Last Updated : 24 Jul, 2018 10:31 AM

 

Published : 24 Jul 2018 10:31 AM
Last Updated : 24 Jul 2018 10:31 AM

ஆயிரம் வாசல் 14: குழுவாழ்வைக் கொண்டாடும் சோலை

மதுரையில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தேன். ஒன்பதாம் வகுப்பில் ஃபெயிலானதும் என்னை என்ன செய்வதென்று தெரியாமல் இங்கு வந்து அப்பா-அம்மா சேர்த்துவிட்டார்கள். தண்டனையும் கட்டுப்பாடும் இல்லாமல் விதவிதமான விஷயங்களில் ஈடுபட்டுக் கற்றுக்கொள்ளும் இந்தச் சூழல் புத்துணர்வு ஊட்டியது. மலையேறுதல், இயற்கை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதெல்லாம் எனக்குப் பிடித்தமானவை. ஆனால், படிப்பது, பரீட்சை எழுதுவதெல்லாம் சிக்கல்தாம்.

தேர்வு முடிவு வெளியானதும் ஆசிரியர்கள் என்னை அடிக்கப்போகிறார்கள் என்ற பயத்தில் உறைந்திருந்தேன். ஆனால், அவர்கள் என்னிடம் பொறுமையாக உரையாடினார்கள். வீட்டுக்கு என்னுடைய மதிப்பெண் சான்றிதழை அனுப்பிவிட்டார்கள். அப்பாவிடம் அடிவாங்கும் பயத்துடன் வீட்டுக்குப் போனேன். அம்மாவும் அப்பாவும் பேசினார்களே தவிர அடிக்கவில்லை. அவர்களிடம் என்னுடைய ஆசிரியர்கள் பேசியிருப்பார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.

பள்ளி என்றாலே நடுநடுங்கிய நான் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தெழுந்து தற்போது இதே பள்ளியில் தன்னார்வ ஆசிரியராக உருமாறும் நிலையை அடைந்திருக்கிறேன். அதற்கு முக்கியக் காரணம் என்னுடைய பலத்தை இந்தப் பள்ளி வளர்த்தெடுத்தது.

இயற்கை மீதான என்னுடைய பேரார்வம் ஊக்குவிக்கப்பட்டதால் புலிகளைப் பாதுகாத்தல், கணக்கெடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டேன், பறவை ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். இப்படி நான் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை உறுதிசெய்தது சோலைப் பள்ளி” என்கிறார் நித்தின்.

இவர் கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் பேத்துப் பாறைக்கு அருகில் உள்ள சோலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்

வகுப்பறை ஒரு பகுதி

மாணவர்களின் சமையலறை, மாணவர்கள் பயிரிடும் தோட்டம், வகுப்பறைத் தோட்டம், தனி நபர் தோட்டம், அறிவியல் சோதனைக்கூடம், கணினி சோதனைக்கூடம், மறுசுழற்சிக்கான குப்பையறை, மாட்டுக்கொட்டகை, சாண எரிவாயு தயாரிக்கும் கூடம், காபி தயாரிக்கும் இயந்திரம், தண்ணீர் சுத்திகரிப்பு மையம், தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரித்தல், மரச்சாமான்கள் செய்யும் பட்டறை, பொதுச் சமையலறை, நாடகப் பயிலரங்கு அறை, இரும்புப் பட்டறை, இசை அரங்கம், பொது அரங்கம் இவை அனைத்தும் இருந்தால்தான் அது பள்ளிக்கூடம். இவற்றில் வகுப்பறையும் ஒன்று என்பதாகச் செயல்பட்டுவருகிறது சோலைப் பள்ளி.

தத்துவ ஞானியும் மாற்றுக் கல்விச் சிந்தனையாளருமான ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கல்விமுறையை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பள்ளி. 

“குழந்தைகள் மகிழ்ச்சியாகப் பயில வழிவகை செய்து, அறிவான ஆரோக்கியமான நுண்ணுணர்வுள்ள குடிமக்களை உருவாக்குவதே எங்களுடைய நோக்கம். இந்தக் கனவை நிஜமாக்க மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூடி இயங்கும் குழுவாழ்க்கைத் திட்டத்தை முன்வைக்கிறோம். குழுவாழ்க்கை என்பது சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுதல், கற்றலில் ஈடுபடுதல் என நீள்கிறது” என்கிறார் சோலைப் பள்ளியின் நிறுவனர் ப்ரெயின் ஜென்கின்ஸ்.

aayiram 2jpg

சொல்ல அல்ல செயல்

தங்களது பள்ளிக்கூடத்தைச் சிலாகித்து அதன் மாணவர்கள் பகிர்ந்துகொண்டவற்றில் சில:

# பள்ளி வளாகத்துக்குள்ளேயே இஷ்டப்படி ஆடி, ஓடி உலாவுவோம்.

# ஆசிரியர்கள் ஒருபோதும் மாணவர்களை அடிப்பதில்லை.

# சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து ஏட்டில் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதைச் செயல்முறைப்படுத்திவருகிறோம்

# தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணையின்றிச் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கிறோம். சூரிய ஒளி குறைவாக இருக்கும்போது தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட இயற்கை மின் ஆற்றல் மூலமாக மட்டும்தான் எங்களுடைய ஒட்டுமொத்த பள்ளிக்கும் மின்சாரம் கிடைக்கிறது.

# சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயு சமையலுக்குப்  பயன்படுத்தப்படுகிறது.

# இயற்கை வேளாண்மையும் செய்யப் பழகுகிறோம்.

# குப்பைகள் முறையாக அறையில் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.

# ஆசிரியர்களும் நாங்களும் வேறுபாடின்றிப் பழகுகிறோம்.

# நகர வாழ்க்கை முறையில் இருந்து வித்தியாசப்பட்டுக் குழு வாழ்க்கை வாழ்கிறோம்.

# எங்களுக்கு இருக்கும் மரச்சாமான் பட்டறையில் வேலை செய்து நாங்களே மரப் பொருட்களை உருவாக்குகிறோம்.

சோலைப் பள்ளியின் மாணவர்கள் இப்படித் தங்களுடைய அனுபவத்தை அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

“தங்கும் விடுதியோடு சேர்த்து 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது எங்களுடைய பள்ளி. 5-க்கு 1 என்ற மாணவ-ஆசிரியர் விகிதம் இங்குள்ள தனிச் சிறப்பு. 7 வயதுக்கு மேல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள்  International General Certificate of Secondary Education bridge IN499 (IGCSE), O level, A level பாடத்திட்ட முறையில் தேர்வெழுதுகின்றனர்.

வழக்கமான பாடங்களைப் போதிக்கும் அதே நேரம் ஒவ்வொரு பாடத்திலும் ஆழமாகப் பயணித்தல், விதம் விதமான கற்றலில் ஈடுபடல், நுட்பமாகக் கற்றல் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இங்கே கற்பவை அனைத்தும் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக மாற்றப்பட்டிருப்பதால் அவர்கள் கற்க வேண்டிய பாடமாக இல்லாமல் அத்தியாவசியத்தில் ஒன்றாக உள்ளது” என்கிறார் பள்ளியின் செயலர் சித்ரா.

பள்ளியைத் தொடர்புகொள்ள: www.sholaicloaat.org, 70944 24411


கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x