

புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் சிகந்தர் ராசா 43 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். கிளைவ் மடாண்டே 26, பிரையன் பென்னட் 15, டியோன் மையர்ஸ் 11 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் க்வெனா மாபாகா, கார்பின் போஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
154 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக் 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெவால்ட் பிரேவிஸ் 18 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசினார். டேவிட் மில்லர் 16 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 22 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 22 பந்துகளில், 4 சிக்ஸர்களுடன் 31 ரன்களும் சேர்த்தனர்.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில், 21 ரன்களும் ஜார்ஜ் லின்டே 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக கேப்டன் எய்டன் மார்க்ரம் 4, குயிண்டன் டி காக் 0 ரன்களில் வெளியேறி இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் சிகந்தர் ராசா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. லீக் சுற்றிலும் தோல்வியை சந்திக்காத தென் ஆப்பிரிக்க அணி தற்போது சூப்பர் 8 சுற்றிலும் வீழ்த்த முடியாத அணியாக திகழ்ந்து அரை இறுதியில் நுழைகிறது.
அந்த அணி ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. வரும் 4-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கெனவே இழந்திருந்த ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் தொடரில் இருந்து வெளியேறியது.