

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.
கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 117, துருவ் ஜூரெல் 115, ரிஷப் பந்த் 63 ஷுப்மன் கில் 50 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 83.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருந்தது. சோனல் தினுஷா 85 ரன்களும், லகிரு குமாரா 8 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாலோ-ஆனை தவிர்க்க மேற்கொண்டு 38 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. லகிரு குமாரா 58 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடிய சோனல் தினுஷா தனது 2-வது சதத்தை விளாசிய நிலையில் 162 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்த நிலையில் சரண்ஷ் ஜெயின் பந்தில் சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். முடிவில் இலங்கை அணி 89.4 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது.
பாலோ-ஆனில் இருந்து தப்பிப்பதற்கு இலங்கை அணிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 213 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. தொடக்க வீரரான லகிரு உதரா 3 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் டீப் பைன் லெக் திசையில் சரண்ஷ் ஜெயினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான கமில் மிஷாரா 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டாராவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
பசிந்து சூரியபண்டாரா 78 பந்துகளிலும், கமிந்து மெண்டிஸ் 87 பந்துகளிலும் அரை சதம் கடந்தனர். 3-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய ஷார்ட் பாலை கமிந்து மெண்டிஸ் விளாச முயன்ற போது ஸ்கொயர் லெக் திசையில் ஷுப்மன் கில்லின் அற்புதமாக கேட்ச் செய்தார்.
கமிந்து மெண்டிஸ் 92 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 44 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்த நிலையில் மானவ் சுதார் பந்தில் கல்லி திசையில் நின்ற தேவ்தத் படிக்கல்லிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
மட்டையை சுழற்றிய பசிந்து சூரியபண்டாரா 173 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் ரிஷப் பந்த்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லா 6 ரன்களில் சரண்ஷ் ஜெயின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இலங்கை அணி 72.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால் 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. சோனல் தினுஷா 37 பந்துகளில், 7 ரன்களும், கேஷரா நுவந்தா 29 பந்துகளில், 3 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்களை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், சரண்ஷ் ஜெயின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இலங்கை அணி 16 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் எஞ்சிய விக்கெட்களை விரைவாக கைப்பற்றி குறைந்த ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வெற்றி காண்பதில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.