Last Updated : 16 Jul, 2014 10:10 AM

 

Published : 16 Jul 2014 10:10 AM
Last Updated : 16 Jul 2014 10:10 AM

பால் தயிராகும் மாயம்?

வெப்பம் மிகுந்த மே, ஜூன் மாதங்களும் போய்விட்டன. ஆனால், ஜூலை மாதத்திலும் வெப்பம் மட்டும் குறையவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜாலியாக விளையாடலாம் என மைதானத்துக்குச் சென்றிருந்த ரஞ்சனியும் கவினும் கடும் வெயில் காரணமாகச் சோர்வாக வீடு வந்து சேர்ந்தனர்.

“அம்மா வெயில் தாங்க முடியல. ரொம்ப தாகமா இருக்கு” என்று கூறிக்கொண்டே வீட்டு வாசலில் உட்கார்ந்து விட்டான் கவின்.

“தாகமா இருந்தா தண்ணி குடி” என்று வீட்டினுள் இருந்தபடியே குரல் கொடுத்தார் நிலா டீச்சர்.

“எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்க மாட்டேங்குது. அடிக்கிற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது” என்றாள் ரஞ்சனி.

“கொஞ்ச நேரம் பொறுங்க” என்று கூறிய அப்பா, கொஞ்ச நேரம் கழித்து ஆளுக்கொரு கிளாஸ் மோர் கொடுத்தார். அந்த வெயில் நேரத்தில் அப்பா கொடுத்த மோர் ரஞ்சனிக்கும் கவினுக்கும் அமிர்தமாக இருந்தது. இருவரும் சுவைத்துக் குடித்தனர்.

“என்ன தாகம் அடங்கிடுச்சா?” என்று ரெண்டு பேரிடமும் கேட்டார் நிலா டீச்சர்.

“இன்னொரு கிளாஸ் கொடுத்தாலும் குடிப்போம்” என்றான் கவின்.

‘ஆமாம்' என்று சொல்வது போல் தலையை ஆட்டினாள் ரஞ்சனி.

அப்பா சிரித்தபடியே இருவருக்கும் இன்னொரு கிளாஸ் மோர் கொடுத்தார்.

மோரின் மிதமான புளிப்புச் சுவை கவினுக்குப் பிடித்திருந்தது. திடீரென கவினுக்கு ஒரு கேள்வி எழுந்தது. பாலாக இருக்கும்போது புளிக்காத நிலையில், தயிர் மற்றும் மோராக மாறிய பிறகு புளிப்பது ஏன் என அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

“என்ன கவின் யோசனையா இருக்கே?” என்றார் அப்பா.

“மோர் ஏன்பா புளிக்குது” என்றான் கவின்.

“ஆரம்பிச்சுட்டான்யா. இந்தக் கேள்வியெல்லாம் உங்க அம்மாட்ட கேட்டுக்கோ” என்று கூறி அப்பா அங்கிருந்து நகர்ந்தார்.

“மோர் ஏன் புளிக்குதுன்னு சொல்லுங்கம்மா” என்று நிலா டீச்சரிடம் கேட்டாள் ரஞ்சனி.

“இருங்க நானும் ஒரு கிளாஸ் மோர் குடிச்சுட்டு வரேன்” என்று கூறிய நிலா டீச்சர், மோர் குடித்த பின், அதன் புளிப்புச் சுவைக்கான காரணங்களை விளக்கத் தொடங்கினார்.

“மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம் தெரிஞ்சுக்கும் முன்னாடி, பால் எப்படித் தயிரா மாறுதுன்னு தெரிஞ்சுக்கணும். காய்ச்சி ஆற வைச்ச பால்ல, கொஞ்சம் தயிரோ மோரோ சேர்த்த பின்னாடி, அந்தப் பால்ல நொதித்தல் வினை தொடங்குகிறது. பால்ல லாக்டோஸ்ன்னு ஒரு சர்க்கரைப் பொருள் இருக்கு. நொதித்தல் வினை நடக்குறப்ப லாக்டோ பாசில்லஸ் என்ற பாக்டீரியா, பால்ல இருக்குற லாக்டோஸ் என்ற சர்க்கரையைச் சிதைச்சு லாக்டிக் அமிலமாக மாத்துது. அப்போ பால் உறைஞ்சு தயிரா மாறுது. நம் தேவைக்கேற்ப தயிராவோ அல்லது அதுல தண்ணிய கலந்து நல்லா கடைஞ்சு மோராவோ பயன்படுத்துறோம்.

தயிர் அல்லது மோர்ல இருக்குற லாக்டிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அதன் புளிப்புச் சுவையும் கூடிக்கிட்டே போகும்” என்றார் நிலா டீச்சர்.

“இவ்வளவு நாளா தயிரும், மோரும் சாப்பிடறோம். ஆனா, இதுல இவ்வளவு அறிவியல் இருக்கு என்பதை இன்னிக்குத்தான் தெரிஞ்சுகிட்டோம். எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா” என்றாள் ரஞ்சனி.

எதுவும் பேசாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த கவினைப் பார்த்து, “என்ன ஆச்சு கவின்” என்று கேட்டார் நிலா டீச்சர்.

“அம்மா இன்னொரு கிளாஸ் மோர்…” என்று இழுத்தான் கவின்.

எல்லோரும் சிரிக்க, கவினும் சேர்ந்து சிரித்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x