

துபாய்: 19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களைக் குவித்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின் ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இவரது ஸ்கோரில் 17 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும். பாகிஸ்தானின் ஹம்சா ஜாகூர் 18, உஸ்மான்கான் 35, அகமது ஹுசைன் 56, பர்ஹான் யூசப் 19, முகமது ஷயான் 7, அப்துல் சுபான் 2 ரன்கள் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. ஆனால் தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே 2 ரன்களில் அலி ராசா பந்தில் வீழ்ந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் வேகமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
வைபவ் சூர்யவன்ஷி 26, ஆரோன் ஜார்ஜ் 16, விகான் மல் ஹோத்ரா 7, வேதாந்த் திரிவேதி 9, அபிக்யான் குண்டு 13, கனிஷ்க் சவுகான் 9, கிலான் படேல் 19, ஹெனில் படேல் 6, தீபேஷ் தேவேந்திரன் 36, கிஷன் குமார் சிங் 3 ரன்கள் எடுத்தனர்.
262 ஓவர்களில் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 191 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் சமீர் மின்ஹாஸ் கைப்பற்றினார்.