல் அந்தப் பெண்ணுக்கே புதிதாக இருந்தது. அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்திய காவல் அதிகாரி, அடிப்படைப் பாலியல் அறிவும் விழிப்புணர்வும் இல்லாத திருமண பந்தங்களில் எவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன என அவர்களுக்கு விளக்கினார். கணவன், மனைவி இடையே கலந்து பேசி அடுத்தவருக்குச் சஞ்சலமில்லாத வகையில் அந்தரங்க வாழ்க்கையை விட்டுக்கொடுத்து அமைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை தந்து அனுப்பிவைத்தார். அதிகரிக்கும் விவாகரத்து தொடர்பான விவாதமொன்றில் அந்த அதிகாரியே தெரிவித்த தகவல் இது.

சரியா, தவறா?

கணவன், மனைவி இடையிலான அந்தரங்கத்தில் சரி தவறுகளை யார் தீர்மானிப்பது? இருவருமாகக் கூடி பேசியோ புரிந்துகொள்வதன் மூலமாகவோ அவர்களின் அந்தரங்க மேடையில் அங்கீகாரம் பெறுவதையும் உறவுக்கு மேலும் உறுதி சேர்ப்பதையும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளலாம். அல்லது ஓரளவு விட்டுக்கொடுத்தும் பயணத்தைத் தொடரலாம். அதே நேரம் மனரீதியாகவோ உடல் அளவிலோ எல்லை மீறும்போது அவை குடும்ப வன்முறையாக மாறக்கூடும். ஆளுமைக் கோளாறாகும் அந்தரங்கங்கள், மனநிலை பிறழ்ந்த நடவடிக்கைகளைப் பேசியோ மனநல ஆலோசனை மூலமாகவோ தணிக்கவும் இணைக்கு உதவலாம்.

மனத்தடைகள் உடையட்டும்

சிறு வயதிலிருந்து ஊட்டி வளர்க்கப்பட்ட பல நம்பிக்கைகள் மட்டுமல்ல; பாலினப் பாகுபாடும் தம்பதியரின் அந்தரங்க வாழ்வைத் தகர்த்துவிடும். படுக்கையறையில் தொடங்கும் சமத்துவமே இல்லறத்தின் பிற இடுக்குகளிலும் பரவி வெளிச்சமூட்டும். பணிபுரியும் தொழிற்சாலையில் நேர்ந்த ஒரு அசம்பாவித சம்பவத்தில் சுகந்தியின் கணவன் கண்ணனுக்குக் கால் முறிந்துபோனது. மீண்டடெழ ஆறு மாதங்களாகும் என்பதால் சுகந்தி சோர்ந்துபோனாள்.

ஆனால், கண்ணன் கவலைப்படவில்லை. பணியிட விபத்துக்குப் பொறுப்பேற்று ஊதிய விடுப்பு தந்ததுடன் மருத்துவப் பராமரிப்பையும் அலுவலகமே ஏற்றுக்கொண்டதில் அவன் உற்சாகமாக இருந்தான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க இதுதான் வாய்ப்பு என மனைவியைத் தேற்றினான்.

சொன்னது போலவே நெடுநாள் சந்திக்காத உறவினர்கள், பால்ய நண்பர்கள் எனப் பலரிடமும் போனிலும் நேரிலும் பேசி உறவைப் புதுப்பித்தான். குழந்தைகளோடு கதை பேசி விளையாட அதிக நேரம் ஒதுக்கினான். அடிக்கடி மருத்துவர் ஆலோசனைக்குப் போக வேண்டிய அவசியம் இருந்ததால் சுகந்தியை கார் ஓட்டச் சொன்னான்.

தொடக்கத்தில் தயங்கியவள் கணவன் உடனிருக்கும் உத்வேகத்தில் மெல்லப் பழகி, பின்னர் லகுவாகவும் உற்சாகமாகவும் காரை ஓட்ட ஆரம்பித்தாள். அதே போக்கை அரவணைப்பிலும் கணவன் எதிர்பார்த்தபோது சுகந்தி திகைத்துப்போனாள்.

மரபார்ந்த அவளது வளர்ப்பு கணவனுக்கு இணங்கிப் போவதில் மட்டுமே எளிதாக இடம் கொடுத்தது. ஆனால், கணவனின் முடங்கிய உடல்நிலையும் அவன் மீதான பிரியமும் அவளது மனத்தடைகளைப் போக்கின. பின்னாளில் கண்ணன் உடல் தேறிய பிறகும் சுகந்தி பரிபூரண ஆளுமையை உணரச் செய்வதைத் தொடர்ந்தான். இந்தத் தனித்துவப் போக்கு அவர்களது உறவை, ஆண்டுகள் பல கடந்த பின்னரும் புத்துணர்வாக வைத்திருக்கிறது.

அங்கீகாரமும் சுதந்திரமும்

நடைமுறையில் பெரும்பாலான கணவன் -மனைவியின் அந்தரங்க உலகம் பாகுபாடுகளின் குவியலாக இருக்கிறது. ஆணாதிக்கத்தின் பெயரில் அங்கேயும் மண்டி வளரும் களைகள், தனித்திருக்கும் ஒவ்வொரு பொழுதையும் பெண்ணை வெறுப்பின் விளிம்பிலேயே வைத்திருக்கின்றன.

