Last Updated : 27 Oct, 2015 11:16 AM

 

Published : 27 Oct 2015 11:16 AM
Last Updated : 27 Oct 2015 11:16 AM

தொழில் வாழ்க்கைக்கு என்ன திட்டம்?

ஒருவருக்குத் தொழில்ரீதியான வளர்ச்சியும் அதற்காக அவர் அவரது பணியைப் பற்றிக் கற்றுக்கொள்ளுவதும் 90 சதவீதம் அவர் செய்கிற வேலையில்தான் நடைபெறுகிறது. வேலையின் அனுபவம் மூலமும், மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்குதல் மூலமும் தனது பணிகளின் மீதான கருத்துகளை ஏற்றுக்கொள்வதிலும்தான் ஒருவருக்குப் பணி அனுபவம் கிடைக்கிறது. பொதுவாக, வேலையில்தான் பெரும்பாலும் மனிதர்கள் கற்றுக்கொள்கின்றனர். திறன் வளர்ப்புப் பயிற்சிகளில் சுமார் 10 சதவீதம்தான் கற்றுக்கொள்ளப்படுகிறது.

எல்லோருக்கும் ஒரே மதிப்பீடுகள் கிடையாது. சிலருக்கு அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் மிகவும் முக்கியம். அவர்கள் வார இறுதி நாட்களிலும் வேலைசெய்யும்படி இருக்கிற பணிகளை விரும்ப மாட்டார்க்ள். மன அழுத்தமுள்ள அபாயம் நிரம்பிய வேலைகள் சிலருக்குப் பிடிக்காது. அத்தகையவர் காவல்துறைப் பணி போன்ற பணிகளை விரும்ப மாட்டார்கள். தொழில் வாழ்க்கைக்கான திட்டம் போடுவதற்கு முன்னதாக, தனக்கான மதிப்பீடுகளைப் பொறுத்துத் தனது பணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

வாழ்க்கைத் திட்டம்

இன்னமும் வேலைக்குச் செல்லாத இளம் வயதினராக இருக்கட்டும்; தற்போது ஒரு பணியில் செயல்படுபவராக இருக்கட்டும். அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு என்று தனியாகத் திட்டமிடுவது முக்கியமானது.

அப்படித் திட்டமிடும்போது நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் உங்களின் திறன்கள், ஆர்வங்கள் எதில் இருக்கின்றன என்பதையும் எவற்றையெல்லாம் நீங்கள் முக்கியமானதாக மதிக்கிறீர்கள் என்பதையும் அது உங்களுக்குக் காட்டும்.

அத்தகைய திட்டமிடல் உங்களின் எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடுவதற்கான கருவிகளை உங்களுக்குத் தருகிறது. உங்களின் எதிர்காலம் பற்றிய ஒரு தோற்றத்தையும் அது உங்கள் கண்முன் எழுப்பிக்காட்டும். உங்களுக்கான வேலை சமூகத்தில் கிடைக்கிற நிலைமையைப் பற்றியும் தற்போது நீங்கள் செய்கிற வேலையின் நோக்கங்களில் உங்களது ஈடுபாட்டின்மீதும் இந்தத் திட்டம் உங்களை அதிகக் கவனம் செலுத்த வைக்கும்.

யார் பொறுப்பு?

சரி இந்தத் திட்டத்தை உருவாக்குவதற்கு யார் பொறுப்பு?

உங்கள் மேலாளர், கண்காணிப்பாளர், அல்லது கல்வி நிறுவனம் யாராக இருந்தாலும் அதற்கான வழிகாட்டலையோ அல்லது இந்தத் திட்டத்துக்கான சிறு ஆதரவையையோதான் தர முடியும்.

உங்களின் தொழில் வாழ்க்கையின் வளர்ச்சிக்கான திட்டத்துக்கும் அதனைச் செயற்படுத்துவதற்கும் நீங்கள்தான் முழுப் பொறுப்பாளர். இத்தகைய திட்டமிடும்போது இதில் வரக்கூடிய தடைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

உள்தடையும் வெளித்தடையும்

என்ன மாதிரியான தடைகள் வரலாம் எனச் சிந்தித்துத் தடைகளையும் சவால்களையும் முன்னதாக அடையாளப்படுத்திக்கொள்வது மிகவும் சிறப்பு. எல்லா விதமான தடைகளையும் நாம் முன்னதாகக் கணித்துவிட முடியாது. ஆனாலும் ஓரளவேனும் கணிப்பதன் மூலம் தடைகளை எவ்வாறு கடப்பது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

இத்தகைய தடைகளை உட்புறமானவை. வெளிப்புற மானவை எனப் பிரிக்கலாம். உங்களது நேரம், நிதி நிலைமை, உங்களின் நோக்கத்திலிருந்து உங்களைத் திசை திருப்பக்கூடிய காரியங்கள், உங்களது குடும்பத்தின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும், உங்களைச் சுற்றியுள்ளோர் உங்கள் நடத்தைகளின் மேல் ஏற்படுத்தும் தாக்கங்கள், உங்கள் மீதான சமூகரீதியான தாக்கங்கள், குழந்தை பராமரிப்புக்கான ஏற்பாடுகளும் செலவும், மன அழுத்தம் தரக்கூடிய வேலை, கடினமானதாக உள்ள தொழிலக உறவுகள், அமைப்புரீதியான மாறுதல்கள், நீங்கள் செய்யும் வேலையின் தன்மையில் தொடர்ந்து ஏற்படுகிற மாறுதல்கள், பொருளாதார சிரமங்கள், ஆகியவை வெளிப்புறமான தடைகள் என்கிறார்கள் உளவியலாளர்கள். உங்களது தொழில்வாழ்க்கையை மேலும் வளர்த்துச்செல்வதை இவை தடுக்கக்கூடும்.

