Published : 17 Dec 2017 10:39 AM
Last Updated : 17 Dec 2017 10:39 AM

முகங்கள்: குலையாத மன உறுதி!

டலால் முடங்கினாலும் தனது மன உறுதியால் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் அசத்திவருகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்மை.

உள்ளத்தைத் தொடாத ஊனம்

சுவாமித்தோப்பைச் சேர்ந்த செல்லம்மையின் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். இரண்டு வயதில் தாக்கிய இளம்பிள்ளைவாதத்தால் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. பெற்றோரின் மறைவுக்குப் பின் மருங்கூரில் உள்ள தன் சகோதரி தேவநாயகியின் வீட்டில் வாழ்ந்துவருகிறார். தனது உடலை முடக்கிய ஊனம், உள்ளத்தைத் தொட செல்லம்மை அனுமதிக்கவில்லை. விடாமுயற்சியால் சிறந்த கைவினைக் கலைஞராகத் திகழ்கிறார்.

ஊக்கம் தந்த கைவினைத் துறை

வீட்டில் முடங்கிக் கிடந்த செல்லம்மைக்குப் புன்னையடியைச் சேர்ந்த கைவினைஞர் தங்கஜோதியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் பின்னர் அவரிடமே கைவினைத் தொழிலைக் கற்றுக்கொண்டுள்ளார். “எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும் பயிற்சி வகுப்புக்குச் செல்வதை மட்டும் நிறுத்தவில்லை. பயணம் செய்வது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து புன்னையடிக்குச் சென்று கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொண்டேன். நாகர்கோவிலில் உள்ள கைவினைத் துறையின் உதவி இயக்குநர் பாலுவும் என் நிலையைப் பார்த்து எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தார். தொடர்ந்து உற்சாகமாகக் கைவினைத் தயாரிப்பில் இறங்கினேன்” என்கிறார்.

அரசு தந்த அங்கீகாரம்

நீராதாரங்கள் நிரம்பிய கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரைப் புற்கள் அதிக அளவில் வளரும். வீணாகும் கோரைப் புற்களைத் தன்னுடைய தொழிலுக்கு மூலதனமாக மாற்றியுள்ளார் செல்லம்மை. “கோரைப் புல்லில் கூடை செய்கிறேன். ஒரு கூடையைப் பின்னுவதற்குச் சரியாக ஒரு வாரம் ஆகிவிடும். ஆனால், இந்தக் கூடை குறைந்தது 500 ரூபாய்வரை விலை போகும். மாற்றுத்திறனாளியான என்னால் குளத்தில் இறங்கிக் கோரைப் புல்லைப் பறித்துவர முடியாது. இதன் காரணமாக என் சகோதரியின் கணவர் பரமசிவம் எனக்காக இதைச் சேகரித்துத் தருகிறார்” என்கிறார் செல்லம்மை. நார்ப்பொருளில் கைவினைப் பொருட்கள் செய்துவரும் இவருக்குக் கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த கைவினைத் தயாரிப்புக்கான விருது கிடைத்துள்ளது.

நம்பிக்கையில் நகரும் வாழ்க்கை

கோரைப் புல்லில் கைவினைத் தொழில் தொடங்க செல்லமைக்கு ஒரு வங்கி ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்தது. அந்தக் கடனை விரைவாக அடைத்துவிட்டு சிறப்பாகத் தொழில் நடத்திவருவதால் தேவைப்பட்டால் மேலும் கடன் அளிப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியிருப்பதாகச் சொல்கிறார் செல்லம்மை. “கோரைப் புல்லில் சிறப்பாகக் கைவினைப் பொருட்கள் செய்தாலும் என்னால் தவழ்ந்து மட்டுமே செல்ல முடியும். அதனால் நேரடியாகப் போய்ச் சந்தைப்படுத்தும் சாத்தியங்கள் இல்லை. அதனால் மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து விடுவேன். இப்போதைக்குச் சகோதரி வீட்டில் வசிக்கிறேன். இந்தத் தொழிலை விருத்தி செய்து, தனி வீடு கட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது. காலம் கைவிட்டாலும், கற்றுக்கொண்ட கைவினைத் தொழில் கைவிடாது. அந்த நம்பிக்கையைப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறேன்”என்று புன்னகையுடன் சொல்கிறார் செல்லம்மை.

படங்கள்: என்.சுவாமிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x