Last Updated : 14 Jul, 2014 10:00 AM

 

Published : 14 Jul 2014 10:00 AM
Last Updated : 14 Jul 2014 10:00 AM

யாருக்கு என்ன தொழில்?

ஒரு சின்ன விளையாட்டு. கீழே ஒருவரது இயல்பு, திறமை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழே சில துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. யாருக்கு எந்தத் துறை பொருந்தும் என்று சொல்லுங்களேன்.

கிருத்திகா

கிருத்திகா மற்றவர்களை எப்பொழுதும் அக்கறையுடன் கவனித்துக்கொள்வாள். குறிப்பாக துன்பமும், வலியும் உடையவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வாள். வீட்டில், பாட்டிக்கு அவள்தான் எல்லா உதவிகளையும் செய்வாள். அவளுக்கு நேரம் கிடைக்கும்போது, தானாகவே மருத்துவமனைக்குச் சென்று கஷ்டப்படும் நோயாளிகளுக்குச் சேவை செய்வாள். பிரச்சனை ஏற்படும்போது அவளுடைய நண்பர்கள் இவளிடம்தான் ஆலோசனையும் உதவியும் கேட்டு வருவார்கள்.

எந்த வேலை கிருத்திகாவுக்குப் பொருந்தும்?

அ. ஆசிரியர்

ஆ. சமூகப் பணியாளர்

இ. மருத்துவமனை நிர்வாகி

ஈ. நர்ஸ்

உ. மருத்துவர்

இதில் ஆசிரியர் என்பது கிருத்திகாவுக்குப் பொருந்தாது என்பதை எல்லோருமே சொல்லிவிடுவீர்கள். மருத்துவ மனை நிர்வாகியாக இருப்பதை விட மருத்துவச் சேவையே கிருத்திகாவின் சுபாவத்துக்குப் பொருத்தமானது என்பதையும் சொல்லிவிடுவீர்கள். மருத்துவர் அல்லது நர்ஸ் அல்லது சமூகப் பணியாளர் ஆகிய துறைகள் அவளுக்குப் பொருத்தமானவை அல்லவா? இவற்றில் எது மிகவும் பொருத் தமானது?மருத்துவம் என்னும் தொழில் அடிப்படையில் ஒரு சேவைதான். ஆனால் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டு மென்றால் பிறர் மீது அக்கறை இருந்தால் மட்டும் போதாது. மருத்துவத் துறையில் பட்டம் பெற வேண்டும். அறிவியல் பாடங்களில் மிகச் சிறப்பான மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கான திறமை கிருத்திகாவுக்கு இருக்கிறதா என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் தெரியவில்லை. எனவே மருத்துவர் என்பது அவளுக்கு மிகவும் பொருத்தமானது என்று சொல்ல முடியாது.செவிலியர் தொழிலும் சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் அதற்கும் மருத்துவத்தில் ஓரளவு படிக்க வேண்டும். இந்தப் படிப்புக்கான விருப்பமும் திறமையும் இருக்க வேண்டும். அது கிருத்திகாவுக்கு இருக்கிறதா என்பதும் இந்தக் குறிப்பிலிருந்து தெரியவில்லை. மீதி இருப்பது சமூகப் பணியாளர். இது குறிப்பிட்ட எந்தத் துறையையும் சாராதது. சரியாகச் சொல்லப்போனால் எல்லாத் துறைகளுடனும் தொடர்பு கொண்டது. எங்கு யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் அங்கே சென்று தொண்டாற்றுவதுதான் சேவை மனப்பான்மை. கிருத்திகா தன் பாட்டிக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறாள். நோயாளிகளைத் தானாகவே சென்று கவனிக் கிறாள். அனைவரிடமும் அன்பும் அக்கறையும் காட்டுகிறாள். மருத்துவத் துறை அல்லது பணியாளர் துறை என எந்தக் குறிப்பிட்ட துறையிலும் அவளுக்கு விசேஷமான ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே சமூகப் பணி என்னும் துறையை அவள் தேர்ந்தெடுத்து அதில் தன் திறமையை அதிகரித்துக்கொள்வதே அவளுக்குச் சிறந்த தேர்வு.மருத்துவராகவோ செவிலி யாகவோ கிருத்திகாவால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். ஆனால் அப்படி ஆவதற்கான ஆர்வமும் திறமையும் அவளுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், எல்லாத் துறைகளுக்கும் வாழ்வின் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம் அவளுக்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதுதான் தொண்டுள்ளம். அதையே தன் தொழிலாக அவள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சமூக சேவைக்கான பட்டப் படிப்புகள் இன்று இருக்கின்றன. பல்வேறு துறைகளில் இதற்கான வேலைகளும் கிடைக்கின்றன. கிருத்திகாவே சொந்தமாக ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தலாம். அதற்குப் பெரிய செலவு எதுவும் ஆகாது.