செய்கிற காரியங்களைத் தள்ளிப்போட்டுக்கொண்டேயிருத்தல், பணியில் மிதமிஞ்சிய அளவுக்குக் கனகச்சிதமும் துல்லியமும் தேடுதல், வேலையில் அக்கறை குறைவாக இருத்தல், வேலையில் ஒரே குறியாக இருப்பதில் கவனமின்மை, மனச்சோர்வு, எப்போதும் கவலைப்படுதல், உறுதி குறைவாயிருத்தல், குறைவான சுயமரியாதை, நேர மேலாண்மையில் குளறுபடிகள், தங்களின் தொழில்வாழ்க்கை பற்றி உடனடியான தெளிவான முடிவுகளை எடுக்காமை என்பன போன்ற தடைகளும் மனிதர்களிடம் உள்ளன. இவற்றை உள்புறமான தடைகள் என்கிறார்கள்.

ஒரு ஒரே வேலைக்காகவா?

ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றி மட்டும்தான் நாம் திட்டமிட வேண்டுமா? என்றும் சிலர் கேட்கிறார்கள்.

அவசியமில்லை. ஒரு வேலையின் தன்மையை ஒட்டியதாக உள்ள பல்வேறுபட்ட வேலைகள் கொண்ட ஒரு தொகுப்புக்கும் நீங்கள் திட்டமிடலாம். வேறுபட்ட பல்வேறு வேலைகளுக்கும் ஒரேவகையான திறன்கள் தேவைப்படலாம். ஒரே தன்மைகொண்ட இத்தகைய பல்வேறு வேலைகளின் ஒரு தொகுப்போடு உங்களின் திறன்கள் பொருந்துமானால், அதற்குள்ளே பல வகையான வேலைகள் உங்களுக்குக் கிடைக்கலாம்.

இதற்கெல்லாம் ஏதேனும் ஒரு தேர்வு இருக்கிறதா என்று ஒரு ஆசிரியரிடம் ஒரு மாணவர் அப்பாவித்தனமாகக் கேட்டுள்ளார். மனநல டாக்டரும் திறன்கள் பற்றிய ஆலோசகருமான டாக்டர் ஜிதேந்திரா நாக்பால் அப்படி எதுவும் கிடையாது என்கிறார்.

நீங்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடிய, உங்களின் மிச்சமுள்ள தொழில்வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ரெடிமேடாக உங்களுக்குச் சொல்லக்கூடிய மந்திர ஜாலத் தேர்வு எதுவும் கிடையாது என்கிறார் அவர். இங்கே விவாதிக்கப்படுகிற வழிமுறைகளை இணைத்து அவற்றின் வழியாக ஒரு தீர்வை நீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம் அவ்வளவே. உங்களைப் பற்றிய ஒரு சுய மதிப்பீடே நீங்கள் எடுத்துவைக்க வேண்டிய முதல் படி.

சென்னையில் ஒரு கல்வியாளரிடம் எனது நண்பரின் மகனுக்கு ஆலோசனை பெறச் சென்றோம். மேலாண்மைத் துறையா,பொறியியலா, மருத்துவமா எது நல்ல துறை என எனது நண்பர் கேட்டார்.

சாதிக்கவேண்டும் என்று நினைப்பவருக்குத் தேவையான உள்ளார்ந்த ஆற்றலை இந்த மூன்று துறைகளுமே தரும். இந்தத் துறைகளின் தற்போதைய நிலையை மாற்றக்கூடிய ஒரு ஆற்றலை உங்களுக்கு இந்தத் துறைகளே வழங்கலாம். ஒரு பொறியியல் மாணவர்தானே அப்துல்கலாம்? அவர் நாட்டின் குடியரசுத்தலைவராக ஆகும்அளவுக்கு தன்னை வளர்த்துக்கொள்ள வில்லையா?

மேலாண்மைத்துறையின் மாணவர் என்ற முறையில் பெப்ஸி, கோக்கோ கோலா போன்ற நிறுவனங்களின் தலைவராக ஆகலாம் என்ற கனவில் உங்கள் மகன் இருக்கலாம். ஆனால், இந்தத் துறைகளில் உள்ள ஆற்றலைவிட உங்கள் மகனின் தீர்மானகரமான உழைப்பும் மன உறுதியும்தான் அவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார் அவர்.

நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x