Published : 31 Jan 2018 11:41 AM
Last Updated : 31 Jan 2018 11:41 AM

வியப்பூட்டும் இந்தியா (நிறைவுப் பகுதி): மாத்தூர் தொட்டிப் பாலம்

வறட்சியிலிருந்து தப்பிக்கவும் விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் கட்டப்பட்டது மாத்தூர் தொட்டிப் பாலம். இதைத் தொங்கும் கால்வாய் என்றும் தொட்டில் பாலம் என்றும் கூட அழைக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்தத் தொட்டிப் பாலம், தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகிறது.

thottipalamright

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மகேந்திரகிரி மலையில் உற்பத்தியாகிறது பறளியாறு. அருகில் இருந்த மலைகளால் இந்த ஆறு மாத்தூர் பகுதில் பாய முடியாமல் போனது. இதனால் வறட்சி ஏற்பட்டது. கணியான் மலையையும் கூட்டு வாயுப்பாறை மலையையும் ஒரு கால்வாய் மூலம் இணைத்தால், நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு வளம் பெறும் என்ற எண்ணத்தில் இந்தத் தொட்டிப் பாலம் கட்டப்பட்டது.

1962-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த காமராஜரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொட்டிப் பாலம், 1969-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பாலத்தின் நீளம் 1204 அடிகள். உயரம் 104 அடிகள். 28 தூண்கள் இந்தத் தொட்டிப் பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 32 அடி சுற்றளவு கொண்டது. இந்தப் பாலம் வழியாகத் தண்ணீர், ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

கால்வாய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கால்வாய் மேல் கான்கிரீட் பலகைகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் அந்தக் கால்வாய் மீது நடந்து செல்கிறார்கள்.

31CHSUJ_MATHUR1

தண்ணீர் செல்லும் பகுதியில் பெரிய பெரிய தொட்டிகளாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொட்டியும் ஏழு அடி அகலமும் ஏழு அடி உயரமும் உள்ளது. இரு மலைகளுக்கு இடையே தொட்டில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருப்பதால், இது தொட்டில் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வழியாக வரும் நீர் கல்குளம், விலவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் நீர்பாசனத்துக்குப் பயன்படுகிறது.

மாத்தூர் தொட்டிப் பாலத்தால் பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மாற்றியப் பெருமை மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு உண்டு.

பாலத்தின் மேல் நின்று எங்கு நோக்கினாலும் பசுமையாகவே காணப்படுகிறது. தென்னை, ரப்பர், வாழை மரங்களும், நெல் வயல்களும் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன. பாலத்திலிருந்து இறங்க படிகள் உள்ளன. குழந்தைகள் விளையாட ஒரு சிறிய பூங்காவும் குளியலறைகளும் இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமான இந்த மாத்தூர் தொட்டிப் பாலத்தை அவசியம் ஒருமுறை காண வேண்டும்!

தொடர்புக்கு: mangai.teach@gmail.com
நிறைவுற்றது

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x