Last Updated : 10 Dec, 2017 10:42 AM

 

Published : 10 Dec 2017 10:42 AM
Last Updated : 10 Dec 2017 10:42 AM

புதிய ராகங்கள்: குரலால் மயக்கும் மாலி

 

பா

ட்டு, நடனம், நீச்சல், கராத்தே, செஸ் இப்படி ஒரு டஜன் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வகுப்புகளில் குழந்தைகளின் விருப்பத்தை எதிர்பார்க்காமல் அவர்களைத் தாராளமாகச் சேர்த்துவிடும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால், குழந்தைகள் ஒரு கட்டத்தில் ‘இதுதான் என்னுடைய ஏரியா’ என்று தெளிவடைவார்கள். அப்படித் தெளிவடைந்த மாளவிகா என்ற மாலி, இசைப் பயிற்சியைத் தவிர பிற வகுப்புகளுக்குப் போவதை நிறுத்திக்கொண்டார். சென்னைப் பெண்ணான மாலி லயோலாவில் ‘பிபிஏ – பிரெஞ்ச்’ படித்தாராம். இந்தப் படிப்பில் ஒரு விசேஷம் – இரண்டு ஆண்டுகள் இங்கே படிக்கலாம். ஒரு ஆண்டு பிரான்ஸில் படிக்க வேண்டும்.

16 வயதில் தொடங்கிய பயணம்

“சிறுவயதிலிருந்தே பியானோ வாசிப்பதில் நல்ல பயிற்சியைப் பெற்றிருந்தேன். ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதில் எனக்கு விருப்பம் இருந்தது; இசையின் அறிமுகத்தால் 16 வயதில் மெட்டமைத்துப் பாடல்களாகவே பாடத் தொடங்கிவிட்டேன்” என்கிறார்.

மாலியின் பள்ளி நண்பர் அநிருத். அவர் இசையமைப்பாளராக அறிமுகமான ‘3’ திரைப்படத்தில் ‘லாலாலா லாலாலா’ என்னும் ஹம்மிங்கைப் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். “ஹம்மிங்கில் ஆரம்பித்த இசைப் பயணம் ‘விவேகம்’ படத்தில் ‘சர்வைவா’ பாடல்வரை தொடர்கிறது. அதோடு, திரையிலும் ஆங்கிலப் பாடல்கள், இணையத்தில் வெளியிடப்படும் திரைசாரா இசைப் (Independent music) பாடல்கள் மூலமாக நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது” என்றார் மாலி.

தமிழில் ஒரு காதல் பாடல்

மாலிக்கு சவால்கள் என்றால் சாக்லேட் சாப்பிடுவது போலவாம். ‘ஆங்கிலத்தில் பாட்டெல்லாம் எழுதறீங்களாமே.. இங்கே வந்து ஒரு பாட்டு எழுதுங்க’ என்று மாலியைக் கூப்பிட்டாராம் ஹாரிஸ் ஜெயராஜ் . அப்படி அமைந்ததுதான் ‘சிங்கம் 3’ படத்தில் இவரே எழுதிப் பாடிய ‘ஹி இஸ் மை ஹீரோ’ என்னும் ஆங்கிலப் பாடல். ‘எல்லாம் ஆங்கிலமாகவே இருக்கிறதே’ என்று கேட்டால், ‘ஹரிதாஸ்’ படத்தின் ‘வாழ்க்கையே’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டா பாலகுமாரா’ படத்தில் ‘ஏன் என்றால்’ ஆகிய தமிழ்ப் பாடல்களில் இவரது குரல் ஒலித்திருப்பதைக் குறிப்பிடுகிறார். அதோடு காதலர் தின சிறப்பு ஆல்பம் ஒன்றில் அநிருத்துடன் சேர்ந்து பாடிய ‘ஒண்ணுமே ஆகல’ என்ற பாடல் இவரைத் தமிழ் இசை ரசிகர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறது.

