

குவாஹாட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் தொடரில் 0-1 என இந்திய அணி பின்தங்கியுள்ளது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது. கழுத்து பகுதியில் காயம் அடைந்த ஷுப்மன் கில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் ரிஷப் பந்த் முதன்முறையாக முழுநேர கேப்டனாக செயல்பட உள்ளார். ஷுப்மன் கில் இடத்தில் சாய் சுதர்சன் களமிறக்கப்படக்கூடும். இதேபோன்று அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
கொல்கத்தா போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான சைமன் ஹார்மர் பந்தில் இந்திய பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டிருந்தது. சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4 ஆட்டங்களில் சுழற்பந்து வீச்சை சரியாக கையாள முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் சுழற்பந்து வீச்சை அணுகுவதில் இந்திய பேட்ஸ்மேன்கள் தொழில்நுட்பரீதியாக தங்களது ஆட்ட நுணுக்கங்களை மாற்றி அமைப்பதிலும் கவனம் செலுத்தக்கூடும். மேலும் முதல் போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களுமே அவசரகதியில் விளையாடி விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் களத்தில் நேரத்தை செலவிட்டு ரன்களை சேர்க்க இந்திய அணி வீரர்கள் முயற்சிக்கக்கூடும்.
உலக டெஸ்ட் சாம்பியனான தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. அந்த அணி இந்த போட்டியை டிராவில் முடித்தாலே டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துவிடும். சுழற்பந்து வீச்சில் சைமன் ஹார்மர், கேசவ் மஹாராஜ் கூட்டணி மீண்டும் ஒரு முறை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இவர்களுக்கு உறுதுணையாக வேகப்பந்து வீச்சில் மார்கோ யான்சன் செயல்படக்கூடும்.
முதல் டெஸ்டில் முக்கியமான கட்டத்தில் அரை சதம் அடித்த தெம்பா பவுமா, அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ரியான் ரிக்கெல்டன், எய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், டோனி டி ஸோர்ஸி, கைல் வெர்ரெய்ன் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தால் அணியின் பலம் அதிகரிக்கும்.
ஆடுகளம் எப்படி? - குவாஹாட்டி பர்சபாரா மைதானத்தில் முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இங்குள்ள ஆடுகளம் சிவப்பு மண் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் கணிசமாக புற்கள் உள்ளன. இந்த புற்கள் நீக்கப்பட்டால் பந்துகள் அதிக அளவில் சுழலும். மாறாக புற்கள் அப்படியே விடப்பட்டால் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும்.
அனுபவம் இல்லாத ரிஷப் பந்த்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த உள்ள ரிஷப் பந்த்துக்கு கேப்டனாக போதிய அனுபவம் இல்லை. இது முதல் டெஸ்ட் போட்டியில் நன்கு வெளிப்பட்டது. ஏனெனில் 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது நாள் ஆட்டத்தின் இறுதியில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்து இருந்தது. ஆனால் 3-வது நாள் ஆட்டத்தை ரிஷப் பந்த், வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டு தொடங்கினார். இதன் பின்னர் தெம்பா பவுமா, பின்வரிசை வீரர்களின் துணையுடன் 60 ரன்கள் கூடுதலாக சேர்த்தார். இது போட்டியின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரபாடா விலகல்: விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடையாததால் அவர், 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.