Published : 30 Apr 2019 11:04 AM
Last Updated : 30 Apr 2019 11:04 AM

அந்த நாள் 40: ராஜாவைப் போல வாழ்ந்த ஜாகிர்தார்கள்

ஃபதேபூர் சிக்ரி, பொ.ஆ. 1560

“முகலாய ஆட்சிகளில் அக்பர் ஆட்சிக் காலம் புகழ்பெற்றது. அதைப் பத்தி புத்தகங்கள்ல நிறையாவே படிச்சிருப்போம். அவரோட சேர்த்து 300 வருசத்துக்கு முகலாயர்கள் ஆட்சி நம் நாட்டுல தொடர்ந்துச்சு, செழியன்.”

“பொதுவா நாம அரசர்களைப் பத்திப் பேசுறதோட, அவங்க காலத்துல மக்கள் எப்படி வாழ்ந்தாங்கன்னுதானே அதிகமா பேசியிருக்கோம், குழலி.”

“ஆமா, முகலாயர் காலத்துல மக்களோட வாழ்க்கை எப்படி இருந்துச்சுன்னுதான் சொல்லப் போறேன். ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான வேறுபாடு அன்னைக்குத் திட்டவட்டமா இருந்துச்சு. இதை அவங்களோட வீடுகளைப் பார்த்தே புரிஞ்சுக்கலாம்.

ஜன்னல் இல்லாத ஒற்றையறைக் குடிசைகள்ல ஏழைகள் வாழ்ந்தாங்க. பூசப்படாத செங்கற்கள், சாணி மெழுகப்பட்ட தரை, புறக்கடைப் பகுதியில் மாடுகள், எருமைகளுடன் அந்த வீடுகள் இருந்துச்சு. பாய்களிலும், வெயில் காலங்களில் கயிற்றுக் கட்டில்களிலும் அவங்க தூங்கினாங்க. மண் பாத்திரங்கள், மிகக் குறைவான ஆடைகளையே அவங்க பயன்படுத்தினாங்க. போரோ பஞ்சமோ வந்தா, அதிகமா இறந்துபோனது இந்தச் சாதாரண மக்கள்தான்.”

“எல்லாக் காலத்திலும் அதுதான் நடக்குது. சரி, பணக்காரங்க வீடெல்லாம் எப்படி இருந்துச்சு?”

“செல்வந்தர்களோட வீடுகள் மிகப் பெரிய சுற்றுச்சுவர்களுடன் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்துச்சு. ‘மர்தானா’ என்ற பகுதி ஆண்களுக்கான வெளிப்பகுதியாகவும் ‘ஸெனானா’ என்ற உள்பகுதி பெண்களுக்கானதாவும் இருந்துச்சு.

குளங்கள், தோட்டங்கள், செயற்கை நீருற்று, சமையலறை, குதிரை லாயம், பணியாளர் குடியிருப்பு, முற்றம் ஆகிய எல்லாமே அவங்க வீடுகள்ல இருந்துச்சு. இந்த மாளிகைகள் ‘ஹவேலி’ எனப்பட்டன.

வரவேற்பறை அல்லது ‘திவான் கானா’ எனப்பட்ட அறையில் விலை உயர்ந்த தரைவிரிப்புகளும் திண்டுகளும் வைக்கப்பட்டிருந்துச்சு. இந்த விரிப்புகளிலோ தாழ்வான திவான் பாணி சோபாகளிலோ உட்கார்ந்து பேசினாங்க. பித்தளை, கண்ணாடியால் செய்யப்பட்ட மெழுகு வர்த்தித் தாங்கிகள், எண்ணெய் விளக்குகள் வெளிச்சம் கொடுக்கவும் அறைகளுக்கு நறுமணம் தர ஊதுபத்தியும் பயன்படுத்தப்பட்டுச்சு.

