Published : 05 Aug 2014 02:48 PM
Last Updated : 05 Aug 2014 02:48 PM

இயற்கை தந்த அற்புத வரம்

விளையாட்டில் ஒரே ஒரு பந்துகூட வெற்றியைத் தீர்மானித்துவிடும். அதேபோல குழந்தையின் வெற்றிகரமான வளர்ச்சிக்கான முதல்படி தாய்ப்பால் ஊட்டுவது தான்! வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அனுசரிக்கப் படும் உலக தாய்ப்பால் வாரத்தின் இந்த ஆண்டுக்கான மையக் கருத்து ‘Breast feeding - A Winning goal for life'.

புத்தாயிரம் ஆண்டில் ‘புத்தாயிர வளர்ச்சி இலக்குகள்' (Millenium Development Goals - MDG) என்ற பெயரில் மக்களின் நல்வாழ்வுக்கான முக்கியச் செயல்பாடுகள், தரக்குறியீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை 2015-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற முனைப்புடன் ஐக்கிய நாடுகள் சபை செயல்பட்டு வருகிறது.

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டும் தந்து, பிறகு இணை உணவுடன் தாய்ப்பாலும் சேர்த்துத் தரப்பட்டால், எம்.டி.ஜி. குறியீடுகளை எளிதாக அடையலாம் என்பதை விளக்குவதே இந்த வருடத்தின் மையக் கருத்து:

பசியைப் போக்கும்

குழந்தையின் பசியைப் போக்கவல்லது தாய்ப்பால். குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளன. அதில் செறிந்திருக்கும் புரதச்சத்து, நுண்ணூட்டச் சத்துகள், லாக்டோஸ் மாவுச்சத்து, கொழுப்பு வகைகள் போன்றவை குழந்தை வளர்ச்சிக்குக் கட்டாயம் தேவை. முறைப்படி தாய்ப்பால் தரப்பட்டால் 40 சதவீதக் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். தாய்ப்பால் இயற்கையானது, செலவில்லாததும்கூட. வறுமையில் வாடும் தாய்கூடத் தாய்ப்பால் மூலம் தன் குழந்தைக்கு இயற்கையான ஊட்டச்சத்தைத் தர முடியும்.

அறிவு வளர்ச்சி

தாய்ப்பால் தருவதால் அம்மா வுக்கும் குழந்தைக்கும் பாசப் பிணைப்பு ஏற்பட்டு Taurine, Cystine போன்ற அமினோ அமிலங்கள், Decosa hexainoic acid (DHA) எனப் படும் கொழுப்புச்சத்து போன்றவை கிடைக்கும். இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரித்து ஐ.க்யூ. பெருகுகிறது. இது கல்வி கற்பதில் ஈடுபாட்டை அதிகரிக்கும்.

சுயமதிப்பு

பொதுவாகத் தாய், தன் குழந்தைகளிடையே ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லை. குழந்தையை மார்போடு அணைத்துப் பால் தரும் பெருமையும் உரிமையும் தாய்க்கு மட்டுமே உரியது. தாய்ப்பால் இயற்கையின் பரிசு! இதனால் தாயின் சுயமதிப்பு (Self Esteem) அதிகரிக்கும். அத்துடன், வீட்டில் குழந்தைக்கு உணவு தயாரித்துத் தருவதும் தாய்தான். இதன்மூலம் தன் ஆளுமையைத் தாய் பெரிதாக உணர்கிறாள்.

இறப்பைத் தடுப்பது

குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் சீம்பால் தருவதால் 10 லட்சம் குழந்தைகள் இறந்துபோவதைத் தடுக்கலாம். சீம்பாலில் தொடங்கி 6 மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டுமே தருவதால், குழந்தையின் உடலில் அதிகமான நோய் எதிர்ப்புச்சக்தி சேரும். வயிற்றுப்போக்கு, சுவாசப் பாதை தொற்று, காதில் சீழ் வடிதல், தோல் தொற்று போன்றவை தடுக்கப்படும். முக்கிய மருத்துவ இதழான லான்செட்டில் வெளியான ஒரு கட்டுரையின்படி, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவு.

தாய் நலம்

தாய்ப்பால் தரும் தாய்க்கு, பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதிக உதிரப் போக்கு (Post Partum Hemorrhage) தடுக்கப்படுகிறது. தாய்க்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பைப் புற்றுநோய், எலும்புச் சத்துக்குறைவு (Osteoporosis) போன்ற நோய்கள் வெகுவாகக் குறையும். தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் நலமும் காக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

தாய்ப்பால் தருவதால் தண்ணீர், எரிபொருள் சேமிக்கப்படுகிறது. பிளாஸ்டிக், அலுமினியக் கழிவுகள் குறைகின்றன. பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை, அதைச் சந்தைப்படுத்துவதற்கான போக்கு வரத்து போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் குறையும்.

நமது எதிர்காலத் தலைமுறை யைக் காப்பாற்றும் தாய்ப்பாலுக்கான வார விழாவை வெற்றிபெறச் செய்ய நாமும் கைகொடுப்போம்.

கட்டுரையாளர், குழந்தைகள் மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர்

தொடர்புக்கு: gangs.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x