லாரன்ஸ்

லாரன்ஸ் நன்றாக எழுதுவான். அவன் எழுதியவை அவனது பள்ளி, கல்லூரி மலர்களில் வெளியாகியுள்ளன. தினசரி பேப்பர் படிப்பது, புத்தகங்கள் படிப்பது, படித்த விஷயங்கள் பற்றி விவாதிப்பது ஆகியவை அவன் பழக்கம். எப்போதும் வித விதமான பத்திரிகைகள் பற்றியும் அவற்றின் உள்ளடக்கம் பற்றியும் விவாதிப்பான். இந்த வாரம் இந்தப் பத்திரிகையில் இதுதான் கவர் ஸ்டோரியாக வரும் பாருங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பது அவனுக்குச் சுவையான பொழுதுபோக்கு.

அண்மையில் அச்சகம் ஒன்றுக்குச் சென்ற அவன் அங்கே பத்திரிகைகள் அச்சிடும் முறைகள் பற்றி ஆர்வத்துடன் விசாரித்துக்கொண்டிருந்தான். அச்சுத் தொழில்நுட்பம், வெவ்வேறு அளவுகளில் பத்திரிகைகளை அச்சடிப்பதற்கான இயந்திரங்கள், வண்ண அச்சாக்கம், கறுப்பு வெள்ளை அச்சாக்கம் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்துகொண்டான். அச்சகத்தில் உள்ள வடிவமைப்பாளரிடமும் ஆர்வத்துடன் பேசினான்.

லாரன்ஸுக்குப் பொருத்தமான துறை எது என்று நினைக்கிறீர்கள்?

அ. பயோ டெக்னாலஜி

ஆ. பிரிண்டிங் டெக்னாலஜி

இ. அச்சக நிர்வாகி

ஈ. வடிவமைப்பு

உ. பத்திரிகையாளர்

இந்தத் தேர்வுகளில் பயோ டெக்னாலஜி அவனுக்குச் சம்பந்தம் இல்லாதது என்பது உங்களுக்குச் சுலபமாகத் தெரிந்திருக்கும். மீதி இருக்கும் நான்கில் எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் அவனுக்குப் பொருந்துவதுபோல இருக்கிறது அல்லவா? இதில் எது அதிகப் பொருத்தமானது?லாரன்ஸுக்கு அச்சாக்கம், வடிவமைப்பு, அச்சு இயந்திரங்கள் ஆகியவற்றில் இருக்கும் ஆர்வத்தைவிடப் பத்திரிகை விஷயத்தில் அவனுக்கு ஆர்வம் அதிகம் இருப்பதைக் கவனியுங்கள். படிப்பது, விவாதிப்பது ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவன் அவன். பத்திரிகைகளின் உள்ளடக்கம் பற்றி நுணுக்கமாக யோசிக்கிறான். எழுதுவதிலும் அவனுக்கு ஆர்வமும் திறமையும் இருக்கின்றன. ஆகவே, எழுத்து, குறிப்பாகப் பத்திரிகை சார்ந்த எழுத்துதான் அவன் துறை. அந்த ஆர்வம்தான் அவனை அச்சாக்கம், வடிவமைப்பு ஆகியவற்றைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்ள வைக்கிறது. வெறுமனே எழுதுவதோடு நில்லாமல், பத்திரிகையின் இதர விஷயங்கள் பற்றியும் கவலைப்படும் குணம் அவனுக்கு இருப்பதால் அவனால் சிறந்த பத்திரிகையாளராக வர முடியும். எனவே அவனுக்கு ஏற்ற துறை பத்திரிகைத் துறைதான். அதற்கு ஏற்றபடி தன் படிப்பையும் இதர முயற்சிகளையும் அவன் அமைத்துக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x