

மே.இ.தீவுகளுக்கு எதிரான கிட்டத்தட்ட காலிறுதி போன்ற நாக்-அவுட் ரகப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதியற்புதமாக ஆடி 97 ரன்களை எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். ஷிவம் துபே அந்த 2 பவுண்டரிகள் மூலம் வெற்றிக் கோட்டைக் கடந்தார். இதில் ஷிவம் துபேயின் அந்த 2 பவுண்டரி சஞ்சு சாம்சனின் 97-க்குச் சமம் என்று பேசியுள்ளார் கம்பீர்.
வெளிப்பார்வைக்கு ஷிவம் துபேயின் சிறு பங்களிப்பைக் கூட ஆதரிக்கும் பெரியமனசுக்காரர் என்ற பிம்பம் கம்பீரைப் பற்றிக் கட்டமைக்கப்படலாம். ஆனால் இன்னொரு புறம் சஞ்சுவின் 97 ரன்களை மறைமுகமாக இடித்துரைப்பது அதை எப்படியாவது மட்டம் தட்டுவது என்ற குரூர எண்ணம்தான் உள்ளார்ந்து இருப்பதை உணர்த்துகிறது.
இதே காட்சியை மாற்றிப் பார்ப்போம் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி கம்பீர் அவர் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆடி 97 ரன்களை எடுத்தார். ஆனால் தோனியின் 93 இன்னிங்ஸும் அந்த வெற்றி சிக்ஸும் ஐகானிக் ஆகி மக்கள் மத்தியில் நிரந்தர folklore ஆக, மூலப்படிவமாகப் படிந்து விட்டது.
உண்மையில் கம்பீர் இன்னிங்ஸ்தான் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது, தோனி ஒரு ஸ்டார் என்பதாலும் அவர் கேப்டன் என்பதாலும் அவர் இன்னிங்ஸ் விதந்தோதப்பட்டது. தோனி இன்னிங்ஸ் இல்லையென்றால் கம்பீரின் 97 எடுபட்டிருக்காது என்று யாரும் அப்போது கூறியதாகத் தெரியவில்லை.
இப்போது அதே லாஜிக் படி பார்த்தால் அன்று தோனி பேசப்படாமல் கம்பீர் பேசப்பட்டிருந்தால் வேறு சில குரல்கள் தோனியின் வெற்றி சிக்ஸ் இல்லையென்றால் கம்பீரின் 97 என்பது பேசப்பட்டிருக்காது என்று கூறினால் கம்பீர் ஏற்றுக் கொள்வாரா என்பதே நம் கேள்வி. ஆனால் அப்படியெல்லாம் நடக்காமலேயே தோனி மீது தன் வெறுப்புணர்வை அவ்வப்போது வெளிப்படையாகவும் இடக்கரடக்கலாகவும் கக்கிக் கொண்டிருப்பவர்தான் இந்தக் கம்பீர்.
கம்பீர் அன்று ஷிவம் துபே பற்றிக் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை ஷிவம் துபேயின் அந்த 2 பவுண்டரிகள் சஞ்சுவின் 97 போன்றே முக்கியமானது.” இதுவரை சரி, ஆனால் இதற்குப் பிறகு சொன்னது விஷமத்தனம், “துபே அந்த 2 பவுண்டரிகளை அடிக்கவில்லையெனில் சஞ்சுவின் 97 ரன்கள் பற்றி பேசிக்கூட இருக்க மாட்டீர்கள்.” என்கிறார்.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லையே. சஞ்சுவின் கிரேட் இன்னிங்ஸிற்கு சப்போர்ட் இல்லாமல் போய்விட்டது என்று சஞ்சுவின் இன்னிங்ஸைத்தான் பாராட்டியிருப்பார்கள். அதோடு கம்பீர் மேலும் கூறியது, “பெரிய பங்களிப்புகள் தலைப்புச் செய்திகளாகும். சிறிய பங்களிப்புகள், அதாவது அணியை வெற்றிபெற செய்யும் சிறு பங்களிப்புகள் கோட்டைக் கடப்பது மிக முக்கியம்.” என்கிறார்.
