Published : 02 Jul 2014 09:00 AM
Last Updated : 02 Jul 2014 09:00 AM

நீங்கள் என் அம்மாவா?

அம்மா பறவை முட்டையின் மீது அமர்ந்து அடைகாத்துக் கொண்டிருந்தது. திடீரென முட்டை ஒருமுறை குலுங்கியது. உள்ளே ஒரு பெரும் போராட்டம்.

“பரவாயில்லையே... வெளியே வருவதற்காக கடுமையான முயற்சி செய்கிறதே பறவைக் குஞ்சு. வெளியே வந்தால் ரொம்பப் பசிக்குமே. வெளியே போய் குஞ்சு சாப்பிடுவதற்கு ஏதாச்சும் தேடிக்கொண்டு வரலாம்” அம்மா பறவை தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. பின்பு சிறகடித்துப் பறந்து போனது.

இதற்கிடையில் அம்மா பறவையினுடைய குஞ்சு, முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டது.

“என்னுடைய அம்மா எங்கே?” குஞ்சுப் பறவை கேட்டது. அம்மாவைத் தேடி சுற்றும் முற்றும் பார்த்தது.

அது மேலே பார்த்தது. அம்மாவை எங்கேயும் பார்க்க முடியவில்லை. கீழே பார்த்தது. அங்கேயும் அம்மாவைப் பார்க்க முடியவில்லை.

“இனி என்ன செய்ய? அம்மாவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” குஞ்சுப் பறவை அங்கேயிருந்து புறப்பட்டது.

அதோ குஞ்சுப் பறவை மரத்திலிருந்து பிடி நழுவிக் கீழே விழுந்தது. ஹா... அது கீழே... கீழே... விழுந்துகொண்டிருந்தது.

குஞ்சுப் பறவை மிகச் சிறிய குஞ்சாக இருந்தது. அதனால் பறக்க முடியாதே.

ஆனால் பறக்க முடியாவிட்டாலும் நடக்கலாமே. “நான் என்னுடைய அம்மாவைத் தேடிப்போகிறேன்” என்று குஞ்சு பறவை சொல்லிக்கொண்டே நடந்தது.

அதனுடைய அம்மாவை அது இதுவரை பார்த்தது இல்லை. இப்போது பார்த்தாலும் கூடத் தெரிந்துகொள்ளவும் முடியாது. அம்மாப் பறவையின் அருகில் கடந்து சென்ற போதும் குஞ்சுப் பறவைக்கு அம்மாப் பறவையைத் தெரியவில்லை.

நடந்து நடந்து அது ஒரு பூனைக் குட்டியின் அருகில் சென்று நின்றது. “நீங்கள் என் அம்மாவா?” பூனைக்குட்டியிடம் அது கேட்டது. பூனைக்குட்டி குஞ்சுப் பறவையை உற்றுப் பார்த்தது. பின்னர் “இல்லையில்லை... நான் மியாவ்” என்று முணுமுணுத்தது.

அது மறுபடியும் மேலே நடந்து சென்றது. ஒரு சேவலுக்கு முன்னால் போய் நின்றது. “நீங்கள் என் அம்மாவா?” என்று கேட்டது. சேவல் அதற்கு, “இல்லையில்லை... நான் கொக்கரக்கோ” என்று கூவியது. பூனைக்குட்டி அதன் அம்மா இல்லை. சேவலும் அதன் அம்மா இல்லை. குஞ்சுப் பறவை மறுபடியும் மேலே நடந்தது.

“எனக்கு என் அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டும். அம்மா எங்கே இருப்பாள்?” என்று யோசித்துக்கொண்டே நடந்து நடந்து ஒரு நாயின் முன்பாகச் சென்று நின்றது.

“நீங்கள் என் அம்மாவா?” நாயிடம் அது கேட்டது. அதற்கு நாய், “நான் உன் அம்மாவா? பார்த்தால் தெரியலை? நான் ஒரு நாய். பௌவ் பௌவ்...” என்று குரைத்தது.

பூனைக்குட்டி அதன் அம்மா இல்லை. சேவலும் நாயும் அதன் அம்மா இல்லை. குஞ்சுப் பறவை முன்னோக்கி நடந்து சென்றது. அப்போது அது ஒரு பசு மாட்டைப் பார்த்தது. “நீங்கள் என் அம்மாவா?” என்று பசு மாட்டைப் பார்த்துக் கேட்டது. அதற்கு பசுமாடு, “ம்மா... ம்மா.. நான் எப்படி உனக்கு அம்மா ஆக முடியும்? நான் பசுமாடு” என்று கர்வத்தோடு கூறியது.

