Last Updated : 24 Feb, 2018 06:46 PM

 

Published : 24 Feb 2018 06:46 PM
Last Updated : 24 Feb 2018 06:46 PM

இல்லம் சங்கீதம் 24: காதலால் குறைகளைக் களைவோம்

நதியில் உன் பெயர்

எழுதிமுடிக்கும் முன்பே

நகர்ந்து விட்டிருந்தது

நதியும் பெயரும்.

விரல்களில் உன்

பெயரெச்சம்…

- தமிழ்ப்பறவை

தமிழக அரசியல் களம் சில வாரங்களுக்கு முன்பு ஆண்மைக் குறைவைக் குறிக்கும் Impotent என்ற சொல்லை முன்வைத்து அல்லோலகல்லோலப்பட்டது. பொதுவெளி என்றவுடன் பொங்கி எழுந்த மக்கள், தங்கள் குடும்பத்தில் இந்தப் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் இருப்பதுதான் இன்றும் வாடிக்கை. (கற்பு என்பதைப் போன்றே ஆண்மை, பெண்மை என்பவை வெறும் கற்பிதங்களே.

எனினும், இங்கே புரிந்துகொள்வற்காகவும் குடும்பங்களில் நிலவும் குழந்தையின்மை, கணவன் - மனைவி உறவில் சிக்கல் ஆகிய பிரச்சினைகளுக்கு ஆதாரமான ஆரோக்கியக் குறைவை விவாதிக்க வேண்டிய கட்டாயத்தாலும் வழக்கிலுள்ள ‘ஆண்மைக் குறைவு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவோம்.

இந்தக் கற்பிதங்கள் குறித்து விரிவாகப் பிறகு பேசுவோம்.) ஆண்மைக் குறைவாலும் மலட்டுத் தன்மையாலும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழந்து வாடும் பல குடும்பங்களின் துயர் பற்றிப் பேச இன்றும் நம் சமூகம் தயங்குகிறது. அந்தத் தயக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆண்கள் தங்கள் குறைகளை மூடி மறைப்பதன் மூலம் ஆணாதிக்கத் திமிரைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்.

ஆனால், இவர்களின் இந்தத் திமிருக்குப் பெண்களே பெரும்பாலும் பலிகடாக்கள் ஆகின்றனர். அகங்காரத்தைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு இந்தக் குறையைத் தன் துணையிடம் பகிர்வதன் மூலம் இந்தச் சிக்கலை எளிதில் களைய முடியும்.

ஆண்மைக் குறைவும் மலட்டுத் தன்மையும்

தேவையான தருணத்தில் ஆணின் உடம்பில் போதிய அளவு ரத்தம் பாயாததால் ஏற்படும் செயல் பாதிப்பையே ஆண்மைக் குறைவு என்கிறது மருத்துவம். ஆண் மலட்டுத் தன்மை என்பது உயிரணுக்களின் எண்ணிக்கை, நீந்தும் திறன் உள்ளிட்டவற்றின் பாதிப்புகளைப் பொதுவாகக் குறிக்கும். இந்த இரண்டுக்கும் இவை தவிர்த்த மருத்துவக் காரணங்கள் உண்டென்றாலும், இவையே பிரதானம். குழந்தைப்பேறின்மைக்கு ஆண்மைக் குறைவும் ஒரு காரணமாகலாம். ஆனால், மலட்டுத்தன்மை கொண்ட ஆணால் தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபடவும் முடியலாம்.

ஆண்மைக் குறைவு, பல வீடுகளில் மோசமாகப் புரிந்துகொள்ளப்படுவதோடு தவறாகக் கையாளப்படுகிறது. வெற்றிகரமான மணவாழ்க்கையில் ஈடுபடும் ஆண்களில் பெரும்பாலானோர் இந்தப் பிரச்சினைக்கு அவ்வப்போது ஆளாகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோரில் 50 முதல் 60 சதவீதத்தினரும் 40-க்குக் கீழ் உள்ளவர்களில் 10 சதவீதத்தினரும் ஆண்மைக் குறைவு பிரச்சினையால் அவதிப்படுவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் 30 சதவீத விவாகரத்துகளுக்கு ஆண்மைக் குறைவே காரணம் என்ற மற்றுமோர் ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு என பிரத்யேகமாக மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இருப்பதைப் போல ஆண்களுக்கான தனிப்பட்ட பிரச்சினைகளைக் கையாளும் ஆண்ட்ராலஜி (Andrology) துறையின் சமீபத்திய வளர்ச்சி நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

இது வெறும் உடல் உபாதையே

பிற உடல்நலப் பாதிப்புகளைப் போல ஆண்மைக் குறைவும் ஓர் உபாதையே. ஆண்மைக் குறைவின் பின்னணியில் உடல், மனரீதியிலான பல காரணங்கள் இருக்கின்றன. “தனது சிறு வயதுத் தவறுகள், அவற்றுக்கு எதிராகப் புகட்டப்பட்ட நம்பிக்கைகள் போன்றவற்றை நினைத்து ஆண் மனம் குமைவான்.

இதனால் உண்டாகும் குழப்பங்கள் அந்தப் பாதிப்பை அதிகரிக்கும். இவை தவிர்த்து நரம்பு, ரத்தம் சார்ந்த பல்வேறு உடல் பாதிப்புகளும் வேறு பிரச்சினைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் தற்காலிக ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகக் கூடும்.

நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு, தண்டுவடப் பாதிப்பு போன்ற உடல்நலப் பாதிப்புகளும் மன அழுத்தம், பதற்றம், கவலை போன்ற மனநலச் சிக்கல்களும் இந்தப் பாதிப்பை அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்படுத்தும். மாதத்தில் சீரான உறவுமுறை இல்லாதவர்கள், இல்வாழ்க்கையில் திருப்தியற்றவர்கள், அவை தொடர்பாகக் குடும்ப அமைதி கெடுபவர்கள் ஆகியோர் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிக அவசியம்.

பெரும்பாலானோரின் பிரச்சினைகள் கவுன்சலிங்கின்போதே காணாமல் போய்விடும். மற்றவர்களும் தேவையான மாத்திரைகள் அல்லது சிகிச்சைகள் மூலம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்” என்று நம்பிக்கையளிக்கிறார் மருத்துவர் ராஜாராம்.

மாற்றம்தரும் மனநல ஆலோசனை

ஆண்கள் பக்குவமற்று, தனக்கு நேரும் பிரச்சினையை வெளிப்படுத்தத் தயங்கி அதை மறைக்க மனைவி மீது பழி போடுவது குடும்பத்தின் அமைதியைக் குலைக்கும். ஆண் தனது ஈகோவுக்கு விழுந்த அடியாக நினைத்து வீம்பு காட்டுவது தலைவலியுடன் திருகுவலியைச் சேர்க்கும்.

ஆண்மைக் குறைவால் தன்னம்பிக்கைக் குறைவு, பணியில் ஈடுபாடின்மை என தாம்பத்திய உறவுக்கு அப்பால் ஆணுக்கு நேரும் சமூகப் பாதிப்புகள் அதிகம். இருந்தாலும், இந்தப் பிரச்சினையால் ஆணுக்கு ஏற்படும் பாதிப்பைவிட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புதான் அதிகம்.

இது அவளுக்குப் பகிர்ந்துகொள்ள முடியாத பல சங்கடங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழல் மிகவும் கடினமானது என்பதால், இதைப் பக்குவமாக எதிர்கொள்ளும் பெண்கள் மிகக் குறைவு. குறிப்பாக, மத்திய வயதினரைவிட இள வயது தம்பதியினர் மத்தியில் வெடிக்கும் பிரச்சினை குடும்பத்தில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்துகின்றன.

பிரச்சினை தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரும் பேசுவதைத் தவிர்த்து விலகிச் செல்வது இருவருக்கு மத்தியிலும் சுவரை எழுப்பிவிடும். எனவே, பிரச்சினையையும் அது தரும் வேதனையையும் உள்வாங்கிக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதே சரியான வழிமுறை. எக்காரணத்தைக் கொண்டும் இந்தப் பிரச்சினை குடும்பத்தின் இதர அம்சங்களில் புதிய அவதாரம் எடுத்து வேறொரு பிரச்சினையாக வெளிப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொறுப்பற்ற மூன்றாம் நபரிடம் ஆலோசனை கேட்பதோ முறையற்ற மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று உடலைக் கெடுத்துக்கொள்வதோ பாதிப்புகளை மேலும் அதிகரித்து நிம்மதியை முற்றிலும் குலைக்கும். எனவே, பேச்சின் மூலமாக ஆறுதலையும் அரவணைப்பையும் பெற்று, அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்குத் தம்பதியர் ஒருவருக்கு மற்றொருவர் உதவிக்கொள்ள வேண்டும். அது இயலாதபட்சத்தில் குடும்ப, மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தடுமாற்றங்கள், குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரலாம்.

கடைத்தேற உதவும் காதல்

ஆண்மைக் குறைவு என்பது குறிப்பிட்ட ஓர் உறுப்பு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. மூளையும் இதயமும் துணை நின்றால் மட்டுமே மீண்டெழ முடியும். மத்திய வயது தம்பதிகள் முன்கூட்டியே இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கித் தங்களை மனரீதியாகத் தயார் செய்துகொள்வது நல்லது. சீரான உணவுப் பழக்கத்துடன் தொடர்ச்சியான உடற்பயிற்சி உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். புகைப் பழக்கம் நேரடியாக ரத்த நாளங்களைப் பாதிக்கும் என்பதால் புகை உள்ளிட்ட போதை வஸ்துக்களைத் தவிர்ப்பது நல்லது.

வளர்ந்த குழந்தைகள், பொருளாதாரம், பணி, வீட்டுச் சூழல்களின் இறுக்கம் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தரும் மன அழுத்தம் காரணமாகத் திருமணமான புதிதில் இருக்கும் மனமொத்த கூடல் கால ஓட்டத்தில் குறைந்துபோகும். தாம்பத்திய உறவுக்கு எனச் சிரத்தையெடுத்துப் போதிய சூழலை உருவாக்குவது, மனம்விட்டுப் பேசுவது, பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பது, முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலம் இனிய இல்லறத்தை மறு அவதாரம் எடுக்கவைக்கலாம். இதன்மூலம் புற அழகும் அது குறித்த ஒப்பிடல்களும் முற்றிலும் மறைந்துபோகக் கூடும். தம்பதியின் பரஸ்பர புரிதலுக்கு விட்டுக்கொடுத்தலுக்கும் வழிசெய்யும் திருப்தியே போதுமானது என்ற மன முதிர்ச்சியும் ஏற்படும்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x