Published : 14 Jan 2018 11:03 AM
Last Updated : 14 Jan 2018 11:03 AM

விவாதக் களம்: ஆண்கள் திருந்தும் நாளே பெண்ணுக்குத் திருநாள்

டந்த வாரம் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுத்தளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய, ‘பெண்களைத் துரத்தும் நெருப்பு’ கட்டுரையையொட்டி, பெண்களைப் பார்த்ததுமே விழித்துக்கொள்கிற ஆண் மனம் குறித்துக் கேட்டிருந்தோம். பெண்களை எப்போதும் துரத்தும் இந்த நெருப்பில் இருந்து பெண்கள் எப்படி மீள்வது என்றும் கேட்டிருந்தோம். ஆண்களாகத் திருந்தினால்தான் உண்டு எனப் பலரும் சொல்லியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு...

ல நேரங்களில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை என்பதே வேதனையான உண்மை. ஆண் எப்படி விரும்பினாலும் இசைந்து போக வேண்டும் எனத் தமது மகளுக்கு அறிவுரை சொல்லும் தாய்மார்களே இன்றும் நம் சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள். பெண்களுக்குரிய இடம் அவர்களுக்கு இன்னமும் முழுதாகத் தரப்படவில்லை. பெண்களின் விருப்பத்தை அறிந்து அணுகுவதே ஆண்மைக்கு அழகு என்பதை ஆண்கள் உணர வேண்டும். ஒரு பெண்ணுக்குத் தன் விருப்பத்தை மீறி ஆட்கொள்ளப்படுவது போன்ற கொடுமை வேறில்லை. திரையரங்கின் இருளில் இடுப்பில் தடவிய கைகளால் அருவருப்பு கொண்டு வீட்டுக்கு வந்த கையோடு குளித்துப் பல நாட்கள் மன உளைச்சலோடு அலைந்த தோழியின் நினைவு இன்றும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

- இரா.பொன்னரசி, வேலூர்.

ணின் காமம் ஒரு பெண்ணின் மீது முதலில் பார்வையின் வழியே பாய்கிறது. வக்கிர எண்ணம் கொண்ட ஆணின் கண்களாலேயே பெண் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதும் உண்டு. ஒரு பெண்ணைப் பார்க்கும்போது காமம் மறைந்து சகோதரியாகவும் தாயாகவும் பார்க்கும் நிலை என்று வருகிறதோ அன்றுதான் பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படும். சுதந்திரமாக வெளியே வரும் பெண் எதற்கும் துணிந்து சம்மதிப்பாள் எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களே இங்கு அதிகம். திருமணப் பந்தத்தில் இணைந்து வாழும் ஆண், பெண்ணின் காமம் வரைமுறையுடன் இருக்கும்வரை பிரச்சினையில்லை. எல்லையற்ற காமமே அப்பாவிப் பெண்களை விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.

ஆண்களின் பாலியல் உணர்வைத் தூண்ட உதவும் வலைத்தளங்கள் இங்கு ஏராளம். இவற்றை மீறி ஒரு ஆண் வளர்க்கப்படும் முறையே அவனைப் பெண்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது.

பெற்றோர் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் மகனுடன் கழிக்க வேண்டும். பார்க்கும் பெண்களின் மீதான மதிப்பை அதிகரிக்க அவர்களைத் தங்கள் தாயின் இடத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் மகனுக்கு நல்ல வழிகாட்டியாகவும் பெண்ணின் வலிகளை உணர்த்தி நல்ல ஆசானாகவும் மாற வேண்டும். பொதுவெளிகளில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டுப் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆண்களைத் தகுந்த தண்டனைகள் மூலம் எச்சரிக்கலாம்.

- சுபா, சேலம்.

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இரவு, பகல், நேரம், காலம் போன்றவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எப்போது ஓர் ஆண் ஒரு பெண்ணால் தன்னை எதிர்க்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறானோ அப்போதுதான் அவன் இந்த வக்கிரத்தைச் செய்யத் துணிகிறான். பெண்ணைப் போகப் பொருளாக நினைப்பது, அவளைப் பலவீனமானவளாக எண்ணுவது ஆகியவற்றின் விளைவுதான் இது. அதனால் பெண்கள் உடலளவிலும் பலமானவர்கள் என்று புரியவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சில ஆண்டுகளுக்கு முன் என் நெருங்கிய தோழி ஒருவர் இரவு எட்டு மணியளவில் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டுமே இருந்த பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவன் ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை தோழியிடம் நீட்டி தவறாகப் பேசியிருக்கிறான். அவ்வளவுதான். என் தோழி பதறிப்போய் அருகில் நின்றிருந்த ஆட்டோவில் தாவி ஏறி, கை கால்கள் நடுங்க வீட்டுக்குப் போயிருக்கிறார். பல நாட்கள் காய்ச்சலுக்குப் பிறகு உடம்பு தேறினாலும் மனம் தேறப் பல மாதங்கள் பிடித்தன. எத்தனையோ பேர் அங்கு நின்றிருக்கத் தன்னிடம் அவன் அப்படிக் கேட்டதால் தன்னிடம்தான் ஏதோ குறை உள்ளதைப் போல் அவர் குமைந்ததைத்தான் தாங்கவே முடியவில்லை. குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும் அப்பாவிகள் அவதிப்படுவதையும் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. பெண்ணின் உடல் வலிமையைப் புரியவைப்பதுடன் ஊடகங்களும் தைரியமான பெண்களை அடிக்கடி வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் நிலை வந்தால் இத்தகைய கொடூரங்கள் குறையக்கூடும்.

