Last Updated : 09 Apr, 2019 01:02 PM

 

Published : 09 Apr 2019 01:02 PM
Last Updated : 09 Apr 2019 01:02 PM

பயனுள்ள விடுமுறை: மனத்தை வளப்படுத்துவோம்!

மாணவப் பருவத்தில் உடல்நலனுக்கு இணையாக மனநலனுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். நடைமுறையில் உள்ள பாடத்திட்டம், தேர்வு முறைகள், பெற்றோர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு, போட்டி மிகுந்த கல்விச் சூழல் ஆகியவை மாணவப் பருவத்தினரை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன. அவற்றிலிருந்து விடுபட மனவள மேம்பாட்டுக்கான பயிற்சிகள் உதவும்.

பள்ளி வளாகத்தில் பயிற்சி

மனவெழுச்சி, முதிர்ச்சியற்ற போக்கு போன்றவை பதின்பருவத் தினரிடம் தென்படுவது சகஜம். இந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சி, இணையம் எனக் கவனத்தைக் குலைக்கும் அம்சங்களும் சேரும்போது பெற்றோரும் ஆசிரியர்களும் கவலை கொள்ளத்தக்க விளைவுகள் நேருகின்றன.

இதை புரிந்துகொண்ட கல்வித் துறை மனவளம் பேணலுக்கு எனப் பாடத்திட்டத்தைத் தொடங்கிப் பல்வேறு திட்டங்களைப் பள்ளி வளாகத்திலேயே செயல்முறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

கோடையில் பிரத்யேகப் பயிற்சி

பதின்ம வயது மாணவர்களுக்கு இயல்பாக நேரிடும் இனக்கவர்ச்சி, குழு மோதல், சம வயதினரால் பரவும் விபரீதப் பழக்கங்கள், படிப்பில் ஆர்வமிழக்கும் போக்கு, ஒழுக்கக் குறைவு, கவனச் சிதறல் உள்ளிட்ட சிக்கல்கள் மனவளக் கலைப் பயிற்சிகளால் சீராகும்.

இந்த மனவளக் கலை யோகப் பயிற்சிகளை, கோடை விடுமுறையை முன்னிட்டுப் பள்ளிக்கு வெளியே தனிப் பயிற்சியாகவும் மாணவர்கள் பெறலாம். பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் பலவும் கட்டணமின்றிச் சேவை அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

 

payanulla-2jpgஅ.பழனிவேலு, முதுகலை ஆசிரியர் மற்றும் மனவளக்கலைப் பேராசிரியர், திண்டிவனம்.right

மனமும் உடலும் மலர

விடலைப் பருவத்தில் இயல்பாக எழும் உடல், மனம் சார்ந்த தடுமாற்றங்களை நெறிப்படுத்த மனவளக்கலை பயிற்சிகள் உதவுகின்றன. தினசரி ஐந்து நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்ய மாணவர்களைப் பழக்கப்படுத்தியபோது கவனத்தைக் கூர்மையாக்க முடிந்தது.

அதிலும், வீண் சச்சரவில் ஈடுபாடு, பாடத்தைப் பாதிக்கும் குறும்புகள், பாடத்தில் போதிய கவனம் செலுத்தாதது போன்ற தடுமாற்றங்கள் உடைய மாணவர்களையும் சீர்படுத்த இந்தப் பயிற்சி கைகொடுத்தது.

இது தவிர அரசு உத்தரவுப்படி பிரத்யேகமாக நடைபெறும் வாராந்திர யோகா வகுப்புகள் வாயிலான பல்வேறு ஆசனங்களும் அவர்களுக்கு உதவுகின்றன.

 ஓரிடத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகப்படுத்த பத்மாசனம், வஜ்ராசனம் உதவுகின்றன. நினைவாற்றலுக்கு ஏகபாதாசனம், உடலை இலகுவாக்க ஹாலாசனம், சர்வாங்காசனம் என வயதுக்கு ஏற்ப பலன் தருகின்றன.

விருப்பமுள்ள மாணவர்கள் அருகிலிருக்கும் மனவளக்கலை மன்றங்கள் வாயிலாக இப்பயிற்சிகளை மேலும் விரிவாகப் பெறலாம். 14 வயது நிறைவடைந்த மாணவர்களுக்கு என காயகல்பப் பயிற்சி வழங்கப்படுகிறது.

நினைவாற்றல் மேம்பாடு, மனக்கட்டுப்பாடு, விரைவாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றல், முகத்தில் தெளிவு, உடலின் சமநிலைப் பராமரிப்பு போன்ற அனுகூலங்களை இப்பயிற்சி வழங்கும்.

உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இயக்கம் தருவதுடன் மனதுக்கு அமைதி தரும் எளிமையான உடற்பயிற்சிகளும் சில மையங்களில் கட்டணமில்லாமல் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றுக்குத் தினசரி அரை மணி நேரம் என 10 நாட்கள் ஒதுக்கினால்போதும்.

கை, கால், கண்களுக்கான பயிற்சிகள், மகராசனம், அக்குபிரஷர், உடலைத் தளர்த்தல் என 9 வகையான பயிற்சிகள் இதில் அடங்கும். 8 வயது தொடங்கி இந்த உடற்பயிற்சிகளை மாணவர்கள் பெறலாம்.

கோடைக்காலத்தை முன்னிட்டுப் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘யோகமும் இளைஞர் வல்லமையும்’ என்ற குறுகிய காலச் சான்றிதழ் பயிற்சி போன்றவையும் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x