

சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசினார். திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் மதிவாணன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். நடராஜன், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 158 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பிரதோஷ் ரஞ்ஜன் பால் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், கேப்டன் துஷார் ரஹேஜா 17 பந்துகளில், 7 சிக்ஸர்களுடன் 48 ரன்களும் விளாசினர். திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. மதுரை பேந்தர்ஸ் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணியும் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை தன்வசம் வைத்துள்ளது.