Last Updated : 26 May, 2015 11:47 AM

 

Published : 26 May 2015 11:47 AM
Last Updated : 26 May 2015 11:47 AM

பிளஸ் 2-வுக்குப் பிறகு: மொழி படித்தாலும் வழியுண்டு

சொற்பச் செலவில் அதிகம் மெனக்கிடாமல் படித்து நல்ல வேலை வாய்ப்பைப் பெற மொழிப்பாடப் பட்டங்கள் உதவுகின்றன.

ஆங்கில மொழி மற்றும் இலக்கியப் பட்டப் படிப்புக்கு இன்றளவும் வரவேற்பு குறையவில்லை. முன்னணிக் கல்லூரிகளில் இந்தப் பிரிவின் கீழ் சேர்க்கை கிடைப்பது குதிரைக்கொம்பு.

“தமிழில் பட்டப் படிப்பு மேற்கொள்ளச் சொற்பமான மதிப்பெண்கள் தகுதியோடு கல்லூரியில் சேரலாம். நாளடைவில் சற்றே ஈடுபாட்டுடன் படித்தால் வளமான எதிர்காலத்தைக் கட்டமைக்கலாம்” என்கிறார் அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் க.தமிழ்மாறன். இவருடன் திருச்சி ‘கேர் ’ பொறியியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் அ.ஷர்லி மேரி வனிதா இணைந்து அளிக்கும் வழிகாட்டுதல்கள்:

மொழியில் வழியுண்டு

ஆசிரியர் துறையில் மொழிப்பாடம் முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும், முன்னுரிமைக்காகக் காத்திருக்காது, தகுதித் தேர்வை எழுதித் தனக்கான அரசுப் பணியை உறுதி செய்துகொள்ளும் இளம்வயதினர் அதிகரித்துள்ளனர். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் அதற்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்பதால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியைப் பெருக்கிக்கொள்ளலாம்.

ஆசிரியர் துறைக்கு நிகராக வேலை வாய்ப்புகள் கொண்டது ஊடகத் துறை. அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என ஊடகத் துறையின் திசைகளில் எல்லாம் ஆர்வமும், திறமையும் உள்ளவர்களுக்கு மென் பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய வாய்ப்புகள் பொதிந்திருக்கின்றன.

கூடுதல் திறமைகள்

அடிப்படையான பட்டப் படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளைக் கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத் துறையில் மேலும் நம்மை உயர்த்திக்கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழைதிருத்த, செய்திகளைச் சேகரிக்க, தொகுத்து வழங்க.. என்று காட்சி ஊடகங்களில் திரைக்கு முன்னேயும் பின்னேயும் வேலைவாய்ப்புகள் உண்டு.

உலகம் திறந்த சந்தையான பிறகு மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் கோலோச்சுகிறார்கள். இதற்கு இரண்டு மொழிகளில் புலமை அவசியம். இந்த வரிசையில் ஒப்பிலக்கியத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

முதுநிலை வாய்ப்புகள்

பி.ஏ பட்டப் படிப்போடு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் தம்மை உயர்த்திக் கொள்பவர்களுக்கு அதற்கேற்ற தரமான வேலைவாய்ப்பு வாய்க்கும். முதுநிலையிலும் இதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியல், சுவடியியல், நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல்.. எனத் தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.

சிறப்பான ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்வோருக்கு மாதம் ரூ24 ஆயிரம் என 5 ஆண்டுகளுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு வழங்குகிறது. படிப்பை முடித்து வெளிவருபவர்களுக்கு மொழி ஆராய்ச்சி, அருங்காட்சியகம், சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை.. எனச் சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பொறியியல் படித்தவர்கள் வெளிநாடுகளில் பெரும் ஊதியத்திற்கு நிகராகத் தமிழ் படித்தவர்களும் அங்கு பெறலாம். சர்வதேச அளவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் அவற்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

போட்டித் தேர்வுகள்

குடிமைப்பணி மற்றும் இதர போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மற்றப் பட்டப் படிப்புகளோடு மொழிப் பட்டங்களைத் தேர்வு செய்வது சிறப்பு. குடிமைத் தேர்வில் ஆப்ஷனலாகத் தாய்மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால், இதர பட்டம் முடிப்பவர்களும் தமிழை விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகையில் தமிழைப் பாடமாகப் படித்தால் தேர்வு மேலும் சுலபமாகும். அது போலவே அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகள் மற்றும் ரயில்வே வங்கித்துறை போட்டித்தேர்வுகளிலும் இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து சிறப்பான எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.

பி.ஏ ஆங்கிலம் படித்தவர்கள் பி.பி.ஓ, கே.பி.ஓ போன்ற அவுட்சோர்ஸிங் துறைகளிலும், மார்க்கெட்டிங் துறைகளிலும் மின்னுகிறார்கள். டெக்னிக்கல் ரைட்டிங் எனப்படும் நுகர்வோர் உபயோகப் பொருட்களின் விவரக் குறிப்புகளை எழுதுவது, இணைய தளங்களை வடிவமைப்பது போன்றவற்றில் அத்துறை வல்லுநர்களுக்கு இணையாக மொழியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும் மின்பதிப்புத் துறையில் டிஜிட்டல் காப்பி ரைட்டர் பணிக்கு அதிகத் தேவை நிலவுகிறது. கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நிகராகப் பெருகிவரும் பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உள்ளது என்பதாலும், பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளராகவும் பணிபெறலாம்.

பயிற்சி மையம்

வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கான IELTS, TOFEL மையங்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆங்கிலப் பட்டம் முடித்தவர்கள் கூடுதலாக இதற்கெனத் தனியாகப் பயிற்சியை முடித்தோ அதற்கான மையங்களின் அங்கீகாரம் பெற்ற கிளைப் பயிற்சி மையங்களைத் தொடங்கியோ சொந்தக்காலில் நிற்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொடர்பான வழிகாட்டு மையங்களைத் தொடங்கலாம். இதற்கு அத்துறையின் பிறிதொரு நிறுவனத்தில் சில காலம் பணி புரிந்த அனுபவமே கைகொடுக்கும்.

இது தவிர, ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதத் தெரிவது என்பது பரவலான வேலை வாய்ப்புச் சந்தை. ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்கள் தங்களது ஆய்வறிக்கை அல்லது தொழில்சார் அறிக்கைகளை வடிவமைக்கும்போது மொழிசார் வல்லுநரின் உதவி அதிகமாகத் தேவைப்படும்.

‘பக்கத்துக்கு இவ்வளவு’ என்று வீட்டிலிருந்தபடியேயும், வேறு பணியிலிருந்தபடியே பகுதி நேரமாகவும் சம்பாதிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். இது தவிர, இல்லத்தரசியாகவோ, பகுதி நேரப் பணியாகவோ இணையம் வாயிலாக ஆசிரியப் பணியாற்றிக் கணிசமாகச் சம்பாதிப்பவர்கள் நகரங்களில் அதிகரித்திருக்கிறார்கள்.

அரசு மற்றும் தனியார் துறையில் மக்கள் தொடர்புத் துறை பணிகள், கொள்கை விளக்கங்கள், பிரச்சாரங்கள்-பிரசுரங்களை உருவாக்குவது போன்றவற்றிலும் கணிசமான வேலை வாய்ப்பு உண்டு. முதுநிலைப் படிப்பாகச் சட்டம், மனிதவளத் துறை, மேலாண்மைத் துறை படிப்புகளை மேற்கொள்வது பரவலாகிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x