

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை கருவாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது அவர் பாடிய பக்தி பாடல்களை பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் கேட்டு மகிழ்ந்தனர். பராசக்தி குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘‘பிரதமர் மோடியை சந்திப்பது எப்போதும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். டெல்லியில் நடைபெறும் பொங்கல் விழா, இந்த நாட்டின் ஒற்றுமைக்கான தகவலாக இருக்கும்’’ என்றார்.
ரவி மோகன் கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் ஆளுமை மிகவும் ஈர்க்கும். எங்களை அவர் சிரித்துக் கொண்டே வரவேற்று வாழ்த்தினார். பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ள பராசக்தி திரைப்பட குழுவினருக்கு அழைப்புவிடுத்த அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றி’’ என்றார்.