KC_Mals Feb 2017 18079புயலின் பாராட்டு

4, 5 வருஷத்துக்கு முன்பு ‘டிசப்டிவ் - பாஸ் இன் பிரிட்ஜ்’ என்ற ஒரு ஆல்பம் இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவை ஒரு ஆண்டில் ஆயிரம் பேர்தான் பார்த்திருந்தனர். திடீரென்று ஒரே நாளில் 20 ஆயிரம் ஹிட்ஸ்களைத் தொட்டதைப் பார்த்து மாலிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வீடியோவைப் பார்த்து அவருடைய முகநூலில் இவர் பாடிய பாடலைப் பாராட்டி பேசியிருந்ததுதான் காரணம் என்று தெரிந்துகொண்டார். “அதன் பிறகு, நேரிலும் கூப்பிட்டுப் பாராட்டினார். அவருடைய வீட்டுக்குக் கூப்பிட்டு பியானோவில் வாசித்தபடி பாடு என்றார்.

அவருடைய குழந்தைகளையும் கேட்கச் சொன்னார். எனக்குக் கைகளில் நடுக்கம்... ஒருவழியாகப் பாடி முடித்தேன். ‘ நேச்சுரலான குரல் வளமும் பாடலை எழுதும் திறமையும் அதை கம்போஸ் செய்யும் திறனும் உன்னிடம் இருக்கிறது’ என்று பாராட்டினார். அந்த மனம் திறந்த பாராட்டுதான், இசைத் துறையில் நான் தீவிரமாக ஈடுபடுவதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்தது” என்று பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார் மாலி.

வெளிமாநிலங்களுக்கான விசிட்டிங் கார்ட்

திரைப்படங்களுக்கு அப்பால் ஒரு திரைசாரா இசைக் கலைஞராகவும் புகழ்பெற்றுவருகிறார் மாலி. ‘ஈபி’ என்னும் இசை ஆல்பத்தை இணையத்தில் கடந்த ஜனவரியில் வெளியிட்டிருக்கிறார். இதில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இதில் ஒரு பாடல் ரஷ், இன்னொரு பாடல் கனவு பற்றியது.

“சிறுவயதில் என்னுடைய கவனம் படிப்பில் இருக்காது. அப்படியே கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பேன். அதுவே பின்னாளில் பாடலானது. பீட்டில்ஸ் ஆல்பத்தில் ‘நான் மட்டுமே கனவு காண்பவர் அல்ல’ என்னும் வரிகள் வரும். அதையொட்டியும் ஒரு பாடல் எழுதினேன். அதற்குப் பின் நட்பு பற்றி ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். புது இடத்துக்கு போனால் நம்முடைய தேவைகளை எதிர்பார்க்காமல், இருப்பதைக் கொண்டு எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது என்பது பற்றி ஒரு பாடலை எழுதியிருக்கிறேன்” என்று இந்தப் பாடல்களின் கதையை விளக்குகிறார்.

இணையத்தில் பாடல்கள் வெளியிடுபவர்களுக்கு வருமானம் பெரிதாக இல்லை என்றாலும் வெளி மாநிலங்களில் இருக்கும் மக்களைச் சென்றடைய இணையம் ஒரு சிறந்த கருவி என்கிறார் மாலி. “ஆன்லைனில் பாடல்களை ரிலீஸ் செய்வதிலிருந்து வருமானத்தை எதிர்பார்க்கக் கூடாது. இதைக் கொஞ்சம் காஸ்ட்லியான விசிட்டிங் கார்ட் என்று சொல்லலாம். இதை வைத்து தனிக் கச்சேரிகளை இந்தியா முழுவதும் செய்திருக்கிறேன். பெங்களூரு, டெல்லியிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. நார்த்-ஈஸ்ட் மாநிலங்களில் எனக்கு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இருபதுகளில் இருக்கும் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்னுடைய பாடல்களில் எதிரொலிப்பதுதான் இதற்குக் காரணம்” என்கிறார் இருபது வயதைத் தாண்டியிருக்கும் மாலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x