

வைபவ் சூர்யவன்ஷி
குவாஹாட்டி: வைபவ் சூர்யவன்ஷிக்கு பேட்டிங் செய்ய மிகவும் பிடிக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஆட்டத்துக்கு பிறகு ராஜஸ்தான் கேப்டன் ரியான் பார்க் கூறியதாவது:
“இந்த சீசனில் 14 ஆட்டத்திலும் நீங்கள் (வைபவ் சூர்யவன்ஷி) விளையாடுவீர்கள் என்பதை அவரிடம் தெரிவித்தேன். ஊடகம், ஆட்டத்தின் போக்கு என எதையும் கண்டு கொள்ள வேண்டாம் என சொன்னேன். அவருக்கு பேட் செய்ய மிகவும் பிடிக்கும். அதனால் அவர் விரும்பும் வரை பேட் செய்ய அனுமதிக்க வேண்டும் என பயிற்சியாளர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவரது ஆட்டம் இந்த இன்னிங்ஸ் போலதான் இருக்கும்.
நானும், துருவ் ஜுரேலும் நான்காவது ஓவர் வரை அவரது ஆட்டத்தை டக்-அவுட்டில் இருந்து பார்த்து வியந்தோம். அவரால் இது எப்படி முடிகிறது? என்ன செய்கிறார்? என பேசினோம். அவர் மாதிரியான ஒரு வீரர் எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி” என்றார்.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் அறிமுகமானார். இதுவரை 8 இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் 139 பந்துகளை எதிர்கொண்டு 304 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். இந்திய இளையோர் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.