

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தற்போதைய நிலையில் எல்லா காலத்துக்குமான சிறந்த பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பாராட்டியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 253 ரன்களை குவித்த போதிலும் இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை அச்சுறுத்தல் கொடுத்திருந்தது.
48 பந்துகளில், 105 ரன்களை வேட்டையாடிய 22 வயதான இளம் பேட்ஸ்மேனான ஜேக்கப் பெத்தேல் கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட் ஆன பின்னரே இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது. அதிலும் கடைசி ஓவரை வீசிய ஷிவம் துபே நோபால் ஏதும் வீசிவிடக்கூடாதே என ரசிகர்கள் பயத்துடனே இருக்கையின் நுனிக்கே வந்து போட்டியை பார்வையிட்டனர்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ஓவருக்கு சராசரியாக 13.80 ரன்களே தேவையாக இருந்தன. அப்போது 16-வது ஓவரை வீசிய பும்ரா தனது துல்லியமான யார்க்கர்களை அபாரமாக வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து 18-வது ஓவரை வீசிய அவர், மீண்டும் அற்புதமாக வீசி 6 ரன்களை மட்டுமே வழங்கினார். இந்த 2 ஓவர்களும் இந்திய அணிக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தன.
போட்டி முடிவடைந்தும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது: இந்திய அணியை வீழ்த்துவது கடினம். அவர்களிடம் எல்லா இடங்களில் இருந்தும் பேட்ஸ்மேன்கள் வருகிறார்கள். பந்துகளை துல்லியமாக விளாசக்கூடிய சில வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர். தவறான பந்துகளை வீசினால் சிக்ஸர் அல்லது பவுண்டரி விளாசிவிடுகிறார்கள்.
துரதிருஷ்டவசமாக நாங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியாமல் போனது. அதுவும் சில கேட்ச்களை தவறவிட்டதும் எங்களை சற்று பாதித்தது. ஜஸ்பிரீத் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர். தற்போதைய நிலையில் அவர், எல்லா காலத்துக்குமான சிறந்த பந்துவீச்சாளர்.
பும்ரா நீண்ட காலமாகவே சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக ஃபீல்டிங்கும் செய்தனர், அக்சர் படேல் என்னை ஆட்டமிழக்கச் செய்த கேட்ச் நான் பார்த்த சிறந்த கேட்ச்களில் ஒன்று. அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் நாங்கள் செயல்பட்டவிதத்தை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் ஒரு கேப்டனாக இதைவிட அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த உலகக் கோப்பை பயணம் எங்களுக்கு அற்புதமாக இருந்தது.
நான் முன்பு கூறியது போல், நாங்கள் ஒருபோதும் ஆட்டங்களில் இருந்து வெளியேறவில்லை. அது இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைசி ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். அணியில் உள்ள வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களும் தங்களைப் பற்றி மிகவும் பெருமைப்பட வேண்டும்.
ஜேக்கப் பெத்தேல் அற்புதமான வீரர். இந்தியாவுக்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் அதிக அழுத்தமான சூழ்நிலையில் அவர், விளையாடிய விதம் மிகவும் அற்புதமானது. இங்கிலாந்து அணியில் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எதிர்காலத்தில் அவருடன் நிறைய நேரம் செலவிட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்களது ஆட்டத்தை விமர்சிப்பார்கள், இப்போது பாராட்டு கிடைப்பது சிறந்த விஷயம். வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை நாங்கள் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக ரன்கள் குவித்தோம். எங்கள் அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் தொடருவதற்கு நான் 125 சதவீதம் ஆதரவு கொடுப்பேன்.
அவர், என் வாழ்க்கையில் நான் சந்தித்த சிறந்த பயிற்சியாளர். அனைவரும் அவரை மதிக்கிறார்கள். அவர், வீரராக செய்தவை அபாரம், அதை பயிற்சியிலும் கொண்டு வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் இங்கிலாந்து கிரிக்கெட்டை சிறப்பாக மாற்றியுள்ளார். இவ்வாறு ஹாரி புரூக் கூறினார்.
அரை இறுதியை கண்டுகளித்த 65.2 மில்லியன் பார்வையார்கள் அகமதாபாத் ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி ஆட்டத்தை ஜியோஸ்டார் தளத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 65.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், “இந்தியா - இங்கிலாந்து மோதிய அரையிறுதி போட்டி டிஜிட்டல் பார்வையாளர்களில் உலகச் சாதனையை முறியடித்துள்ளது. இந்த போட்டியை ஜியோஸ்டார் தளத்தில் ஒரே நேரத்தில் 65.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது உலகில் எந்த நேரடி நிகழ்ச்சிக்கும் கிடைக்காத அதிக டிஜிட்டல் பார்வையாளர் எண்ணிக்கை ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.