- ஜே.லூர்து, மதுரை.

லை குனிந்து நட, அதுதான் பெண்ணுக்கு அழகு என்று சொல்லிச் சொல்லியே பெண்ணினத்துக்குத் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டோம். அதனால்தான் பிரச்சினையெனும் வெயிலைத் தாங்க முடியாத முதுகெலும்பற்ற புழுவாகப் பெண் துடித்துப்போகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அனைத்தும் புனைகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். எதையும் எதிர்த்து நிற்கச் சொல்லிப் பெண்களைத் துணிச்சலோடு வளர்க்க வேண்டும்.

- எஸ். சரோஜா சங்கரலிங்கம்,காமாட்சிபுரம்.

பெண்களைத் தகாத வார்த்தைகளால் புண்படுத்தும் கூட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தி சொன்ன காலத்துக்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ? ஆண் குழந்தைகளை நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம்.

பெண்கள் எந்த அளவுக்குத் துணிச்சலோடு எதிர்க்கிறார்களோ அப்போதுதான் அந்த நெருப்பு விலகி மட்டுமல்லே விட்டே ஓடிவிடும். சட்டப் பாதுகாப்பைவிட சுய பாதுகாப்பும் சில வேளைகளில் அவசியம்.

Vivadham -2right

- பொன்.கருணாநிதி, கோட்டூர்.

ந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒவ்வொரு வீட்டிலும் இருந்துதான் தொடங்க வேண்டும். பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கும் சமூகம், ஆண்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதில்லை. எப்போதும் பெண்களின் கட்டுப்பாடு குறித்தும் சுய பாதுகாப்பு குறித்தும் பேசும் நாம், ஆண்களிடம் இருக்க வேண்டிய நல்லொழுக்கம் குறித்து வாயே திறப்பதில்லை. ஆணின் தேவைக்காகப் பிறந்தவள் அல்ல பெண் என்பது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் புரிகிற நாளில்தான் இந்த நெருப்பு அணையும்.

- பிரதீபா.

ண், பெண் உறவு இன்று எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், சில ஆண்கள் பெண்கள் மீது நடத்தும் அருவருக்கத்தக்கச் செயல்பாடுகளை மன்னிக்கவே முடியாது. கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உறவுசார் ஆலோசனைகள் வழங்கலாம். வளர்ந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் அளிக்கலாம்.

- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தாய்வழிச் சமூக அமைப்பு உடையாமல் இருக்கிற இடங்களில் பெண்ணுக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ராகுல சாங்கிருத்யாயன் போன்றோரின் எழுத்துகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. உடையிலும் பெயரிலும்கூட ஆண், பெண் வேறுபாடு இருக்கக் கூடாதெனப் பெரியார் சொன்னார். இதெல்லாம் நடக்கிற நாள்தான் பெண்களுக்கான திருநாளாக அமையும்.

- சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

பெண் சமூகத்தையே எரிக்கும் நெருப்பாக ஆண் மனம் செயல்பட ஊடகங்களும் தொலைக்காட்சியும் காரணமாக இருக்கின்றன. போதுமான புரிதல் இல்லாமல் விதைக்கப்படுகிற சிறுபொறிதான் நாளடைவில் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டு எரிகிறது.

- உஷா முத்துராமன், திருநகர்.

வாய்ப்பு கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் ராமன்தான் என்ற சொலவடை, ஆண்களின் மனோபாவத்துக்குச் சான்று. இந்தப் பழமொழி ஆண்களுக்கு அவமானமாக இல்லையா? தன் ரத்த உறவுகளைப் பார்த்து விழித்துக்கொள்ளாத ஆண் மனம், பிற பெண்களைப் பார்த்ததும் விழித்துக்கொள்ளுமா? பெண்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் மனோபாவத்தை யார் மாற்ற வேண்டும்?

பெண்ணை உடலாக, சதையாக மட்டுமே நினைக்கும் கேவலமான மனப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கணவன் என்ற ஒரே காரணத்துக்காக வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனோபாவத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்களைத் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லாமல் இந்தச் சமுதாயம் திருந்த வேண்டும். பெண் இரண்டாம் பாலினம் என்ற கருத்து மாற வேண்டும். பாலியல் சார்ந்த ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகங்களில் நடத்தப்பட வேண்டும். இதைக் கேலிச்சிரிப்புடன் பார்க்காமல் அறிவுபூர்வமாக அணுகித் தீர்வு காண வேண்டும்.

