

ராஜ்கோட்: இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 98 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 123 ரன்களும் ரிவால்டோ முனுசாமி 130 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 107 ரன்களும் விளாசினர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
326 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 49.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 66, இஷான் கிஷன் 53 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி தரப்பில் நகாபயோம்ஸி பீட்டர் 4, ட்ஷெபோ மோரேகி 3, ஜான் போர்டூயின் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2–1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.