Last Updated : 13 Nov, 2018 10:58 AM

 

Published : 13 Nov 2018 10:58 AM
Last Updated : 13 Nov 2018 10:58 AM

மழையை உருவாக்கும் ட்ரோன்

இன்றைய நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாகத்தான் பல்வேறு வானிலை மாறுபாடுகள் ஏற்படுகின்றன. புயல், வெள்ளம், அதிக வெப்பம் இவற்றுக்கெல்லாம் மனிதர்கள் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான் காரணம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடப் பலரும் பலவிதமான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். உடுமலை ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் திருவருள்செல்வன், ட்ரோன் கருவியை மாதிரியாகக் கொண்டு ஆள் இல்லாக் குட்டி விமானங்கள் மூலம் செயற்கை மழையை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சிகளில் மாவட்ட, மாநில அளவில் இவரது படைப்பு முதலிடம் பெற்றுள்ளது.

எதிரி அல்ல நண்பனே!

செயற்கை மழையை உருவாக்கக்கூடிய ஆள் இல்லாக் குட்டி விமானத்தை வடிவமைத்திருப்பது மட்டுமல்லாமல் பேரழிவைத் தடுக்கும் கருவியையும் இவர் கண்டுபிடித்திருக்கிறார். “சீர்கேட்டின் நிலை காரணமாகப் பருவமழை மாற்றமடைகிறது. அதனால் சில இடங்களில் மட்டும் கன மழை பொழிந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் புயல், வெள்ளப் பாதிப்புக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் காரணம்.

புதிய கருவியின் மூலம் காற்றின் வேகத்தைத் திசை திருப்பவும், வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ அதன் தன்மையை மாற்றவோ இயலும்” என்கிறார் திருவருள்செல்வன்.

இயற்கை செழிக்கத் தேவை மழை. ஆனால், அந்த மழையையே செயற்கையாக உருவாக்குவது அல்லது மடை மாற்றுவது என்பது எப்படி நல்ல கண்டுபிடிப்பாக இருக்க முடியும்?

 

‘Cloud seeding' என்ற முறையில் வேதிப்பொருள் மூலம் காற்றின் தன்மையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து மழைப் பொழிவைச் செயற்கையாக ஏற்படுத்தலாம். அரபு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விமானம் மூலம் அதிகப் பொருள் செலவில் செயற்கை மழையை உருவாக்கி வருகின்றன. ஆனால், சில்வர் ஐயோடைட் உள்ளிட்ட அபாயகரமான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும்போது அது இயற்கைக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்கும். என்னுடைய கண்டுபிடிப்போ வடிநீரில் சோடியம் குளோரைட் எனப்படும் உப்பைக் கலந்து அதன் மூலமாக இயற்கைக்குக் கேடுவிளைவிக்காத வேதிப்பொருளை உருவாக்குவதாகும். இந்தியப் பொருளாதாரத்துக்குத் தக்க வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தொடக்கமாக இருக்கும். என்கிறார் திருவருள்செல்வன்.

ஆர்வத்துக்கு ஆதரவு கொடுங்க!

திருப்பூரில் செயிண்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் இப்படைப்பு முதலிடம் பெற்றது. திருச்சியில் இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.

மேலும் திருவருள்செல்வன் கூறுகையில், “பள்ளிப் பாடத்தை மட்டுமே சார்ந்திருக்காமல் மாணவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும். கல்வி என்பது மனித வளத்தை மேம்படுத்தவும், தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. மாணவருக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்த அரசும் கல்விக் கூடங்களும் பெற்றோரும் உதவ வேண்டும்” என்கிறார் இந்த ‘ரெயின் பாய்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x