பூனைக்குட்டியோ சேவலோ, நாயோ, பசுமாடோ குஞ்சுப் பறவையின் அம்மா இல்லை. உண்மையில் அதனுடைய அம்மா யார்? “நான் என்னுடைய அம்மாவைத் தேடிப் போகிறேன். விசாரித்துக் கண்டுபிடிப்பேன். இது உறுதி” என்று குஞ்சுப் பறவை சொன்னது. அது நடக்காமல் ஓடத் தொடங்கியது.

ஓடி ஓடி உடைந்து சிதைந்த ஒரு காரின் முன்னால் நின்றது. “இது என் அம்மாவாக இருக்கலாமோ? சே.. இருக்காது. கண்டிப்பாக இருக்காது” என்று தனக்குள்ளேயே உறுதிப்படுத்திக் கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தது.

ஒரு வினோதமான சத்தத்தைக் கேட்டு குஞ்சுப் பறவை தலையை உயர்த்தி மேலே பார்த்தது. ஒரு பெரிய விமானம். “அம்மா... நான் இதோ... இங்கே இருக்கிறேன்” என்று குஞ்சுப் பறவை சத்தமாய்க் கத்தியது. ஆனாம் விமானம் நிற்கவில்லை. ஒரு நொடிக்குள் பறந்து வானத்தில் மறைந்தது.

துக்கத்தோடு தலை குனிந்து அது கீழே பார்த்தது. கீழே ஆற்றில் ஒரு படகு மிதந்து போய்க்கொண்டிருந்தது. “அதோ... என் அம்மா போகிறாள். அம்மா... அம்மா...” படகைப் பார்த்து அது கத்திக் கூப்பிட்டது. குஞ்சுப் பறவை சொன்னதைக் கேட்காமல் படகு மிதந்து போய்க்கொண்டிருந்தது.

ஓடியும் நடந்தும் குஞ்சுப் பறவை பூதாகரமான ஒரு யந்திரத்தின் முன்னால் போய் நின்றது. “இதுதான் என் அம்மா” என்று சத்தமாய் சொன்னது. பின்பு அந்த யந்திரத்தின் அருகில் சென்று, “அம்மா... அம்மா... நான் இங்கே இருக்கேன்” என்று சொல்லியது. ஆனால் யந்திரம் பெரிதாய் சத்தம் போட்டதே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை. “என்ன நீங்களும் என் அம்மா இல்லையா?” என்று வருத்தத்தோடு குஞ்சுப் பறவை கேட்டது. யந்திரம் பதில் எதுவும் சொல்லவில்லை.

“இந்த பூதத்தின் முன்னாலிருந்து தப்பிச்சே ஆகணும்” என்று குஞ்சுப் பறவை நினைத்தது. இதற்கு நடுவே திடீரென யந்திரம் மேலே மேலே எழுந்தது. அதோடு சேர்ந்து குஞ்சுப் பறவையும் மேலே எழுந்தது. “இந்த யந்திரம் என்னை எங்கே கொண்டு போகுதோ? தெரியலையே” குஞ்சுப் பறவை பயந்துவிட்டது. எனக்கு வீட்டிற்குப் போகணும். எனக்கு என்னுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும். குஞ்சுப் பறவை புலம்ப ஆரம்பித்தது.

திடீரென பூதாகரமான யந்திரம் அப்படியே அசையாமல் நின்றது. என்ன நடக்கப் போகிறதென்று குஞ்சுப் பறவைக்குப் புரியவில்லை. அதற்கிடையில் அந்தப் பெரிய யந்திரம் குஞ்சுப் பறவையை அதன் கூட்டில் திரும்ப இறக்கிவிட்டது.

அப்படி கடைசியில் குஞ்சுப் பறவை தன்னுடைய வீட்டில் பத்திரமாக வந்து சேர்ந்தது. அப்போதுதான் அம்மாப் பறவை குஞ்சுப் பறவைக்குக் கொடுக்க இரையோடு வந்து சேர்ந்தது.

அது குஞ்சுப் பறவையிடம், “நான் யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டது.

“எனக்குத் தெரியுமே. நீங்கள் ஒரு பூனைக்குட்டி இல்லை. சேவலோ, நாயோ, பசுமாடோ இல்லை. காரும் இல்லை. படகும் இல்லை. விமானமோ, பெரிய யந்திரமோ இல்லை. நீங்கள் ஒரு பறவை. என்னுடைய அம்மா” என்று குஞ்சுப் பறவை பதில் சொல்லியது.

மலையாளத்தில்: ஜெய் சோமநாதன்

தமிழில்: உதயசங்கர்

ஓவியம்: பாபுராஜ்

நன்றி: பாரதி புத்தகாலயம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x