Last Updated : 25 Jun, 2019 11:19 AM

 

Published : 25 Jun 2019 11:19 AM
Last Updated : 25 Jun 2019 11:19 AM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

மக்கள்தொகை: சீனாவை விஞ்சும் இந்தியா

ஜூன் 17: சீனாவின் மக்கள்தொகையை இந்தியா 2027-ம் ஆண்டுக்குள் விஞ்சிவிடும் என்று ஐ.நா.வின் ‘உலக மக்கள்தொகை எதிர்பார்ப்பு 2019’ அறிக்கை தெரிவிக்கிறது.

2019 முதல் 2050–க்குள் இந்தியாவின் மக்கள்தொகை 27.3கோடி அதிகரிக்கும், நைஜீரியாவின் மக்கள்தொகை 20 கோடி அதிகரிக்கும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050-ம் ஆண்டில், உலக மக்கள்தொகை இந்த இரண்டு நாடுகளில் 23 சதவீதம் அதிகரிக்கவிருக்கிறது. தற்போது 770 கோடியாக இருக்கும் உலக மக்கள்தொகை, அடுத்த 30 ஆண்டுகளில், 200 கோடி அதிகரித்து 970 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ்: முதல் இடத்தில் நோவாக், ஒஸாகா

ஜூன் 17: விம்பிள்டன் போட்டிகள் தொடங்கவிருப்பதால், டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆடவர் பிரிவில் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகொவிச், மகளிர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒஸாகா ஆகியோர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றனர். 

கிரிப்டோகரன்சி அறிமுகம்

ஜூன் 18: பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தன் நீண்டநாள் டிஜிட்டல் பணமான ‘கிரிப்டோகரன்சி லிப்ரா’ திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  பணப் பரிவர்த்தனையை ‘கிரிப்டோகரன்சி’ எளிமைப்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். இந்த சேவை செயல்பட ஆரம்பித்தவுடன், ‘மெஸஞ்சர்’, ‘இன்ஸ்டாகிராம்’ வழியாக இந்த ‘லிப்ரா கிரிப்டோகரன்ஸி’யை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

இந்தியப் பொறியாளருக்கு விருது

ஜூன் 18: இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் நித்தேஷ் குமார், ‘சான்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான சுவாச உதவிக் கருவியைக் குறைந்த செலவில் உருவாக்கியதற்காக காமன்வெல்த் பொதுச்செயலாளரின் ‘நிலையான வளர்ச்சிக்கான புதுமை விருது’ லண்டனில் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் உருவாக்கியிருக்கும் இந்தக் கருவியால், இந்தியாவில் குறைப்பிரசவத்தில் பிறந்த பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் தங்கம் வென்ற சித்ரா

ஜூன் 18: ஆசிய சாம்பியன் பி.யூ.சித்ரா, ஸ்வீடனில் நடைபெற்ற ஃபோக்சாம் கிராண்ட் பிரிக்ஸ் மகளிர் பிரிவு 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். கடந்த ஏப்ரல் மாதம், தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சித்ரா தங்கம் வென்றிருந்தார்.

ஓம் பிர்லா: மக்களவை சபாநாயகர்

ஜூன் 19: ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓம் பிர்லா 17-வது மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓம் பிர்லாவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தைப் பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த கல்வி நிறுவனம்: மும்பை ஐ.ஐ.டி.

ஜூன் 19: உலகின் சிறந்த  பல்கலைக்கழகங்களைப் பட்டியலிடும் பிரபல ‘க்யூஎஸ்’ உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் - 2020 வெளியாகியிருக்கிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவிலிருந்து மும்பை ஐ.ஐ.டி. (152-வது இடம்), டெல்லி ஐ.ஐ.டி.  (182), பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி.  (184) ஆகிய நிறுவனங்கள் முதல் 200 இடங்களைப் பிடித்திருக்கின்றன. அமெரிக்காவின் எம்.ஐ.டி., ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x