

ராஞ்சி: எதிரணியின் சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆட முயற்சிப்போம் என இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:
“கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களாக நாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த முறையில் விளையாட தவறினோம். அதை நிச்சயம் அறிவோம். அதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் சிறந்த முறையில் சுழற்பந்து வீச்சை விளையாட முயற்சிப்போம். ராஞ்சியில் நடைபெறும் போட்டியை காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மைதானம் வந்தால், அது வீரர்கள், ரசிகர்களுக்கு நிச்சயம் உற்சாகமானதாக அமையும்” என அவர் தெரிவித்தார்.