“தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்... இந்தியாவை வெளியேற்றி இருக்கலாம்” - மைக்கேல் வான்

மைக்கேல் வான்

மைக்கேல் வான்

Updated on
2 min read

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 3வது முறையாகக் கோப்பையை வென்றதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மண்டை காய்ந்து போய் தென் ஆப்பிரிக்கா அணிதான் இந்த உலகக்கோப்பையிலேயே முட்டாள் அணி, அவர்கள் நினைத்திருந்தால் இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் என்று உளறிக்கொட்டியுள்ளார்.

இந்தியா 3-வது முறையாகக் கோப்பையைத் தட்டிச்செல்ல தென் ஆப்பிரிக்கா செய்த மடத்தனமே காரணம் என்று சாடியுள்ளார் மைக்கேல் வான். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மே.இ.தீவுகளை வெல்லச் செய்திருந்தால் இந்திய அணி வெளியேற்றப்பட்டிருக்கும்.

ஆனால் முட்டாள்தனமாக தென் ஆப்பிரிக்கா அந்தப் போட்டியில் வென்றதால் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து இங்கிலாந்தை பந்தாடி பிறகு இறுதியில் நியூசிலாந்தையும் பந்தாடி மகுடம் சூடியது. சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை 76 ரன்களில் அதிர்ச்சிகரமாக மண்ணைக்கவ்வச் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு அரையிறுதியைக் கடினப்படுத்தியது.

இதனையடுத்து ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலும் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டி காலிறுதி போல் நாக் அவுட் ஆட்டமாக வாழ்வா சாவா ஆட்டமாக மாறி அதில் சஞ்சு சாம்சனின் அதியற்புத இன்னிங்சினால் வெற்றி கண்டது இந்தியா. இந்நிலையில் மைக்கேல் வான், “இந்த உலகக்கோப்பையில் முட்டாள் அணி எது என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். அது தென் ஆப்பிரிக்காதான்.

சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவுகளை தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற விட்டிருந்தால் இந்திய அணி வெளியே போயிருக்கும். நான் கூறவருவது இதுதான் இந்தியாவை அப்புறப்படுத்தியிருந்தால் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்திருக்கும். மே.இ.தீவுகளை அந்தப் போட்டியில் வீழ்த்தியதன் மூலம் தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டனர்.

இந்தியா அதன் பிறகு ஜிம்பாப்வேயையும் காலிறுதி போன்ற போட்டியில் மே.இ.தீவுகளையும் வீழ்த்தியது. பிறகு இங்கிலாந்தை வீழ்த்தினர். நான் இப்படிச் சொல்வதெல்லாம் போன்று ஒரு போதும் நடக்காது, நடந்ததும் இல்லை, நடக்கப்போவதும் இல்லை. அதாவது நீங்கள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் தொடரின் சிறந்த அணியை முன்னதாகவே வெளியேற்ற வேண்டும் என்பதையே.” என்றார்.

மைக்கேல் வான் பொதுவாகவே இந்தியா வெல்வதை எதிர்மறையாகவே பார்ப்பார். சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் கடக்க வேண்டும், சச்சின் டெண்டுல்கரிடம் அந்த சாதனை இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று சர்ச்சை மிகுந்த கருத்துக்கள் இவருக்கு சர்வ சாதாரணம். ஆனால் இப்படியெல்லாம் உளறிக்கொட்டி இந்திய நெட்டிசன்களிடம் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.

இருந்தாலும் நாக்கை அடக்க மறுக்கிறார் வான். கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரான இத்தகைய கருத்தை, அதாவது வேண்டுமென்றே தோற்க வேண்டும் என்ற கருத்தை ஒரு முன்னாள் வீரர், அதுவும் கிரிக்கெட்டில் பெரிய பிஸ்தா (ஆனால் பொட்டலம்) என்று சொல்லிக் கொள்ளும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் இப்படிக் கூறியிருப்பது கிரிக்கெட்டின் ஓர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்காகும்.

<div class="paragraphs"><p>மைக்கேல் வான்</p></div>
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in