மாறாக, அங்கு போதிய அங்கீகாரமும் சுதந்திரமும் கிடைக்கும்போது, பெண் அடையும் திருப்தி குடும்ப வாழ்க்கையை அலுப்பில்லாது கொண்டுசெல்லும். குழந்தைகள் விரும்பும் ஹாரி பாட்டர் நாவல்களை எழுதிக் குவித்த ஜே.கே.ரவுலிங்கின் நாவல்கள் திரைப்படங்களாக வசூலில் வாரிக் குவித்தது வரலாறு.

அதே இங்கிலாந்திலிருந்து எழுதவந்த எரிக்கா மிச்செல், குறுகிய காலத்திலேயே ரவுலிங்கின் புகழை அடைந்தார். இ.எல்.ஜேம்ஸ் என்ற புனைபெயரில் அவர் எழுதிய ‘ஷேட்ஸ்’ வரிசைப் புத்தகங்கள் ஒரு கட்டத்தில் ஹாரி பாட்டரை முந்தின. ஜேம்ஸ் எழுதியவை அனைத்தும் வயது வந்தவர்கள் உலகத்துக்கான, கடும் ஆட்சேபங்களைச் சம்பாதித்தவை.

ஆனால், பூமியின் எல்லா மூலைகளிலும் விரவிக் கிடக்கும் பாலியல் வறட்சி, அவரது புத்தகங்களைக் கொண்டாடவைத்தது. ‘ஃபிப்டி ஷேட்ஸ்’ வரிசை நாவல்கள் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்ததுடன் அவை திரைப்படமானபோது, அதே ஆண்டில் வெளியான ‘ஹாரிபாட்டர்’ படத்தை வசூலில் முந்தியது.

இறங்கிவருவதும் நல்லது

ஜேம்ஸின் எழுத்துக்களைக் கடுமையாக விமர்சித்தவாறே பலரும் வாசிக்கத் தலைப்பட்டனர். கட்டற்ற கேளிக்கைகளை முன்வைத்த எழுத்தையும் திரைப்படங்களையும் அங்கு ஆண், பெண் பாகுபாடில்லாது கொண்டாடினார்கள். நாவலும் படமும் வெளியாகும்போதெல்லாம் பெரியவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சுடச்சுட விற்றுத் தீர்ந்தன.

ஆடைகள், பானங்கள், உபயோகப்பொருட்கள் போன்றவை நாவல் தலைப்பின் பெயரிலேயே வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ஜேம்ஸ் இவற்றையெல்லாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

நாடு, மொழி, கலாச்சாரம் எதுவானாலும் அனைத்துச் சமூகங்களிலும் ஆண், பெண்ணுக்கான உறவில் ஆண்டுகள் சென்றதும் அலுப்புத் தட்டுவதும் அதுவே பல குடும்பப் பிரச்சினைகளுக்குக் காரணமாவதும் தொடர்கிறது. இதுவே எல்லை மீறும்போது திருமணம் தாண்டிய உறவு, போதைக்கு ஆளாவது போன்ற புதுப்புது பிரச்சினைகள் முளைப்பதையும் பார்க்கிறோம்.

இருவருக்குமிடையில் புரிதலும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்தலும் அவற்றுக்காகச் சற்று இறங்கிவருதலும் இல்லறத்தின் லகான் கை நழுவாதிருக்க உதவும்.

தலையணைப் பேச்சு

மாமியார்கள் உலகில் ‘தலையணை மந்திரம்’ சொல்லாடல் பிரபலமானது. இதன் நேர்மறையாகத் ‘தலையணைப் பேச்சு’ பயன்பாட்டைச் சொல்லலாம். கணவன், மனைவி இருவரும் தங்களது தலையணையில் சாய்ந்திருக்கும் நெருக்கமான பொழுதுகளில் மனம்விட்டுப் பேசுவது நல்லது என்கிறார்கள் குடும்ப நல ஆலோசகர்கள். படுக்கையில் பேசுவது என்றால் பாலியலைத்தான் பேச வேண்டுமென்பதல்ல.

இருவருக்குமிடையே இறுக்கம் தகர்க்கும் எதை வேண்டுமானாலும் பேசலாம். வாழ்வின் போக்கில் எதிர்ப்படும் அலுப்புகள், சங்கடங்கள் ஆகியவற்றை இணையிடம் பகிர்ந்துகொண்டு இதம் பெறலாம். உடல் நலம், பொருளாதாரம் என எதிர்காலம் குறித்துத் திட்டமிடலாம். அவற்றைக் கலந்து பேசி கனவில் பயணிக்கலாம். எதிர்பாராத பரிசுகளை இந்தத் தருணத்தில் வழங்கி மகிழ்வது இரட்டிப்புப் பலன் தரும்.

மனம் இளகும் இந்தப் பேச்சே இருவரின் உறவில் அவ்வப்போது நேரிடும் காயங்களை ஆற்றும் மருந்தாகவும் மாயம் புரியும். இணையின் விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்ளவும் அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவோ தனது விருப்பத்தை மனம் விட்டு வெளிப்படுத்தவோ இந்தத் தலையணைப் பேச்சே மடை திறந்துவிடும். மாறாக, படுக்கையில் விழுந்ததும் இயந்திரமாக மாறுவதும் குறட்டை விட்டு உறங்குவதும் மனமார்ந்த உறவில் ஒருபோதும் மாற்றத்தை விளைவிக்காது.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x