Last Updated : 02 Dec, 2017 10:55 AM

 

Published : 02 Dec 2017 10:55 AM
Last Updated : 02 Dec 2017 10:55 AM

வளம்பெறும் புறநகர்ப் பகுதிகள்

சென்னை நகருக்குள் இல்லாவிட்டாலும்கூட, சென்னைக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதிகளில் ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் அல்லது மனையை வாங்கிவிட வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் கனவு. அதற்கேற்ப புறநகர்ப் பகுதிகளில் வீட்டுத் திட்டங்களும் தொடர்ந்து அறிமுகமாகிவருகின்றன. பொதுவாக வீடு அல்லது மனை அமைந்துள்ள பகுதி வளர்ச்சியடைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அல்லது வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதியாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். தற்போதைய நிலையில் சென்னையின் எந்தெந்தப் புறநகர்ப் பகுதிகள் வளர்ச்சிப் பெற்று வருகின்றன?

ஜி.எஸ்.டி. சாலை

‘கிராண்ட் சதர்ன் டிரன்க்’ எனப்படும் ஜி.எஸ்.டி. சாலையில்தான் சென்னைப் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், விமான நிலையம் தொடங்கி தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியைத் தாண்டிய பகுதிகளும் அண்மைக் காலத்தில் அபார வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த வழித்தடத்தில் மஹிந்த்ரா உள்ளிட்ட தொழிற்பூங்காக்களும் அமைந்துள்ளதால் இப்பகுதியில் எப்போதும் கட்டுமானங்கள் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது.

அதுமட்டுமல்ல, வண்டலூர்- கேளம்பாக்கம் இடையேயான சாலையிலும் குடியிருப்புகள் அதிகளவில் முளைத்துள்ளன. இந்த வழித் தடங்களில் காலி இடங்கள் அதிகம் இருப்பதால், முன்னணி கட்டுமான நிறுவனங்கள், இந்தப் பகுதிகளை குறிவைத்து, வீட்டுத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. ஜி.எஸ்.டி. சாலையில் புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் பேச்சளவில் இருந்தாலும், இதைக் காட்டியே பலரும் வீடு. மனை விலையை உயர்த்தி விற்பதையும் காண முடிகிறது.

சென்னை - பெங்களூரு சாலை

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கவனம் பெறும் பகுதியாக சென்னை - பெங்களூரு சாலை உள்ளது. இந்தச் சாலையில் ராணிப்பேட்டை வரையிலான பகுதிகளில் ஏற்கெனவே, ஏராளமான தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன உதிரிபாக உற்பத்தி ஆலைகள், மின்னணு உபகரண தொழிற்சாலைகள் என வெளிநாட்டு நேரடி முதலீட்டில் உருவான தொழில்நிறுவனங்களும் உள்ளன. மிகப் பெரிய ஆலைகள் இந்தச் சாலையில் உள்ளதால் இந்தப் பகுதியும் கட்டுமானத் துறையின் கவனம் பெற்ற பகுதியாக உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமையும் என்று கூறி இந்தப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பை பலரும் கூட்டிக் காட்டவும் செய்கிறார்கள். பல கட்டுமான நிறுவனங்கள் பூந்தமல்லி தொடங்கி ஸ்ரீபெரும்புதூர்வரை வீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்தச் சாலையில் உட்கட்டமைப்பு உயரும்பட்சத்தில் எதிர்காலத்தில் இந்தச் சாலை பெரிய கவனத்தை ஈர்க்கலாம்.

ஓ.எம்.ஆர். சாலை

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி வரையிலான பகுதிகள் கடந்த சில ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்றுள்ளன. விண்ணை முட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இங்கு ஏற்கெனவே அதிகளவில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக வளாகங்களும் இந்தச் சாலையில் அதிகம் உள்ளன. பயோ டெக்னாலஜி, பார்மாசூடிகல்ஸ், நேனோ டெக்னாலஜி மற்றும் இதர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான வசதிகள் இந்தச் சாலையில் உள்ள தொழிற்பூங்காக்களில் உள்ளன.

சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளும் இங்கே நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. ஓஎம்ஆர் சாலையில் ஏற்கெனவே ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை ஆவதில் சுணக்கம் இருந்தாலும், தொடர்ந்து இந்தப் பகுதியில் வீட்டுத் திட்டங்கள் அறிமுகமாகிவருகின்றன.

தற்போது ரியல் எஸ்டேட் சற்று தள்ளாட்டத்தில் இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் இன்னும் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x