சிறுவயது முதலே பெண் என்பவள் சக உயிர், என்ற உணர்வை உணவோடு ஊட்டி ஆண்களை வளர்க்க வேண்டும். குடும்பத்திலுள்ள பெண்களை ஓர் ஆண் எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பார்த்துத்தான் அந்த வீட்டு ஆண் குழந்தை கற்றுக்கொள்கிறான். முதலில் குடும்பத்தைச் சீர்திருத்துவோம். மெல்ல மெல்லச் சமுதாய மாற்றம் தானே நிகழும்.

- தேஜஸ், கோவை.

ண், பெண் இருவரும் மனிதப் பிறவி என்றாலும் ஆண், பெண்ணைச் சீண்டுவதையும் தீண்டுவதையுமே விரும்புகிறான். மனைவி என்றாலும் மனம் விரும்பிய போதெல்லாம் அவளை இச்சைக்கு ஆட்படுத்திக்கொள்கிறான். வெளியில் பிற பெண்களைக் கண்டாலும் அவன் சபலப்படாமல் இருப்பதில்லை. பேச வாய்ப்பில்லாத பெண்களை உரசிப் பார்க்க முயல்கிறான். பேச வாய்ப்புள்ள பெண்களிடம் உரையாடலிலேயே உறவாடிவிடுகிறான். பெண்கள் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது.

- பொன். குமார், சேலம்.

பெண்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது இயல்பானது. பாலியல் ஈர்ப்பின் தன்மை ஆணுக்கு ஆண் வேறுபடுகிறது. அது வரம்பைத் தாண்டும்போது தவறான செயல்களில் ஈடுபடவைக்கிறது. எல்லா ஆண்களையும் நல்லவர்களாகப் பார்ப்பதைத் தவிர்த்து ஆண்களின் இயல்பு அறிந்து எச்சரிக்கை உணர்வுடன் கையாள்வதே புத்திசாலித்தனம்.

- கே.ராமனாதன், மதுரை.

ல்லா ஆண்களிடமும் அந்த நெருப்பு இல்லை. சில ஆண்கள் பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள். இன்னும் மிகச் சொற்பமான ஆண்கள் பெண்ணோடு தனித்திருக்கும்போதும் பண்பாடு தவறுவதில்லை. ஆனால், பெரும்பாலான ஆண்களின் காமப்பார்வையும் ஆக்டோபஸ் கரங்களும் பெண்ணைச் சுற்றுகின்றன. எத்தனை வயதானாலும் ஆணின் கீழ்த்தர வக்கிரம் குறைவதே இல்லை. இந்தப் பிரச்சினையைச் சட்டம் சார்ந்து பார்க்காமல் உளவியல்ரீதியாகப் பார்த்தால் இணை தேடும் மிருக உணர்வின் நீட்சி எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், கல்வியாலும் வளர்ப்பாலும் போதனையாலும் இந்த உணர்வைக் கட்டுக்குள் வைக்கவும் கண்ணியம் காக்கவும் முடியும். பாதிப்புக்குள்ளாகும் பெண்ணின் மௌனமே அத்துமீறும் ஆண்களுக்கு வசதியாகிவிடுகிறது. முதல் தொடுதலின்போதே எச்சரிப்பது அல்லது பெற்றோரிடமோ உரிய இடத்திலோ புகார் செய்வது பாதுகாப்பு.

திரைப்படங்கள் காலம் காலமாகப் பெண்ணைக் கிண்டல் செய்வதே காதலுக்கு அடித்தளம் என்று காட்சிப்படுத்தி இளைஞர்களின் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டன. பெண்களைக் கிண்டல் செய்தல், பின்தொடர்தல் இவற்றுக்கெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், கடுந்தண்டனையும் உண்டு. ஆண்களின் வக்கிரப் போக்கு மாறாதவரை, மாற்றப்படாதவரை இதுவே தீர்வு.

- ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

டக்கிவைக்கப்பட்ட காமம் ஒரு சிலரிடம் அடங்காமல் போய்விடுகிறது. பார்த்தவுடன் காமம் என்று சொல்வதைவிட அதை அப்போதே அடைய வேண்டும் என்ற வெறிதான் சில ஆண்களிடம் கூடவே பிறந்துவிடுகிறது. அதுதான் இதுபோன்ற செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. பெண் எதிர்த்துப் பேசமாட்டாள் என்ற தைரியம்தான் இவர்களுக்கான முதலீடு. இந்த நெருப்பைப் பகிரங்கமாகப் பொதுத்தளங்களில் போட்டுடைத்துச் சீர் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. பெண்கள் துணிய வேண்டும்.

- பி.கே. ஜீவன், கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x