யு-டர்ன் அடித்த பாக். - இந்தியா உடனான போட்டியில் பங்கேற்க முடிவு | T20 WC 2026

யு-டர்ன் அடித்த பாக். - இந்தியா உடனான போட்டியில் பங்கேற்க முடிவு | T20 WC 2026
Updated on
1 min read

புதுடெல்லி: நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி, போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், 'குரூப் ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் மோதவுள்ளன.

கடந்த வாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களை முன்வைத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப்போவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து ஐசிசி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஃபாஸ் ஷரீஃப் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் உறவுகளை வலுப்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்டு, அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் விளையாடும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 15ஆம் தேதி போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றது. பிப்ரவரி 15 அன்று இரவு 7:00 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in