Published : 06 Apr 2014 10:13 AM
Last Updated : 06 Apr 2014 10:13 AM

ஜெயமுண்டு பயமில்லை - 06/04/2014

‘சுமைதாங்கி’ என்ற பெயரில் ஓர் உணவுப் பொருள் உள்ளது. விடை கடைசியில். பள்ளியில் தென்னை மரத்தைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்லியிருந்தார்கள். ஒரு மாணவன் இன்னொரு மாணவனின் கட்டுரையை அப்படியே காப்பியடித்திருந்தான். ஆசிரியர் கண்டித்த போது அவன் சொன்னான், “சார், அவன் எனக்கு அடுத்த வீடு. ரெண்டு பேர் வீட்டு நடுவிலும் ஒரே தென்னை மரம்தான் இருக்கு.”

சுவாரசியமான பதில்தான். ஆனால், நான்கு வரிகள் சுயமாக எழுதத் தெரியாமல் பலர் இருப்பது வருத்தத் துக்குரியது. அறிவியல் அளவுக்கு மொழிப் பாடங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மொத்த மதிப்பெண் அதிகம் வாங்க வேண்டும் என்பதற்காகத் தாய்மொழியை விட்டுவிட்டு ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் என்றெல்லாம் படிக்கும் நிலை இங்கு இருக்கிறது.

தாய்மொழியில் மட்டுமல்ல, ஆங்கிலத்தில்கூட இதே நிலைமைதான். டிவிட்டர், ஃபேஸ்புக் வந்த பிறகு பலருக்கும் 140 எழுத்துகளுக்கு மேல் யோசிக்கவே முடியவில்லை. மொழி அறிவு என்பது மனித மூளையில் உள்ள வெர்னிக்கி ஏரியா (Wernicke’s Area) என்ற பகுதியின் செயல்பாடாகும். ஓசைகளுக்கும் எழுத்துகளுக்கும் அதுதான் அர்த்தம் கொடுக்கிறது.

மொழிப் பாடங்களில் சிறந்துவிளங்க வேண்டுமானால் 3 விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று மொழிவளம் (Vocabulary) அதாவது, நிறைய வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருப்பது. 2-வது இலக்கணப் பிழையில்லாமல் எழுதுவது. 3-வது சுயமாகச் சிந்தித்து எழுதுவது.

இதில் மொழிவளம் பெருக வேண்டுமானால் நிறைய படிக்க வேண்டும். கதைப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கற்பனைக் கதைகளைப் படிக்கும்போது நம் மொழி வளம் திகரிக்கிறது. புதுப்புது வார்த்தைகள் நமக்கு அறிமுகமாகின்றன. செய்தித்தாளைச் சத்தமாக வாசிப்பது நல்ல பழக்கம். நீங்களே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதுபோல ஏற்ற இறக்கத்துடன் வாசியுங்கள்.

புது வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதோடு, அதை அடிக்கடி பயன்படுத்தவும் செய்யுங்கள். செல்லமாக “போடா ஞமலி (நாய் தான்)” என்று நண்பனைத் திட்டுங்கள். மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பை ஆராயுங்கள். அதாவது, தமிழின் ‘அரிசி’ என்ற சொல்லுக்கும் ஆங்கிலத் தின் ரைஸ் (Rice) என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்பு, ‘அஷ்ட’ என்ற வடமொழிச் சொல்லுக்கும் ஆக்டோ (Octo) என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்பு என்பதுபோல ஆராயலாம்.

குறுக்கெழுத்துப் புதிர், விடுகதைகள், ஸ்க்ராபிள் (Scrabble) போன்ற விளையாட்டுகள், ஒரு நிமிடத்துக்குள் ‘க’ அல்லது ‘ச’ என்ற எழுத்தில் தொடங்கும் எத்தனைச் சொற்களைச் சொல்ல முடியும் என்பதுபோல் சுவாரஸ்ய மான விளையாட்டுகள் விளையாடலாம். மொழி இல்லை யேல் சிந்தனை இல்லை. நல்ல மொழி வளம் நல்ல சிந்தனைக்கு முதல் படி. ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு ‘மைதா’ என்று சில நொடிகளுக்குள் பதிலளித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் கில்லிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x