அதாவது பெரிய பங்களிப்பு முடிந்து அத்தகைய பங்களிப்பு செய்த வீரர் ஆட்டமிழந்து விடுகிறார், அதனால் அணி கொஞ்சம் பின்னடைவு காணும் போது அல்லது தோற்றுப்போய் விடும் என்ற நிலையில் ஒரு வீரர் இறங்கி ஒரு அனாயசமான அதிரடி இன்னிங்சை ஆடி அது சிறிய இன்னிங்ஸாக இருந்தாலும் அணி வெற்றி பெற்றால் அது நிச்சயம் விதந்தோதப்படும். பெரிதாகப் பேசப்படும்.
ஆனால் இங்கு சஞ்சு சாம்சன் தன் அதிபுத்திசாலி இன்னிங்ஸ் மூலம் அந்த இடத்திற்குப் போட்டியைக் கொண்டு வந்து வைத்திருக்காவிட்டல் அந்த ஷிவம் துபேயின் 2 பவுண்டரிகளின் மதிப்பு என்னவாக இருந்திருக்கும்? தினேஷ் கார்த்திக் ஒருமுறை வங்கதேசத்திற்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற நிதாஹஸ் டிராபி இறுதியில் தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை 8 பந்துகளில் 29 ரன்கள் விளாசி கோட்டைக் கடக்கச் செய்தார், இதை ஆகச்சிறந்த சிறிய பங்களிப்பு என்று அனைவரும் பாராட்டிப் பேசினர்.
இப்படிப்பட்ட இன்னிங்ஸ்களைத்தான் சிறு பங்களிப்பு கூட அணியை வெற்றி பெறச் செய்யும் என்று பாராட்டுவார்கள், இது வழக்கம். சச்சின் படாதபாடு பட்டு 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து செல்வார் கடைசியில் ஒருவர் வந்து பவுண்டரி அடித்து வெற்றி பெற்றால் சச்சின் இன்னிங்ஸும் அந்த ஒரு பவுண்டரியும் சமம் என்று பேசுவார்களா? இது என்ன அபத்தம்?
அப்படியா ஷிவம் துபேயின் பங்களிப்பு அன்று இருந்தது? 2 பவுண்டரிகள் அடித்தார். இல்லையெனில் சஞ்சு முடித்துக் கொடுக்கப் போகிறார். சிறுபங்களிப்புகள் மிக முக்கியமானவை என்று கூறும்போது தினேஷ் கார்த்திக் ரக பங்களிப்புகள்தான் பெரிதாகப் பேசப்படுமே தவிர ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகளை அதற்கு இணையாகப் பேச முடியுமா? ஒருவர் நின்று சதமெடுத்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வருவார், ஒருவர் வந்து ஒரு பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்து விட்டால் அந்தச் சதமெடுத்த வீரரின் இன்னிங்ஸுக்கு அந்த ஒரு பவுண்டரி சமமாகி விடுமா?
அதாவது கோலியையும் ரோஹித் சர்மாவையும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒழிக்க முயற்சி செய்து முடியவில்லை, அவர்கள் வந்து பிரமாதமாக ஆடி வெற்றிபெற்றுக் கொடுத்தனர். அதுவும் கோலி ஜொலித்துக் கொண்டே இருக்கிறார்.
அதே போல் சஞ்சு சாம்சனை ஓரங்கட்ட எத்தனித்தார்கள் ஆனால் அவர் மிக மிக முக்கியமான லைஃப் சேவிங் இன்னிங்ஸை ஆடிக்கொடுத்து விட்டார், இனி அவரை ஒன்றும் செய்ய முடியாது, இப்படித் தன் கிருத்திருமம் எல்லாம் தவிடுபொடியாவதை கம்பீரினால் தாங்க முடியவில்லை, இது போன்ற கூற்றுக்கள் மூலம் தன் அணித்தேர்வு முடிவுகள் மற்றும் தன் கணிப்பின் சொதப்பல்களை மூடிமறைத்துக் கொள்கிறார் என்றே தோன்றுகிறது.