கோடைக் காலத்துல ‘பன்காஸ்’ என்றழைக்கப்பட்ட உத்தரத்துலேர்ந்து ஆடுறது மாதிரி மாட்டப்பட்ட நீண்ட துணிகளைக் கீழேயிருந்து கயிறு மூலமா இழுத்து ஆட்டுறதுக்கு வேலைக்காரங்க இருந்தாங்க. இதுதான் அந்தக் கால ‘ஃபேன்’. இந்தத் துணிக் காற்றாடிகளை அசைக்கிற வங்க பேரு ‘பங்காவாலா’. துணிக் காற்றாடி களை நீண்ட நேரம் அசைக்க வேண்டி யிருக்கும் போது, பங்காவாலாக்கள் காலில் கயிற்றைக் கட்டி அசைச்சதும் நடந்திருக்கு.”

“பணக்காரங்க ராஜா மாதிரி வாழ்ந்தாங்கன்னு சொல்லு.”

“நிச்சயமா, பணக்காரங்களும் அரச குடும்பத்தினரைப் போலவே சொகுசா வாழணும்னு நினைச்சாங்க. இப்படி பிரபுக்கள், செல்வந்த வியாபாரிகள், அரசவை அதிகாரிகள் நகரங்கள்ல வாழ்ந்ததால, நகரங்கள்தாம் வளர்ந்துச்சு. முகலாய ஆட்சில ஆக்ரா, லாகூர் போன்ற நகரங்கள் அன்றைய லண்டனைவிடப் பெரிசா இருந்துள்ளதா வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுது.”

“ஆனா, அதே ஊர்கள் தானே பின்னாடி கிழக்கிந்திய கம்பெனியிடம் அடிமைப்பட்டன.”

“நீ சொல்றதும் சரிதான். அன்னைய பணக்காரங்கள்ல பலரும் ‘ஜாகிர்தார்’களா இருந்தாங்க. முகலாயப் பகுதிகள், ‘ஜாகிர்தார்’ என்றழைக்கப்பட்ட குறுநில மன்னர்களைப் போன்றவர்களின் கட்டுப்பாட்டுலதான் இருந்துச்சு.

வரி வசூலிப்பதும் சொகுசு வாழ்க்கை வாழ்றதுமே அவங்களோட வேலையா இருந்துச்சு. ஜாகிர்தார்களுக்குக் கீழேயிருந்த ஜமின்தார்கள் (நிலச்சுவான்தார் என்பதற்கான பாரசீகச் சொல்) கிராமங்களைக் கட்டுப்பாட்டுல வைச்சிருந்தாங்க. தங்கள் உற்பத்தில பாதியை உழவர்கள் வரியா செலுத்தும் நிலைமையே இருந்துச்சு.”

“வரி வசூல்ல கிடைச்ச பணத்தை வர்த்தகத்திலோ உழவிலோ முதலீடு செய்யாம, சொகுசு வாழ்க்கைல ஜாகிர்தார்கள் தொலைச்சிட் டாங்கன்னு சொல்ல வர்ற”

“ஆமா, சொகுசு வாழ்க்கையால ஏற்பட்ட அதிகப்படி செலவால கடனோடவும் இருந்தாங்க செழியன்.”

“இது கொஞ்சம் அதிகப்படியாத் தான் இருக்கு, குழலி.”

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

மக்கள் தொகை 18 கோடி

# அக்பரின் நிதி அமைச்சர் தோடர் மால், பொ.ஆ. 1581-ல் ஒரு கணக்கெடுப்பை நடத்தினார். அதில் 120 பேரூர்கள் (ஷெகர்), 3,200 சிற்றூர்கள் (கஸ்பா) போன்றவை இருந்துள்ளன. ஒவ்வொரு கஸ்பாவைச் சுற்றியும் ஆயிரம் கிராமங்கள்வரை இருந்துள்ளன. அக்பர் ஆட்சி செய்த பகுதியின் மொத்த மக்கள்தொகை 18 கோடியாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

# ஷாஜகான் காலத்தில் டெல்லி அருகே நிர்மாணிக்கப்பட்ட புதிய நகரமான ‘ஷாஜகானாபாத்’ நகர் முதன்முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டது. இந்த நகரில் ஒரு மையப் பகுதியும் சந்தை, கைவினைக் கலை, வர்த்தகம் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிப் பகுதிகளும் பிரிக்கப்பட்டுக் கட்டப்பட்டன.

 

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x