Published : 24 Dec 2017 11:21 AM
Last Updated : 24 Dec 2017 11:21 AM
பால்பாயசம் செய்யும்போது திரிந்துபோனால் அதில் சிறிதளவு சமையல் சோடா சேர்த்துக் கொதிக்கவிட்டால் சரியாகிவிடும்.
லட்டு செய்யும்போது பூந்தியை ஊறவைக்கும் ஜீரா சரியான பதத்தில் வரவில்லையென்றால் பாகில் ஒரு டம்ளர் நீர் சேர்த்து இரண்டு கொதி வந்தவுடன் இறக்கிவைத்தால் பாகு சரியாகிவிடும்.
தேன்குழல் பொரிக்கும்போது ரொம்பவும் சிவந்துவிட்டால் பார்க்க நன்றாக இருக்காது. எனவே, அதை உடைத்து வெல்லப்பாகு வைத்து மனோகர உருண்டைகளாகச் செய்யலாம்.
தேன்குழல் மாவில் போடும் உளுத்தம் பருப்பைச் சிறிது குறைத்துக்கொண்டு அதற்குப் பதில் வேகவைத்துத் தோல் உரித்த இரண்டு சேப்பங்கிழங்கைப் போட்டு பிழிந்தால் சுவை அதிகமாகும்.
சோமாஸ் செய்யும்போது அதனுடைய ஓரத்தை வெட்டும்போது வருகிற மாவைப் பொரித்துவைத்துக்கொள்ளுங்கள். சிறிது சர்க்கரையைப் பாலில் சேர்த்துக் கொதிக்கவிட்டு பொரித்தவற்றை அதில் போட்டு வேகவிட்டு எடுத்தால் பூரி பாயசம் தயார்.
வழக்கமாகச் செய்யும் கடலைப் பருப்பு, உளுந்து வடைகளுக்குப் பதில் பச்சைப் பயற்றை ஊறவைத்து பச்சை மிளகாய், தேங்காய், உப்பு, வெங்காயம் சேர்த்து அரைத்து வடை செய்தால் ருசியாக இருக்கும்.
காராபூந்தி, ஓமப்பொடியில் உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு டீஸ்பூன் குளுகோஸ் அல்லது பொடித்த சர்க்கரை சேர்த்து சிறிது கரம் மசாலாப் பொடி சேர்க்க உப்பு மட்டுப்படுவதோடு ருசியும் மேம்படும்.
தேங்காய் பர்பிக்குத் தேங்காய் துருவும்போது அடி வரைக்கும் துருவாமல் வெள்ளைப் பூவை மட்டும் துருவி பர்பி செய்தால் வெள்ளை வெளேரென வரும்.
- ஜானகி ரங்கநாதன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT