

கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி, லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. அதேவேளையில் மற்ற 3 லீக் ஆட்டங்களிலும் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறியதாவது: இந்தியாவுடனான போட்டி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசாங்கத்தின் முடிவு, நாங்கள் அதை மதிக்கிறோம்.
அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே நாங்கள் செய்வோம். நாக் அவுட் சுற்றிலும் அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எப்படியிருந்தாலும், போட்டி நடக்குமா இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அரசாங்கம் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறது, நாங்கள் அதையே செய்யப் போகிறோம். போட்டி பற்றி எனக்குத் தெரியாது.
அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் நாங்கள் மீண்டும் இந்திய அணியுடன் விளையாட நேர்ந்தால், நாங்கள் மீண்டும் அரசாங்கத்தின் ஆலோசனையின்படி செயல்படுவோம். வங்கதேச வீரர்கள் எங்களது சகோதரர்கள். அந்த அணி இல்லாததை பார்க்க வருத்தமாக உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் நாங்கள் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தோம்.
அது கடந்த காலம். இது புதிய உலகக் கோப்பை, புதிய அணி. நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். ஒரு கேப்டனாக இது எனக்கு முதல் உலகக் கோப்பை தொடர். அதனால் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு கேப்டனாக, நான் முன்னின்று அணியை வழிநடத்தவும், அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்யவும், அணியின் சிறந்த திறனை வெளிக்கொண்டு வரவும், வீரர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்கவும் விரும்புகிறேன்.
ஆசிய கோப்பைக்கு பின்னர் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். சிறப்பாகச் செயல்படுவோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
கடந்த 3 உலகக் கோப்பை தொடர்களிலும் நாங்கள் முதல் சுற்றுடன் வெளியேறினோம். இந்தியாவிடமும் தோல்வி அடைந்தோம். இந்த மூன்று தொடர்களில், மக்களால் எங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அல்லது ஒரு அணியாக நாங்களே எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் கிரிக்கெட்டை விளையாடவில்லை.
ஆனால் அது கடந்த காலம், அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். இலங்கையில் நிலவும் வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் சிறப்பாக விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம், எந்த வகையிலான சவால்கள் வந்தாலும், நாங்கள் அவற்றைச் சமாளிப்போம். இவ்வாறு சல்மான் அலி ஆகா கூறினார்.