

சென்னை: எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று சுவிட்சர்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆடவர் ஆட்டத்தில் இந்திய அணியின் வேலவன் செந்தில் குமார் 7-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் ராபின் கடோலாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் அபய் சிங் 7-0, 7-5, 7-3 என்ற செட் கணக்கில் லூவாய் ஹபீஸை தோற்கடித்தார். மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங், செலின் வால்சருடன் மோதினார். இதில் அனஹத் சிங் 7-1, 7-4, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா 7-1, 5-7, 7-2, 7-0 என்ற செட் கணக்கில் ஸ்டெல்லா காஃப்மேனை வீழ்த்தினார். ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங் காங் 4-0 என்ற கணக்கில் கொரியாவையும், ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் 4-0 என்ற கணக்கில் ஈரானையும் தோற்கடித்தன.
இன்று (10-ம் தேதி) நடைபெறும் ஆட்டங்களில் ‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - போலந்து அணிகளும், ‘பி’ பிரிவில் உள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகளும், ‘ஏ’ பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா - கொரியா அணிகளும் மோதுகின்றன. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பிரேசிலுடன் நாளை (11ம் தேதி) மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெறுகிறது.