Published : 20 Feb 2018 11:26 AM
Last Updated : 20 Feb 2018 11:26 AM
புழக்கத்தில் உள்ள மொழிகளில் 4 சதவீத மொழிகளைத்தான் உலக மக்களில் 97 சதவீதத்தினர் பேசுகிறார்கள். மீதமுள்ள 96 சதவீத மொழிகளைப் பேசும் மக்கள் உலக மக்கள்தொகையில் வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே என்று சமீபத்தில் நடந்த ஐ.நா. மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி பேச்சுவழக்கில் இருந்து முற்றிலுமாக அழிந்துபோகிறது என்று அதிர்ச்சியூட்டும் தகவலும் அந்த மாநாட்டில் வெளியானது.
மொழிக்கு மரண சாசனம்
அதெப்படி, ஒருசிலர் கூடப் பேசாத அளவுக்கு ஒரு மொழி முற்றிலுமாக அழிந்துபோகும் என்ற சந்தேகம் எழலாம். ஒரு சிறிய பகுதியில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கும் மக்கள் பேசும் மொழி ஒன்று இருக்குமானால், அப்பகுதியில் நிகழும் போர் மரணங்கள், அந்த மொழிக்கும் சேர்த்து மரண சாசனம் எழுதிவிடும். நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கும்போது, அவை மொழிகளையும் சேர்த்து அழித்துவிடுகின்றன.
உதாரணமாக, 2004-ல் சுமத்ரா, இந்தோனேசியா கடற்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமியால் பலியான மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 30 ஆயிரம். அதேபோல, உலகின் ஒரு பகுதியிலிருந்து, இன்னொரு புதிய பகுதிக்குச் செல்லும் புதியவர்கள் மூலமாகச் செல்லும் ஆபத்தான தொற்றுநோய்கள் ஆயிரக்கணக்கில் உயிர் பலி வாங்கும்போது, சில தருணங்களில், அம்மக்கள் பேசிய உள்ளூர் மொழியையும் சேர்த்துப் பலி வாங்கிவிடுகின்றன.
இனப்படுகொலையும் அந்நிய மோகமும்
அந்நிய நாட்டின் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை பெற்றாலும் அந்நிய மொழியின் ஆதிக்கம் அதிகரித்து, மண்ணின் மொழி காலப்போக்கில் மறைந்துவிடுவதுண்டு. உள்நாட்டுப் போராலும் இதுபோன்ற பயங்கரம் நடந்துவருகிறது. 1932-ல் எல் சால்வடார் நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் கிட்டத்தட்ட 30,000 லெங்கா, காகவிரா, நஹுவா பிபில் ஆகிய பழங்குடி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனால், போதான், பிஸ்பி ஆகிய அவர்களுடைய மொழிகளும் அழிவை நோக்கித் தள்ளப்பட்டன.
இதைவிட மோசம், அந்நிய மொழி மோகத்தால் தங்கள் சொந்த மொழியைப் புறக்கணிப்பது. ஒரு நாட்டில், ஒரு சிறிய பகுதியில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாகப் பேசிவந்த மொழிகளுக்குப் பதிலாகச் சமூக அந்தஸ்து காரணமாக ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளை நவீனம் என்ற பெயரில் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கிறார்கள்.
நாளடைவில் அவர்களின் தாய்மொழிச் சொற்கள் மறந்துபோய், சரளமாகப் பேச முடியாத நிலைமை உருவாகி, அடுத்தடுத்த தலைமுறையினரை அந்த மொழி சென்றடையாமல் மறையும் பரிதாபமும் நிகழ்கிறது.
“மொழியே மனித இனத்தின் பேச்சுக் கருவி. அறிவு, கருத்து, எண்ணப் பரிமாற்றத்துக்கு மொழி அவசியம். மனித குலத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் வாகனம் மொழியே. எனவே, பன்மொழிகளை அழியாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம், அவசரம்” என்கிறார்கள் யுனெஸ்கோவின் மொழியியல் அறிஞர்கள்.
அழியும் அபாயத்திலிருக்கும் ஆறு மொழிகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT