

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: மதுரை எம்ஜிஆர் (ரேஸ் கோர்ஸ்) விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரூ.20 கோடி மதிப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் பார்வையாளர் அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 14-வது ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை, மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூபாய் 20 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மைதானம் மற்றும் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நேற்று மாலை நடைபெற்றது.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஹாக்கி மைதானம் மற்றும் பார்வையாளர் அரங்கை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, எம்எல்ஏக்கள் தளபதி, ஆ.வெங்கடேசன், பூமிநாதன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.