Last Updated : 16 Oct, 2018 11:30 AM

 

Published : 16 Oct 2018 11:30 AM
Last Updated : 16 Oct 2018 11:30 AM

அறம் செய்ய விருப்பமா?

ஒரு கல்விச் சாலை திறக்கும் இடத்தில் ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். அப்படித் திறக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளில் நூலகங்களை உண்டாக்கிவருகிறது இளைஞர் குழு ஒன்று.

ஆதரவற்றோர் இல்லங்கள், விளிம்பு நிலை மக்கள் வாழும் இடங்கள், பள்ளிகள் என நூறு இடங்களில் நூலகங்களைக் கட்டமைக்க வேண்டும் எனும் இலக்கைத் தங்களுக்குள் வகுத்துக்கொண்டு செயல்பட்டுவருகிறது அறம் செய்ய விரும்பும் இந்த இளைஞர் குழு.

நூலகங்களை அமைப்பதுடன், அரசுப் பள்ளிகளைப் புனரமைப்பது, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குவது, பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மரங்களை நடுவது போன்ற செயல்களிலும் கவனம் செலுத்திவருகின்றனர். 

இல்லம் தேடி வரும் நூலகம்

"2015-ல் பெருவெள்ளம் வந்தபோது செங்கல்பட்டிலிருந்து மீஞ்சூர்வரை பொது மக்களுக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தோம். ஆதரவற்றோர் இல்லங்களில்தான் முதலில் நூலகங்களை அமைக்கத் தொடங்கினோம். குறிப்பாகப் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் பின்தங்கியிருக்கும் குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் கல்வி உதவியைச் செய்துவருகிறோம்.

அரசுப் பள்ளிகளை அடையாளம் கண்டு அதற்குத் தேவையான வசதிகளைப் பல்வேறு நிறுவனங்களிலிருந்து சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்றுத் தருவதன் மூலமும் உதவுகிறோம். அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், முக்கியமாக ஒருமித்த கருத்துடைய நண்பர்களின் உதவி இருப்பதால் இதுபோன்ற பணிகளைத் தடையில்லாமல் செய்ய முடிகிறது. மறைமலை நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் பல குழந்தைகள் தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் படித்துவருகிறார்கள். அவர்களுக்கும் உதவி செய்திருக்கிறோம்” என்கிறார் ராஜசிம்மன்.

இதுவரை சென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் இரவு பாடசாலை, காஞ்சிபுரம் மறைமலை நகரில் செயல்படும் நெஸ்ட் ஆதரவற்றோர் இல்லம், கூடுவாஞ்சேரியில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரபாவதி சேவா கேந்திரா, வண்டலூரில் செயல்படும் ஆதரவற்றோருக்கான அருள் இல்லம், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் பழங்குடியினருக்கான அரசு தொடக்கப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பன்னிரண்டு இடங்களில் நூலகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.

கன்னியாகுமரியில் இயங்கும் பழங்குடியினருக்கான அரசு தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கியிருக்கின்றனர். தற்போது திருவள்ளூர் மாவட்டம் சிங்கிலிக்குப்பம் பகுதியில் செயல்படும் பஞ்சாயத்து போர்டு தொடக்கப் பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

“பிற தன்னார்வ அமைப்புகளின் ஆதரவில், உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் அளிக்கும் நன்கொடை, நண்பர்கள் அளிக்கும் உதவியால் இத்தகைய பணிகளைச் செய்துவருகிறோம். அதோடு, அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பிரபு, சேஷசாய், பாலகார்த்திகேயன், டோனி, பாலமுருகன் ஆகியோரின் ஊக்கமும் அர்ப்பணிப்பும்தான் காரணம்” என்கிறார் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான ராஜசிம்மன்.

தொடர்புக்கு: 9789389282

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x